வழக்குரை (5)

 

சாக்கிரத்தீஸ் 

(பொ. ஊ. மு. 469-399)

 

 


பிளேட்டோ

(பொ. ஊ. மு. 427-347)


சாக்கிரத்தீசின் வழக்குரை (5)

(பிளேட்டோவின் பதிவு)

உண்மை இதுவே, பெரியோர்களே! சிறந்த நிலைப்பாடாகத் தனக்குத்  தென்படுவதால் அல்லது தனக்கு இடப்பட்ட ஆணைகளுக்குப் பணிந்து ஒரு நிலைப்பாட்டை ஒருவன் எடுத்துக்கொண்டவுடன், மானத்துக்கு மேலாக  இறப்பை அல்லது வேறெதையும் பொருட்படுத்தாமல், அதே நிலைப்பாட்டில் நின்றுபிடித்து ஆபத்தை எதிர்கொள்ள அவன் கடமைப்பட்டவன் என்றே நான் நம்புகிறேன்.

 

எனக்கு ஆணையிட நீங்கள் தேர்ந்தெடுத்த படையதிகாரிகள் பொதிதேயா, அம்விபொலிஸ், தீலியம் ஆகிய இடங்களில் என்னைக் களமிறக்கியபொழுது, வேறெவரையும் போலவே எனக்குரிய இடத்தில் இறப்பை எதிர்நோக்கி நான் நிலைகொண்டிருந்தேன். அதன் பிறகு என்னையும் பிறரையும் ஆராய்ந்து மெய்ஞான வாழ்வில் ஈடுபடும் கடமையில் கடவுள் என்னை அமர்த்தியதாக நான் நினைக்கிறேன், நம்புகிறேன். ஆதலால், பெரியோர்களே, இவ்விரு சூழ்நிலைகளிலும் நான் இறப்பையோ வேறெந்த ஆபத்தையோ எதிர்நோக்க அஞ்சி நிலைபிறழ்ந்திருந்தால், எனக்கிட்ட பணியை நான் உதறித்தள்ளியிருந்தால், நான் படுமோசமான முறையில் முன்பின்முரணாக நடந்துகொண்டவன் ஆவேன். உண்மையில் அது  படுமோசமான முரண்பாடாகும். அப்புறம் கடவுளரில் நான் நம்பிக்கை வைக்காததற்காகவும், இறைவாக்கிற்குப் பணியாததற்காகவும், இறப்பை எதிர்நோக்க அஞ்சியதற்காகவும், ஞானமற்றவனாக இருக்கும் என்னை ஞானவான் என்று கருதியதற்காகவும் நீதிமன்றில் வெளிப்படும்படி எனக்கு மிகவும் நீதியான முறையில் அழைப்பாணை இட்டிருக்க முடியும் அல்லவா?

 

பெரியோர்களே, ஒருவர் இறப்புக்கு அஞ்சுவது என்பது அவர் ஞானமற்றவராக இருக்கும் அதேவேளை தன்னை இன்னொரு வகையில் ஞானவான் என்று கருதுவதற்கு நிகராகும் என்று உங்களிடம் நான் கூற விரும்புகிறேன். தான் அறியாததை அவர் அறிந்திருப்பதாக எண்ணுவதற்கு அது நிகராகும் அல்லவா? உண்மையில் இறப்பு என்பது ஒருவருக்கு நேரக்கூடிய மாபெரும் அருட்பேறு ஆகாதா என்பது எவருக்குமே தெரியாது. ஆனாலும் அது மாபெரும் கேடே என்பதை உறுதியாக அறிந்தவர்கள் போல் மக்கள் அதற்கு அஞ்சி நடுங்குகிறார்கள். அறியாததை அறிந்ததாகக் கருதும் இந்த அறியாமையே பாரிய குற்றமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று நான் உறுதியாகக் கூறுவேன். இதனையே, பெரியோர்களே, ஏனைய மானுடருக்கு மேலாக நான் துய்க்கும் அனுகூலத்தின் அளவாகவும் தன்மையாகவும் கருதுகிறேன். நான் எந்த வகையிலேனும் எனது அயலவரை விட ஞானம் மிகுந்தவன் என்று வலியுறுத்துவேன் என்றால், அது இந்த வகையிலேயே: அதாவது இறப்பை அடுத்து நேர்வது என்ன என்பது பற்றிய மெய்யறிவு படைத்தவனல்ல நான்; அதேவேளை நான் அத்தகைய அறிவு படைத்தவனல்ல என்பதை உணர்ந்துகொண்டுள்ளேன். ஆனாலும் எனது மேலவர் கடவுளாயினும், மனிதராயினும், அவருக்குத் தவறிழைப்பதும், அவருக்குப் பணியமறுப்பதும் தீய, ஈனச் செயல்களாகும். ஆதலால், பெரியோர்களே, எனது அறிவு எத்தகையதாயினும் ஆகட்டும்; ஆனால் நான் தீயவை என்று அறிந்த தீயவற்றை விட, உண்மையிலேயே ஓர் அருட்பேறாக அமையக்கூடிய ஏதோ ஒன்றுக்கு ஒருபொழுதும் நான் அதிகம் அஞ்சப்போவதில்லை, அதை அதிகம் வெறுக்கப்போவதில்லை.   

 

ஒன்றில் இந்த நீதிமன்றின் முன் நான் வெளிப்பட்டிருக்கவே கூடாது, அல்லது, இங்கு நான் வெளிப்பட்டுள்ளபடியால், நான் சாகடிக்கப்பட வேண்டும், ஏனெனில் நான் தப்பிய கையோடு உங்கள் புதல்வர்கள் சாக்கிரத்தீசின் போதனைகளின்படி செயற்பட்டு முற்றிலும் ஒழுக்கம் கெட்டவர்களாக மாறிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ள அனைட்டசைப் பொருட்படுத்தாமல் என்னை நீங்கள் விடுதலை செய்வதாக வைத்துக்கொள்வோம். அதன்படி, "சாக்கிரத்தீஸ், நீ இந்த அறிவுத் தேட்டத்தில் உனது பொழுதைக் கழிப்பதைக் கைவிடவும் வேண்டும்; மெய்யியற் போதனையை நிறுத்தவும் வேண்டும் என்று ஒரேயொரு நிபந்தனை விதித்து நாங்கள் இந்தத் தடவை அனைட்டசைப் புறக்கணித்து உன்னை விடுதலை செய்கிறோம். நீ தொடர்ந்தும் அதே வழியில் செல்ல நாங்கள் உன்னை மடக்கிப்பிடிதால், நீ சாகடிக்கப்படுவாய்" என்று நீங்கள் என்னிடம் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.      

 

சரி, நான் கூறியவாறு, அப்படிப்பட்ட நியதிகளின்படி என்னை விடுதலைசெய்ய நீங்கள் முன்வருவதாக வைத்துக்கொண்டால், நான் இப்படி விடையளிக்க வேண்டியுள்ளது: பெரியோர்களே, நான் மிகவும் நன்றியுணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட உங்கள் பணிவிடையாளன். ஆனாலும் உங்களைக் காட்டிலும் கடவுளுக்கே நான் அதிகம் பணிந்தொழுகக் கடமைப்பட்டவன்.

 

எனது மூச்சும் வலுவும் நிலைக்கும்வரை என் மெய்யியற் போதனையை நான் நிறுத்தப் போவதில்லை; உங்களைச் சிந்திக்க உந்துவதை நான் நிறுத்தப் போவதில்லை; நான் எதிர்கொள்ளும் அனைவருக்கும் உண்மையைத் துலக்குவதை நான் நிறுத்தப் போவதில்லை. எனது வாடிக்கைப்படி இப்படி நான் தொடர்ந்து வினவப்போகிறேன்:

 

"என் இனிய நன்பனே, நீ ஓர் அதென்சு மாநகரவாசி; நீ உலகிலேயே மிகவும் மகத்தான மாநகரத்தைச் சேர்ந்தவன்; நீ ஞானத்துக்கும் வலிமைக்கும் மிகவும் புகழ்பெற்ற மாநகரத்தைச் சேர்ந்தவன். நீ இயன்றளவு பணம் ஈட்டிக்கொள்வதில் புலனைச் செலுத்துவது குறித்து வெட்கப்படவில்லையா? பெருமையும் மானமும் ஈட்டுவதில் நாட்டம் கொள்ளாமல், உண்மையிலும் நியாயவிளக்கத்திலும் ஆன்மீகச் செம்மையிலும் புலனைச் செலுத்தாமல் வாழ்வது குறித்து நீ வெட்கப்படவில்லையா?" என்று நான் தொடர்ந்து வினவப்போகிறேன்.

 

உங்களுள் எவராவது என்னுடன் பிணக்குப்பட்டால், அத்தகைய சங்கதிகளில் தமக்கு அக்கறை இருப்பதாக மார்தட்டினால், அவரை நான் கையோடு போக விடமாட்டேன்; அவரை விட்டு நான் புறப்படமாட்டேன். மாறாக, அவரிடம் நான் வினாத்தொடுப்பேன்; அவரை ஆராய்வேன்; அவரைப் பரிசீலிப்பேன். அப்படி அவர் மார்தட்டியும் கூட, அவர் உண்மையில் நன்னலத்தை நோக்கி  முன்னேறவில்லை என்று எனக்குத் தென்பட்டால், அவர் வெறும் அற்ப விடயங்களில் புலனைச் செலுத்தி, மிகமிக முக்கிய விடயத்தைப் புறக்கணித்ததாக அவரை நான் கடிந்துகொள்வேன். இளையோரோ, மூத்தோரோ, குடிமக்களோ, பிறநாட்டவரோ... நான் எதிர்கொள்ளும் எவரிடமும் அப்படியே நடந்துகொள்வேன். என்னுடன் நெருங்கி உறவுகொண்ட சககுடிமக்களே, குறிப்பாக உங்களுடன் நான் அப்படியே நடந்துகொள்வேன். எனது கடவுள் எனக்கிட்ட ஆணை இதுவே என்று உங்களிடம் நான் உறுதிகூறுகிறேன். நான் கடவுளுக்குப் புரியும் பணிவிடையைக் காட்டிலும் சிறந்த நன்னலம் என்றுமே இந்த மாநகரத்துக்கு வாய்த்ததில்லை என்பது எனது நம்பிக்கை. உங்கள் உடலையும், உடைமையையும் விடுத்து உங்கள் ஆன்மநலத்துக்கு அதிமுதன்மை அளிக்கும்படி உங்களை, இளையோரை, மூத்தோரைத் தூண்டுவதில் எனது நேரம் முழுவதையும் நான் கழித்து வருகிறேன். "செல்வம் என்பது ஆளுக்கும் அரசுக்கும் நன்னலம் பயக்காது; நன்னலமே செல்வம் பயக்கும்; நன்னலம், மற்றெல்லா அருட்பேறுகளையும் அளிக்கும்" என்றெல்லாம் நான் முழங்கித் திரிவேன்.

 

இனி, இந்தச் செய்தியை விடுப்பதன் மூலம் நான் இளையோரின் உள்ளத்தைக் கெடுக்கிறேன் என்றால், இது கேடு விளைவிக்கும் செய்தியாகவே தென்படும். ஆனாலும் எனது செய்தி இதுவல்ல, அது வேறு செய்தி என்று ஒருவர் கூறினால், அவர் விழலளக்கிறார் என்பதே கருத்து. ஆதலால், பெரியோர்களே, நான் கூறுவது இதுவே: நீங்கள் அனைட்டஸ் கூறுவதைக் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன, நீங்கள் என்னை விடுதலை செய்தால் என்ன, செய்யாவிட்டால் என்ன, நீங்கள் விரும்பியபடி செய்யலாம். நான் நூறு தடவைகள் இறந்தாலும் கூட எனது போக்கை மாற்றமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா!

 

அமைதி, பெரியோர்களே, அமைதி! குறுக்கீடின்றி எனது பேச்சைக் கேட்கும்படி நான் வேண்டிக்கொண்டதை நினைவில் வைத்திருக்கவும். தவிரவும், எனது பேச்சைக் கேட்பது உங்களுக்கு நன்மை பயக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

 

நான் உங்களுக்கு இன்னொரு சங்கதி சொல்லப் போகிறேன். அது ஓர் எதிர்மறைப் புயலைக் கிளப்பக் கூடும். ஆனாலும் தயவுசெய்து பொறுமை காக்கவும். நான் எப்படிப்பட்டவன் என்று மார்தட்டுகிறேனோ அப்படிப்பட்டவன் என்றால், அதற்காக எனக்கு நீங்கள் இறப்புத் தண்டனை விதித்தால், என்னைவிட உங்களுக்கே நீங்கள் அதிகம் தீங்கு புரிந்தோர் ஆகுவீர்கள் என்பதை உங்களிடம் நான் உறுதிபடக் கூறுகிறேன். மெலிட்டசோ, அனைட்டசோ எனக்கு அறவே தீங்கெதுவும் புரிய முடியாது. அதற்கான வலு அவர்களிடம் கிடையாது. காரணம், ஒரு மோசமானவரால் ஒரு சிறந்தவருக்குத் தீங்கு விளைவதை, கடவுள் வகுத்த விதி அனுமதிக்காது என்று நான் நம்புகிறேன்.

 

என்மீது குற்றஞ்சுமத்தியவர் எனக்கு இறப்புத் தண்டனை விதிக்கவோ, என்னை நாடுகடத்தவோ, எனது குடியுரிமைகளைப் பறிக்கவோ வகைசெய்யக் கூடும் என்பதில் ஐயமில்லை. அவற்றை அவரும் மற்றவர்களும் பெருங்கேடுகள் என்று கருதக்கூடும் என்று நான் துணிந்து கூறுகிறேன். எனினும் நான் அவற்றைப் பெருங்கேடுகள் என்று கருதவில்லை. அவை பெருங்கேடுகள் என்பதே அவரது படுமோசமான நிலைப்பாடு; அதாவது ஓர் அப்பாவிக்கு இறப்புத் தண்டனை விதிக்க அவர் இப்பொழுது மேற்கொள்ளும் முயற்சியை விட அது படுமோசமான நிலைப்பாடு.  

 

இதுவரை நான் எனக்காகவே மன்றாடுகிறேன் என்று எவரும் எண்ணக்கூடும். உண்மை எதிர்மாறானது. நான் உங்களுக்காகவே மன்றாடுகிறேன். என்னைத் தண்டிப்பதன் மூலம் கடவுளின் கொடையைத் துர்ப்பிரயோகம் செய்வதிலிருந்து உங்களைத் தடுத்தாட்கொள்வதற்காகவே நான் மன்றாடுகிறேன். நீங்கள் எனக்கு இறப்புத் தண்டனை விதித்தால், எனது இடத்தை நிரப்புவதற்கு எவரையும் எளிதில் நீங்கள் கண்டறிய மாட்டீர்கள்.

 

ஆதலால், பெரியோர்களே, இந்த மாநகரத்தை ஓர் உயர்குலக் குதிரையாகக் கணித்து, அதன் மாபெரும் பருப்பத்தினால் அது சோம்பித்திரிய முற்படுவதாக எண்ணி, அதனைத் தீண்டி ஊக்குவிக்கும் ஈ எனும் வண்ணம் என்னை இந்த மாநகரத்துக்கென்றே கடவுள் நியமித்துள்ளார் என்று கூறுவது சற்று  வேடிக்கையாகத் தென்பட்டாலும் கூட, அது முற்றிலும் உண்மையே. அத்தகைய ஓர் ஈயின் பணியை மேற்கொள்ளவே கடவுள் என்னை இந்த மாநகரத்துக்கு நியமித்துள்ளார் என்று எனக்குத் தென்படுகிறது. நாள் முழுவதும் இங்கும், அங்கும், எங்கும் தரித்து, உங்கள் ஒவ்வொருவரையும் எழுப்பி, தூண்டி, கடிந்துகொள்வதை நான் நிறுத்தப் போவதில்லை. பெரியோர்களே, என்னைப் போல் இன்னொருவரை நீங்கள் கண்டறிதல் எளிதல்ல. நீங்கள் எனது புத்திமதியை ஏற்றால், என் உயிரைப் பறிக்கமாட்டீர்கள். எவ்வாறாயினும், எனக்குப் பதிலாக உங்களைப் பராமரிக்க வேறொருவரைக் கடவுள் அனுப்பி வைத்தாலொழிய, நீங்கள் விரைவில் அருண்டெழுந்து, ஆக்கினைப்பட்டு, அனைட்டசின் புத்திமதியை ஏற்றுக்கொண்டு, என்னை ஒரே அடியில் தீர்த்துக்கட்டிவிட்டு, எஞ்சிய வாழ்நாள் முழுவதும் தூங்கி வழிவீர்கள் என்றே நான் ஐயுறுகிறேன்.    

 

கடவுளின் கொடை எனும் வண்ணம் இந்த மாநகரத்துக்கு அனுப்பி வைக்கத்தக்க ஆள்தான் நான் என்பதை உண்மையில் நீங்கள் ஐயப்பட்டால், அதை இப்படி நோக்கி நீங்கள் ஐயந்தெளியலாம்: நான் இத்தனை ஆண்டுகளாக எனது சொந்த அலுவல்களைப் புறக்கணித்து, எனது குடும்பம் புறக்கணிப்புக்கு உள்ளாகும் இழிவைச் சகித்துக்கொண்டு, எப்பொழுதுமே உங்களுக்காகப் பாடுபட வேண்டியிருப்பது, ஒரு தந்தையைப் போலவோ தமையனைப் போலவோ உங்கள் ஒவ்வொருவரையும் தனிப்படச் சந்தித்து, உங்கள் சிந்தையை நன்னலம் நோக்கிச் செலுத்த வேண்டியிருப்பது ஓர் இயல்பான சங்கதியாகத் தென்படுகிறதா? அதில் நான் ஏதேனும் இன்பம் துய்த்திருந்தால், அல்லது எனது நற்பணிக்கு கட்டணம் செலுத்தப்பட்டிருந்தால், அப்படி நான் நடந்ததற்கு ஒரு நியாயவிளக்கம் கிடைத்திருக்கும். ஆனால், என்மீது குற்றஞ்சுமத்தியோர் வெட்கமின்றி மற்றெல்லா வகைப்பட்ட குற்றச்சாட்டுகளையும் என்மீது சுமத்தினாலும் கூட, நான் எப்பொழுதாவது, எவரிடமாவது கட்டணம் கேட்டதாகவோ அறவிட்டதாகவோ எச்சான்று கொண்டும் பாசாங்குசெய்ய அவர்கள் திமிர் கொண்டதில்லை. எனது கூற்று உண்மையே என்பதை எண்பிக்க என்னால் முன்வைக்கக்கூடிய உறுதியான சான்று எனது வறுமையே என்று நினைக்கிறேன்.   

 

இப்படி எல்லாம் நான் சுற்றித்திரிந்து, குடிமக்களின் தனிப்பட்ட அலுவல்களில் தலையிட்டு, அவர்களுக்குப் புத்திமதி கூறவேண்டியிருந்தும் கூட, என்றுமே உங்கள் அவைமுன் வெளிப்பட்டு, அரச அலுவல்களைக் கவனத்தில் கொண்டு, உங்களை விளித்துப் புத்திமதி கூறத் துணியாதது உங்களுக்கு வினோதமாகத் தென்படலாம். அதற்கான காரணம் ஏற்கெனவே பல தடவைகள் நீங்கள் கேட்டது தான்; அடிக்கடி நான் கூற நீங்கள் கேட்டது தான்; தனது குற்றச்சாட்டில் அதை ஏளனம் செய்வது தகும் என்று மெலிட்டஸ் நினைத்திருக்கிறார். அதாவது, நான் ஒரு தெய்வ அனுபவத்துக்கு, தெய்வீக அனுபவத்துக்கு உட்பட்டுச் செயற்படுபவன். எனது பாலியப் பராயத்தில் அது தொடங்கியது. எனக்கு ஒருவகையான குரல் கேட்கிறது. என்றுமே நான் செய்ய எண்ணுவதை செய்யாவாறு தடுக்கும் குரலாகவே அது எனக்குக் கேட்கிறது. என்றுமே என்னை அது தூண்டியது கிடையாது. பொது வாழ்வினுள் புகாவாறு என்னைத் தடுப்பதும் அதுவே. அது மிகவும் நல்லதும் கூட. ஏனெனில், நான் நீண்ட காலத்துக்கு முன்னரே அரசியலில் ஈடுபட்டிருந்தால், என்னால் உங்களுக்கோ எனக்கோ எந்த நன்மையும் விளைய வாய்ப்பின்றி அப்பொழுதே என் உயிர் போயிருக்கும் என்று கருதுகிறேன்.

 

உங்களுக்கு நான் உண்மையைக் கூறினால், தயவுசெய்து குறைவிளங்க வேண்டாம். இப்பூவுலகில் உங்களையோ வேறு குடியாட்சி அமைப்பு எதையுமோ உளச்சான்றுக்கமைந்து எதிர்க்கும் எவரும், தனது சொந்த அரசில் பெருந்தொகையான பிழைகளும், சட்டமீறல்களும் இடம்பெறுவதை அடியோடு தடுக்கும் எவரும் உயிர்தப்புவது இயலாது.  உண்மையான நீதிமான் எவரும் குறுகிய காலத்துக்காவது உயிர்தப்ப எண்ணினால், அரசியலை விடுத்து, தானும் தன்பாடுமாக இருக்க வேண்டும்.


நான் கூறியதற்கு உருப்படியான சான்றுகளை முன்வைப்பேன்; வெறுங் கோட்பாடுகளை அல்ல, உங்களால் பெரிதும் புரிந்துகொள்ளக்கூடிய விவரங்களை முன்வைப்பேன். என்றுமே நான் சாகப்பயந்து தவறான முறையில் எந்த அதிகாரபீடத்துக்கும் அடிபணிய மாட்டேன்; என் உயிர் போனாலும் அடிபணிய மறுப்பேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் நான் மெய்யாகப் பட்டறிந்தவற்றை உங்களுக்கு எடுத்துரைக்கும்பொழுது, அவற்றைச் செவிமடுக்கவும். அது நீதிமன்றுகளில் நீங்கள் அடிக்கடி கேட்பது போன்ற கதை; கேட்டுச் சலித்த கதை; ஆனாலும் உண்மை: 

 

பெரியோர்களே, நான் ஒரு தடவை மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டபொழுது மட்டுமே எங்கள் மாநகரத்தில் பதவி வகித்தேன். கடல்மோதலில் உயிரிழந்தவர்களைக் காப்பாற்றத் தவறிய பத்து தளபதிகளை ஒட்டுமொத்தமாக விசாரணை செய்யவேண்டும் என்று நீங்கள் முடிவுசெய்தபொழுது, எங்கள் குழுமம் நிறைவேற்று பீடமாகச் செயற்பட நேர்ந்தது. அத்தகைய விசாரணை சட்டவிரோதம் என்பதை பிறகு நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டீர்கள். அப்பொழுது நிறைவேற்று பீட உறுப்பினர்களுள் நான் மட்டுமே, நீங்கள் அரசியல்யாப்புக்கு மாறாகச் செயற்படக் கூடாது என்று வலியுறுத்தி, அந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தேன். உங்கள் தலைவர்கள் அனைவரும் என்னைக் கைதுசெய்து கண்டிப்பதற்குத் தயாராக இருந்தும் கூட, அப்படியே செய்யும்படி நீங்கள் அனைவரும் உரத்த குரலில் அவர்களை ஏவியும் கூட, நான் சிறைக்கோ சாவுக்கோ அஞ்சி உங்கள் தவறான முடிபை ஆதரிப்பதை விடுத்து, சட்டத்தின் பக்கம் சாய்ந்து, நீதியின் பக்கம் சாய்ந்து, அதை எதிர்கொள்வது எனது கடமை என்று எண்ணினேன். நாங்கள் குடியாட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில்தான் அப்படி நடந்தது.

 

செல்வர்குழாம் ஆட்சியேற்ற பின்னர் கூட, முப்பது ஆணையாளர்களும் சலாமிஸ் நகரத்து லியோனுக்கு இறப்புத்தண்டனை நிறைவேற்றுவதற்காக, என்னையும் வேறு நால்வரையும் வட்டக் கூடத்துக்கு கூப்பிட்டு, அவரைக் கொண்டுவரும்படி அறிவுறுத்தினார்கள். அவர்கள் அத்தகைய அறிவுறுத்துரைகளை விடுத்த பல தடவைகளுள் அது ஒன்று என்பது உண்மையே. எத்தனை பேர்மீது பழிமுடிய முடியுமோ அத்தன பேர்மீது பழிமுடியும் கெட்ட நோக்குடன் அவர்கள் அறிவுறுத்துரைகளை விடுத்தார்கள். அப்பொழுதும் கூட இறப்பை நான் இம்மியும் பொருட்படுத்தவில்லை என்பதை எனது சொல்லால் அல்ல, செயலால் தெளிவுபடுத்தினேன். இறப்பை நான் இம்மியும் பொருட்படுத்தவில்லை என்பது ஒரு வலிய கூற்றல்ல என்றால் இப்படி எடுத்துக்கொள்ளுங்கள்: அதாவது, நான் பிழையான செயல் அல்லது கெட்ட செயல் எதையும் செய்யக் கூடாது என்பதையே பெரிதும் பொருட்படுத்தினேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். அத்துணை அதிகாரம் படைத்த அரசாங்கத்துக்கு அஞ்சி ஒரு பிழையான செயலை நான் செய்யவில்லை. வட்டக் கூடத்தை விட்டு  நாங்கள் வெளியேறிய பின்னர், மற்ற நால்வரும் சலாமிஸ் நகரத்துக்குப் போய் லியோனைக் கைதுசெய்தார்கள். நான் வீடு திரும்பினேன். அதனை அடுத்து அரசாங்கம் கவிழ்ந்திராவிட்டால், எனது செயலுக்காக நான் சாகடிக்கப்பட்டிருக்கக் கூடும். பலரும் எனது கூற்றுகளுக்குச் சான்று பகர்வார்கள்.

 

நான் பொதுவாழ்வில் இறங்கி, மானமுள்ள மனிதனாக இயங்கி, நேரிய குறிக்கோளைக் கைக்கொண்டு, உளச்சாட்சிக்கு அமைந்து  மற்றெல்லாவற்றுக்கும் மேலாக அக்குறிக்கோளுக்கு முதன்மை அளித்திருந்தால், இவ்வளவு நீண்டகாலம் வாழ்ந்திருப்பேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இவ்வளவு நீண்டகாலம் நான் வாழ்ந்திருக்க மாட்டேன், பெரியோர்களே! வேறெவரும் கூட வாழ்ந்திருக்க மாட்டார்கள். என் வாழ்நாள் முழுவதும் நான் ஆற்றிய பொதுவாழ்வுக் கடமைகள் எவற்றிலும்,  என்னை உறுதியுடன் அர்ப்பணித்ததை நீங்கள் கண்டுகொள்வீர்கள். எனது சொந்த வாழ்வுக்கும் அது பொருந்தும். வன்ம நோக்குடைய சிலரால் எனது மாணவர்கள் எனப்படுவோர் உட்பட எவருமே நீதிக்கு ஒவ்வாத செயலில் ஈடுபடுவதை என்றுமே நான் ஏற்றுக்கொண்டதில்லை. எவருடைய ஆசானாகவும் என்றுமே நான் அமர்ந்ததில்லை. எனினும் இளையோரோ, மூத்தோரோ எனது  உரையாடலில், எனது சொந்தப் பணியில் நான் ஈடுபடுவதைச் செவிமடுக்க ஆவல் கொண்டால், அவர்களுக்கு வாய்ப்பளிக்க என்றுமே நான் தயங்கியதில்லை. அவர்களுடன் கதைப்பதற்கு நான் கட்டணம் அறவிட்டதுமில்லை, கட்டணமின்றிக் கதைக்க மறுத்ததுமில்லை. செல்வந்தரையும், வறியோரையும் சரிநிகராக நோக்கி வினாக்களுக்கு விடையளிக்க நான் தயாராக இருக்கிறேன். அதேபோல, எவராவது நான் கூறுவதைச் செவிமடுத்து, எனது வினாக்களுக்கு விடையளிக்க விரும்பினால், அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் என்றுமே எவர்க்கும் எதையும் புகட்டவுமில்லை, புகட்ட வாக்குறுதி அளிக்கவுமில்லை. ஆதலால் இவர்களுள் எவரும் நல்ல குடிமகனாகவோ, கெட்ட குடிமகனாகவோ மாறினால் அதற்கு என்னைப் பொறுப்பாளி ஆக்குவது தகாது. மற்றவர்கள் அனைவருக்கும் கிடைக்காத எதையும் என்றாவது என்னிடம் கற்றுக்கொண்டதாகவோ, அந்தரங்கமாகக் கேட்டறிந்த்தாகவோ எவராவது வலியுறுத்தினால், அவர் உண்மை கூறவில்லை என்று நீங்கள் மிகவும் உறுதியாக நம்பலாம்.

 

சிலர் என்னுடன் நெடும்பொழுது கழிப்பதில் இன்பம் துய்ப்பது எங்ஙனம்? பெரியோர்களே, அதற்கான காரணத்தை நானே உளந்திறந்து கூறியது உங்கள் காதில் விழுந்திருக்கிறது. தங்களை ஞானவான்கள் என்று கருதும் அஞ்ஞானிகளை நான் ஆய்விடக் கேட்டு அவர்கள் இன்புறுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு கேளிக்கையான அனுபவமும் கூட.

 

நான் கூறியவாறு இறைவாக்குகள், கனவுகள்  ஊடாகவும், வேறு தெய்வ நிர்ணய வழி எதன் ஊடாகவும் மனிதனுக்கு ஒரு கடமை உணர்த்தப்படுகிறதோ அந்த வழி ஒவ்வொன்றின் ஊடாகவும் எனக்கு இடப்பட்ட இறையாணைக்கு அடிபணிந்து நான் ஏற்றுக்கொண்ட கடமை அது. இது எளிதில் நிச்சயிக்கக்கூடிய மெய்யான கூற்று, பெரியோர்களே! இளையோருள் சிலரை நான் கெடுத்துவருவது உண்மை என்றால், மற்றவர்களைக் கெடுப்பதில் ஏற்கெனவே நான் வெற்றி பெற்றுள்ளேன் என்றால், இப்பொழுது வளர்ந்துள்ள இம்மற்றவர்களுள் சிலர் தமது இளமைக் காலத்தில் எப்பொழுதாவது நான் தகாத புத்திமதி கூறியதைப் பின்னர் கண்டுபிடித்திருந்தால், அவர்கள் இப்பொழுது கட்டாயமாக முன்வந்து என்னைக் கண்டித்திருக்கவும், தண்டித்திருக்கவும் வேண்டும் அல்லவா? அவர்கள் தாமாக அப்படிச் செய்ய விரும்பாவிட்டாலும் கூட, அவர்களது குடும்பத்தவர்களுள் சிலர் - அவர்களது தந்தையர், உடன்பிறந்தார், சுற்றத்தார் – தமது உறவினர்க்கு நான் இழைத்த தீங்கினை இப்பொழுது நினைந்து நடவடிக்கை எடுப்பதை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள் அல்லவா?

 

அவர்களுள் பெருந்தொகையானோர் போகடிபோக்காக இந்த நீதிமன்றத்துக்கு வந்திருப்பது எனது கண்களுக்குத் துலக்கமாகத் தெரிகிறது. முதலாவதாக அதோ கிறித்தோ, என் வயதினர், நெருங்கிய அயலவர், இளைஞன் கிறித்தொபியூலசின் தந்தை; இதோ ஈசையின்சின் தந்தை, ஸ்வீட்டஸ் நகரத்து லைசானியாஸ்; அதோ எபியீனிசின் தந்தை, செவிசஸ் நகரத்து அந்திபோன்; இனி எங்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்களின் சகோதரர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள்; இதோ தியொசொதைசின் மகன் நிக்கொஸ்ராட்டஸ்; அதோ தியொடொட்டசின் சகோதரன்; அவரால் தியொடொட்டசைத் தடுக்க முடியாது; ஏனென்றால் தியொடொட்டஸ் இப்பொழுது உயிருடன் இல்லை; இதோ டெமொடக்கசின் மகன் பரலஸ்; மறைந்த தியகேஸ் அவருடைய சகோதரன்; அதோ அரிஸ்டனின் மகன் அடிமன்டஸ்; இதோ அடிமன்டசின் சகோதரன் பிளேட்டோ; அதோ ஏந்தோரஸ், இதோ அவரது சகோதரன் அப்போலோதரஸ்.

 

இன்னும் பலரின் பெயர்களை என்னால் கூறமுடியும். அவர்களுள் சிலரை மெலிட்டஸ் தனது பேச்சில் சாட்சிகளாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை என்னால் மிகவும் உறுதிபடக் கூறமுடியும். தனது பேச்சில் சாட்சிகளைக் குறிப்பிட அவர் மறந்துபோனார் என்றால், இப்பொழுது குறிப்பிடட்டும்! அவருக்கு நான் வழிவிடுகிறேன். இங்கு முன்னிறுத்துவதற்கு அத்தகைய சாட்சிகள் எவரும் அவரிடம் உண்டா என்பதை அவர் கூறட்டும்! மாறாக, பெரியோர்களே, தமது பேரன்புக்குரிய உற்றார், உறவினரைக் கெடுத்த தீய மேதாவி என்று மெலிட்டசும், அனைட்டசும் பழிதூற்றும் எனக்குத் துணைநிற்க அவர்கள் அனைவரும் தயாராக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனது கேடுகெட்ட செல்வாக்கிற்கு மெய்யாகவே இரையானோர் எனக்குத்  துணைநின்றால், அவர்களை மன்னிக்கலாம் அல்லவா? ஆனால், அவர்களின் வயதுமுதிர்ந்த உறவினர்கள், என்னால் கெடுக்கப்படாதவர்கள், எனக்குத் துணைநிற்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? மெலிட்டஸ் கூறுவது பொய், நான் கூறுவது மெய் எனும் தகுந்த நேரிய காரணத்தை விட வேறென்ன காரணம் இருக்க முடியும்?

 

இதுவே, பெரியோர்களே, நான் முன்வைக்கக்கூடிய பதில்வாதத்தின் சாரம். அத்துடன் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். அதைக் கேட்டு உங்களுள் எவரும் தனது சொந்த வழக்கு எதையும் நினைந்து எரிச்சலடையலாம். உங்களுள் ஒருவர் நடுவர்களின் முன்னிலையில் இதைவிடக் கடுமை குறைந்த விசாரணையை எதிர்கொள்கையில் கண்கலங்கி, அவர்களை இயன்றவரை இரங்க வைப்பதற்காகத் தனது குழந்தைகளையும், உறவினர்கள் - நண்பர்கள் பலரையும் நீதிமன்றில் வெளிப்படவைத்து, ஈனத்தனமாக மன்றாடியிருக்கலாம். மாறாக நானோ, உயிராபத்தாகத் தென்படக்கூடிய இப்பேராபத்தை எதிர்நோக்கியும் கூட, அப்படி எதுவும் செய்ய எண்ணவில்லை. உங்களுள் ஒருவர் இந்த விவரங்களைச் சிந்தித்துப்பார்த்து, தனது சிந்திப்புகளால் எரிச்சலடைந்து, எனக்கெதிராகப் பக்கம்சாய்ந்து, வெகுண்டெழுந்து வாக்களிக்கக் கூடும். உங்களுள் எவரும் அப்படிச்  செய்ய முற்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஆனாலும் அப்படிச் செய்ய வாய்ப்புண்டு; அப்படி என்றால், அவரிடம் நான் இப்படிக் கூறுவதில் பெரிதும் நியாயம் உண்டு: அன்புடையீர், எனக்கும் குடும்பத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஹோமர் கூறியதுபோல், நான் "கருவாலி மரத்திலிருந்தோ, கரும்பாறையிலிருந்தோ" உதிக்கவில்லை. என்னைப் பெற்றோர் மானுடப் பிறவிகளே! ஆதலால், பெரியோர்களே, எனக்கும் குடும்பத்தவர்கள் உண்டு. ஆம், மூன்று புதல்வர்கள். ஒருவன் ஏறக்குறைய வளர்ந்துவிட்டான். மற்ற இருவரும் சிறுவர்கள். ஆனாலும் அவர்களை இங்கு முன்னிறுத்தி, என்னை விடுதலை செய்யும்படி நான் மன்றாடப் போவதில்லை.

 

அப்படி எதையும் செய்ய நான் ஏன் எண்ணவில்லை? வக்கிரத்தனம் கொண்டல்ல, பெரியோர்களே! உங்களை அவமதிக்க எண்ணியுமல்ல. எனக்கு இறப்பை எதிர்கொள்ளும் தீரம் உண்டா இல்லையா என்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. எனக்கு கிடைத்த பெயர் மெய்யாகலாம், பொய்யாகலாம். எனினும் மானுடரின் பொதுவான போக்கிலிருந்து சாக்கிரத்தீஸ் வேறுபட்டவன் என்று கொள்ளப்படுகிறான். அந்த வகையில் நான் இந்த வயதில் மேற்படி முறைகள் எவற்றையும் பயன்படுத்துவது எனது சொந்தப் பெயருக்கும், உங்கள் பெயருக்கும், முழு அரசின் பெயருக்கும் தகும் என்று எண்ணவில்லை.

 

உங்களுள் ஞானத்துக்கோ, தீரத்துக்கோ, வேறு அறம் எதற்குமோ பேரெடுத்தோர் அப்படி எல்லாம் நடந்துகொள்வது வெட்கக்கேடு. இத்தகைய சிலர் விசாரணைக்கு உள்ளாகும் வேளைகளில் தமது மேன்மையைத் துறந்து மட்டுமீறி மன்றாடுவதை நான் அடிக்கடி அவதானித்திருக்கிறேன். உயிரிழப்பது அவர்களுக்குப் பயங்கரமாய்த் தெரிவதை இது காட்டுகிறது; அவர்களுக்கு நீங்கள் இறப்புத் தண்டனை விதிக்காவிட்டால், அவர்கள் இறவாப்பேறு பெற்றுவிடுவார்கள் என்பது போல!

 

இத்தகையோர் எங்கள் மாநகரத்தின் மானத்தைக் கெடுப்பவர்கள் என்றே நான் கருதுகிறேன். அதென்சு மாநகரத்தின் குடிமக்கள் தம்மை ஆள்வதற்கும், மற்றும் பிற உயர்பதவிகளை வகிப்பதற்கும் தகுதிவாய்ந்த ஆடவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எங்கள் ஆடவர்களுள் மணிமுத்துக்கள் எனத்தக்க அவர்களை இங்கு வந்துசெல்வோர் வெறும் பெண்டிரெனக் கருதினால், அவர்களை மன்னிக்கலாம். பெரியோர்களே, உங்கள் மானம் கடுகளவானாலும் கூட, மேற்படி முறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு நீங்கள் தாழ்ந்துவிடக் கூடாது. நாங்கள் அப்படிச் செய்வதையும் நீங்கள் அனுமதிக்கக் கூடாது.  மாறாக, வாயை மூடிக்கொண்டிருக்கும் ஒருவரை விட, எங்கள் மாநகரத்தைப் பிறர் எள்ளிநகையாடும் வண்ணம் ஈனத்தனமான காட்சிகளை அரங்கேற்றும் எவரும் தண்டிக்கப்பட அதிக வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அடித்துக்கூற வேண்டும்.

 

பெரியோர்களே, பாசாங்குகள் பற்றிய சங்கதி முழுவதும் ஒருபுறம் இருக்கட்டும்! நடுவர்களிடம் ஒருவன் மன்றாடுவதும், மன்றாடி விடுதலை பெறுவதும் தகும் என்று நான் நினைக்கவில்லை. அவர்களிடம் அவன் விவரங்களை முன்வைத்து வாதாடி நம்பச்செய்ய வேண்டும். நடுவர்கள் தயவு காட்டுவது நீதிபாலிப்பதாகாது. தாம் துணிந்தவாறு தயவு காட்டுவதற்கு அவர்கள் சூளுரைக்கவில்லை. எது நீதி என்பதையே அவர்கள் தீர்மானிக்க வேண்டும். நீதிநியாயப்படி, சட்டதிட்டப்படி தீர்ப்பளிக்கவே அவர்கள் சூளுரைத்துள்ளார்கள். இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், உங்களிடையே பொய்ச்சாட்சியம் மேலோங்க நாங்களும் விடக்கூடாது, நீங்களும் விடக்கூடாது; விட்டால் எங்கள் இரு தரப்புகளுக்கும் பழிபாவம் விளையும்.

 

ஆதலால், பெரியோர்களே, நான் மானமிழந்து, நெறிபிறழ்ந்து, எனது ஆன்மீகக்  கடமைதிறம்பி உங்களிடம் மன்றாடுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நான் கடவுட்பற்று அற்றவன் என்று மெலிட்டசால் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கும்பொழுது, நீங்கள் அதை எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் பற்றுறுதியுடன் இட்ட சூளுரையை மீறும்படி நான் உங்களிடம் கெஞ்ச முயன்றால், உங்களைத் தூண்ட முயன்றால், ஆன்மீக நெறியை அவமதிக்கும்படி நானே உங்களுக்குப் போதிப்பதாகப் புலப்படுதல் திண்ணம். அத்தகைய பதில்வாதத்தின் ஊடாக நான் ஆன்மீக நம்பிக்கை அற்றவன் என்று என்னை நானே குறஞ்சாட்டுவதாகப் புலப்படும். ஆனால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. பெரியோர்களே, என்மீது குற்றஞ்சுமத்தியோரை விட எனக்கு ஆன்மீக நெறியில் மிகவும் உளமார்ந்த நம்பிக்கை உண்டு. இனி, எனக்கும் உங்களுக்கும் சிறந்த பெறுபேறு கிடைக்கும் வண்ணம் எனது பதில்வாதத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும் பொறுப்பை நான் உங்களிடமும் கடவுளிடமும் விட்டுவிடுகிறேன். 

_________________________________________

தொடர்ச்சி: சாக்கிரத்தீசின் வழக்குரை  (6)

தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment