செயற்படாத கட்டமைப்புகள்:
முறையான சீர்திருத்தங்கள் வேண்டும்
பேராசிரியர் அபூபக்கர் ரமீஸ்
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் பயின்ற 15 வயது மாணவி ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இலங்கை மக்களின் கவனத்தை ஈர்த்த மேற்படி தற்கொலை, தற்பொழுது நாட்டின் பேசுபொருளாக மாறியுள்ளது. அது குறித்து சம்பந்தப்பட்ட கட்டமைப்புகள் செயற்படத் தவறியுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
மாணவியின் தற்கொலைக்கான காரணங்கள் பின்வருமாறு: (1) கடந்த ஐப்பசி மாதம் அந்த மாணவியின் கணிதவியல் ஆசிரியர், அவருடன் முறைதவறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அந்த மாணவி கடுமையான உளவூறுபாட்டுக்கு உள்ளாகியிருந்தார். (2) மாணவியின் தனியார் கல்விநிலைய உரிமையாளர் முழு வகுப்பின் முன்னிலையில் வைத்து அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் அவரது உளவூறுபாடு மேலும் மோசமடைந்தது.
ஆசிரியர் முறைதவறி நடந்தது பற்றி 2024 திசம்பர் 8ம் திகதி பம்பலப்பிட்டி காவல் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதாகவும், குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் 2025 சனவரி 8ம் திகதி கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிகிறது. எனினும், குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர், பயணத்தடையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றில் வழக்கு தொடர்கிறது.
2025 ஏப்பிரில் மாதம் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, பல்வேறு தரப்புகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் 2025 மே 8ம் திகதி சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு வெளியே அணிதிரண்டு, ஆர்ப்பாட்டம் செய்து, பலியான மாணவிக்கு நீதிகோரினார்கள். குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் இடைநிறுத்தப்பட வேண்டும், பாதகம் புரிந்தவரைப் பாதுகாத்த குற்றச்சாட்டுக்கு உள்ளான கல்லூரி அதிபர் அதற்குப் பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என்று கோரினார்கள்.
நாடாளுமன்றத்திலும் இது காரசாரமான விவாதங்களை மூட்டியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரினார்கள். அதன் பெறுபேறாக, ஓர் ஒழுக்காற்று விசாரணையை எதிர்பார்த்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் புத்தளம் ஸாகிரா கல்லூரிக்கு உடனடியாக இடமாற்றம் செயப்பட்டார்.
ஆயினும், புத்தளத்து மாணவர்களும், பெற்றோரும், மக்கள் சிலரும் ஸாகிரா கல்லூரிக்கு வெளியே அணிதிரண்டு, மேற்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியரை அக்கல்லூரிக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பிரச்சனை தீவிரமடைந்ததன் விளைவாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர், ஒழுக்காற்று விசாரணையை எதிர்பார்த்து, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
சம்பந்தப்பட்ட கட்டமைப்புகள் செயற்படத் தவறியதை மாத்திரமன்றி, ஒரு மாணவிமீது பாலியல்வாரியாகவும், பால்மைவாரியாகவும் வன்முறை புரியப்பட்டதையும் இந்நிகழ்வு குறித்து நிற்கிறது. எமக்குக் கிடைக்கும் அறிக்கைகளின்படி, பாதகம் புரிந்தவர்மீது நடவடிக்கை எடுக்கத்தவறிய பற்பல கட்டமைப்புகள் அல்லது தரப்புகள் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி நிர்வாகம்
சம்பந்தப்பட்ட ஆசிரியர் முறைதவறி நடந்ததது பற்றிய குற்றச்சாட்டு கிடைத்த பின்னர் கல்லூரி அதிபரும், நிர்வாகிகளும் அந்த முறைப்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கவும், அந்த மாணவியைப் பாதுகாக்கவும் தவறியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
2024 அக்டோபர் மாதம் மாணவியின் பெற்றோர் அதிபரிடம் முறையிட்டும் கூட, அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், வேண்டுமென்றே அந்த முறைப்பாட்டை அவர் புறக்கணித்தார் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் அவர் ஒரு நேரிய, திறந்தமனது படைத்த அதிபராய் விளங்கியிருந்தால், ஒரு முதற்கட்ட ஒழுக்காற்று விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கவும், பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கவும் முடியும்.
ஓர் அதிபராக, துணைவேந்தராக, பணிப்பாளராக, தவிசாளராக, அதாவது பொதுவாக கட்டமைப்புகளின் தலைவர்களாக விளங்குவோர் தத்தம் கட்டமைப்பினுள் ஏதேனும் பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக முறைப்பாடு கிடைக்குமிடத்து, ஒரு முதற்கட்ட ஒழுக்காற்று விசாரணையை நடத்தக் கடமைப்பட்டவர்கள்.
அதன்பிறகு, முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்களை அடிப்படையாகக் கொண்டு, பார்த்த மாத்திரத்தில் மெய்யாகத் தென்படும் சான்று கிடைத்தால், அரசாங்க தாபன விதிக்கோவைகளின்படி, குற்றம்சாட்டப்பட்டவரை உடனடியாக இடம்மாற்ற அல்லது இடைநிறுத்த நடவடிக்கை எடுத்து, சட்டத்தை நடைமுறைப்படுத்த அவர்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
அதேவேளை தத்தம் மேலதிகார பீடங்கள், காவல்துறை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை போன்ற மற்றும் பிற கட்டமைப்புகளுக்கும் அவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், மேற்படி மாணவியின் பெற்றோர் முன்வைத்த முறைப்பாட்டை கல்லூரி அதிபரும், நிர்வாகிகளும் அறவே ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். ஆதலால், பாதகம் புரிந்தவரைப் பாதுகாத்த குற்றச்சாட்டு கல்லூரி அதிபர்மீது சுமத்தப்பட்டது.
கல்வி அமைச்சு
கல்வி அமைச்ச்சு அதற்குக் கீழ்ப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களின் அல்லது பள்ளிக்கூடங்களின் தேவைகள், முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க நியாயம் உண்டு. பள்ளிக்கூடத்தினுள் நடப்பதை கல்வி அமைச்சுக்கு அறிவித்தாலன்றி, அல்லது வேறு விதமாக அதன் கவனத்துக்கு கொண்டு வந்தாலன்றி, அதை அது அறியாது போக்கக்கூடும்.
கல்வி அமைச்சு மேற்படி விடயம் குறித்து நடவடிக்கை எடுக்கத் தாமதித்தாகவும், போதியளவு பதில்வினை ஆற்றத் தவறியதாகவும் சாடப்பட்டுள்ளது. அது தெளிவாகவே புரிகிறது: அதாவது பாலியல் தொந்தரவு குறித்து 2024 திசம்பர் மாதம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது; 2025 சனவரி மாதம் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார்; எனினும் 2025 மே 8ம் திகதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க நேர்ந்தது; 2025 மே 8ம் திகதி அந்த ஆசிரியரை புத்தளம் ஸாகிரா கல்லூரிக்கு அமைச்சு இடம்மாற்றியது.
பாலியல் முறைகேடு போன்ற ஒரு குற்றச்செயலைப் புரிந்தவர் என்று கொள்ளப்படுபவர்மீது, இலங்கை குற்றச் சட்டக் கோவைக்கமைய, மிகவும் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வாதிக்கப்படுகிறது. எனவே, அவரை இடம்மாற்றுவது மட்டும் போதாது. ஆயினும், புத்தளம் ஸாகிரா கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடந்தபடியால், ஓர் ஒழுக்காற்று விசாரணையை எதிர்பார்த்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை, கல்வி அமைச்சு கட்டாய விடுப்பில் அனுப்ப நேர்ந்தது.
அதேவேளை கட்டமைப்புவாரியான குறைபாடுகளை ஒப்புக்கொண்ட கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியா, வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வாக்குறுதி அளித்தமை நிறைவு தருகிறது.
பம்பலப்பிட்டி காவல்துறை
ஒரு முறைப்பாடு கிடைத்தவுடன் விசாரணை மேற்கொள்வது காவல்துறையின் நியம நடைமுறை. எனினும், மேற்படி முறைப்பாடு குறித்து மிகவும் தீர்க்கமான முறையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டிக்கப்பட்டுள்ளது.
மாணவியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியது குறித்து 2024 திசம்பர் 8ம் திகதி முறைப்பாடு முன்வைத்தும் கூட, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் 2025 சனவரி 8ம் திகதியே கைதுசெய்யப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறை இரண்டு மாதகாலம் எடுத்துக்கொண்டது தெரிகிறது. பிறகு பயணத்தடையுடன் கூடிய பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
காவல்துறை ஏதோ வன்மம்கொண்டு இந்த வழக்கினைப் பற்றி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு நேரடியாக அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நியம நடைமுறையில் இங்கு ஒரு வெளி விழுந்தமை தெளிவாகத் தெரிகிறது.
கல்லூரி அதிபரும் கல்வி அமைச்சும் செயற்படத் தவறியதை இவை அனைத்தும் உணர்த்துகின்றன. ஆதலால் அவை இரண்டும் பெரிதும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. காவல்துறையினரின் நெகிழ்வுப் போக்கும், அவர்கள் தாமாகவே சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளத் தவறியதும், கட்டமைப்புவாரியான குறைபாடுகளும் இத்தால் வெளிப்படுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு முதன்மை அளித்து, துறைநெறிமதி உதவி உட்பட, உடனடி உளநலத் துணை புரியவேண்டிய தருணம் இது. இக்கட்டமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளை இனி அரசாங்கம் கருத்தூன்றிக் கவனத்தில் கொண்டு, அவற்றைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கட்டமைப்பு இத்தகைய உளவூறுபாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மாணவிகள் அனைவரையும் காக்க வன்மையான பதுகாப்புகளை ஏற்படுத்தும் அதேவேளை, மேற்படி குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய தருணம் இது.
Prof. Aboobacker Rameez, Inaction of Institutions: A Call for Systematic Reforms,
Colombo Telegraph, 2025-05-18, translated by Mani Velupillai, 2025-05-19.
No comments:
Post a Comment