புண்படும் தமிழ்மொழி

இசை வெறும் ஓசையாய் மாறிவிட்டதே!” என்று புலம்பினார் எழுத்தாளர் மைலன் குந்தேரா. பொருள்பொதிந்த தமிழ்ப் பெயர்கள் கூட வெறும் ஓசைகளாய் மாறிவிட்டனவே என்று நாமும் புலம்ப வேண்டியுள்ளது.

எமது குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் பெரிதும் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய ஓசைகளாய் ஒலிக்கின்றன. ஜதுமிதா, ஷொகினா, ஹம்ஷிகா, ஜிதாரா, நிஹாரிஜன், டுலக்‌ஷன், ஜிரஷ்டன்

மரபார்ந்த தமிழறிவு குன்றியதால், கிரந்த எழுத்துகளுடன் கூடிய ஓசைகள் எம்மவர்க்கு சிறந்த பெயர்களாகத் தென்படுகின்றன போலும். அவை தமிழும் இல்லை, அவற்றில் பொருளும் இல்லை, சுவையும் இல்லை.

கடைகள் எல்லாம்ஸ்டோர்ஸ்ஆகிப் பல்லாண்டுகள் கழிந்துவிட்டன. இன்று எந்தக் கடையுமேகடைஎனப்படுவதில்லை. “கடைஒரு கடைகெட்ட சொல்லாக ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டது!

கடைகளின் பெயர்கள் 99 விழுக்காடு கிரந்த எழுத்துக்களில் அல்லது ஆங்கிலத்தில் தான் வைக்கப்படுகின்றன. ஆங்காங்கே  அவை தமிழில் ஒலிபெயர்த்து எழுதப்படுவதுண்டு.   

ஒரு விடுதியில்Sivagangai Aham” என்றும், அதன் கீழேசிவகங்கை அஹம்என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. “அகம்எனும் தூய தமிழ்ச் சொல் கிரந்த எழுத்துடன்அஹம்என்று  எழுதப்பட்டுள்ளது!

ஆங்கிலத்தில் வைக்கப்படும், பதியப்படும், பொறிக்கப்படும் பெயர்கள் பிறகு தாறுமாறாகத் தமிழில் ஒலிபெயர்க்கப்படுகின்றன: “கந்தன் சுப்பர் மார்க்கட், பஷன் அக்கடமிமொடெர்ன் போட்டோகிராபர்ஸ், “நியூ ஷூ பலஸ்…”

வாடிக்கையாளர்கள்  தங்கி, உண்டு, உறங்கிச் செல்லும் விடுதிவிடுதியகம்.” பெரிதும் குடிவகை பருகும் வசதியுடன் கூடிய விடுதிஅருந்தகம்.”

 விடுதியகம்                  = hotel

அருந்தகம்                     = inn = pub                              

உணவகம்                     = restaurant

சிற்றுண்டியகம்         = cafeteria

சலூன்என்பது அசல் தமிழ்ச் சொல்லாகவே வழங்கி வருகிறது. ஆங்கிலத்தில் salon என்பதுசலோன்என உச்சரிக்கப்படுவதுதமிழில் இதைசிகையகம்எனலாம்.

தமிழகம் எங்கும்பேருந்து நிலையம்என்று சரிவரப் பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கை பேருந்து நிலையங்களில்பேரூந்துநிலையம் என்றே பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பேரகராதியின்படிஊந்துஎன்பது ஏலக்காய்க் கோது. பேரூந்து என்றால் பெரிய ஏலக்காய்க் கோது

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமதுஆசனம்,” “அக்கிராசனர் உரைபற்றிக் குறிப்பிடுவார்கள். 1970களில் வெளிவந்த இலங்கை அரச  சொற்கோவைகளில்ஆசனம்என்பதுஇருக்கைஎனவும், “அக்கிராசனர் உரைஎன்பதுஅரியணை உரைஎனவும் தமிழ்ப்படுத்தப்படுள்ளன.

பெரிதும் நாடாளுமன்றத்தில் கையாளப்படும் expenditure எனும் சொல்லை ஊடகங்கள் பலவும்செலவீனம்என்று குறிப்பிட்டு வருகின்றன. ஆட்சிமொழித் திணைக்களத்து சொற்கோவையின்படி இதுசெலவினம்ஆகும்

பல்வேறு செலவுகள் ஒருமிக்கசெலவினம்எனப்படும். செலவுக்கும், செலவினத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு அது. பலவீனம் என்றால் பலம் இல்லை. ஆகவே செலவீனம் என்றால் செலவு இல்லை அல்லவோ?

நிலைமை, “நிலைவரம்” “சுயேச்சை, “பயிற்சி”... என சரிவர எழுத்துக்கூட்டாமல், “நிலமை, “நிலவரம், “சுயேட்சை, “பயிர்ச்சி” ... என்று வழுபட எழுத்துக்கூட்டும் வழக்கு மேலோங்கி வருகிறது.   

நாடகர், “நூலகர், “ஊடகர்”... எனப்படுவோர் தத்தம் துறைகளில் பயின்று பட்டம் பெற்றிருந்தால் ஒழிய, அவர்களை முறையேநாடகவியலாளர், “நூலகவியலாளர், “ஊடகவியலாளர்எனக் கொள்வது பொருந்தாது

காணாமல் ஆக்கப்படல்எனும் தொடர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. முன்பின் முரண்பாடான இத்தொடர் அறவே பொருந்தாது.  “காணாமல் போக்கடித்தல்”  என்பதே பொருத்தமான தொடர்

ஒரு பிணக்கு ஏற்பட்ட பிறகு, மீண்டும் இணக்கம் ஏற்படுவது reconciliation எனப்படுகிறது. இதைமீளிணக்கம்என்பது பொருந்தும். “நல்லிணக்கம்என்பதில்மீண்டும்என்பது அடங்கவில்லை.

An intellectual என்பது பெரிதும்ஒரு புத்திஜீவிஎன்று குறிப்பிடப்படுகிறதுஇது ஓர் அஃறிணைச் சொல் போல் ஒலிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் இதுஆய்வறிவாளர்என்று பெயர்க்கப்பட்டுள்ளது. “அறிவார்ந்தோர்என்பதும் பொருந்தும்.

Test match என்பது இரு நாடுகளின் தேசிய விளையாட்டு அணிகளுக்கு இடையே நிகழும்  போட்டி. இதைநாட்டிடை விளையாட்டுப் போட்டிஎனலாம். Test cricket match என்பதுநாட்டிடைத் துடுப்பாட்டப் போட்டி.” 

சாட்சிகள் அழிக்கப்படுகின்றனவா?” எனும் வினாவுடன் கூடிய ஒரு செய்தித் தலைப்பு! “சாட்சிகள்” (witnesses) உயர்திணை; “அழிக்கப்படுகின்றனவா?” அஃறிணை. “சான்றுகள்” (evidence) அழிக்கப்படுகின்றனவா?” என்பதே சரி. (ஆங்கிலத்தில் evidence, information போன்ற சொற்கள் பன்மையில் அமைவதில்லை.)

சாட்சிஅல்லதுகண்கண்ட சாட்சி” (eye-witness) ஓர் ஆளைக் குறிப்பது. அவர் நீதிமன்றில் அளிப்பதுசாட்சியம்”  (testimony). He testified in Court அல்லது He gave evidence in Court என்றால், “அவர் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்என்று பொருள்படும்

ஐயின்னா ஒரு பொல்லாத விலங்கு.” Hyena! இந்த விலங்கிற்கு பல தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன: கழுதைப்புலி, கடுவாய், குடத்தி, வங்குஅவற்றை அறிந்து பயன்படுத்தாமல், “ஐயின்னாஎன்று எழுதுவது பொறுப்பீனம்

Conservative Party என்பது “பழமைவாதக் கட்சி” என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.  Conserve என்பது “பேணு” என்று பொருள்படுவது. ஆதலால் இலங்கை ஆட்சிமொழிச் சொற்கோவைகளிலும், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்து மொழிபெயர்ப்பு நூல்களிலும் இது “பழமைபேண் கட்சி” என்று பெயர்க்கப்பட்டு வந்தது.  கனடியக் கட்சிகளுள் ஒன்றாகிய Progressive Conservative Party தமிழில் “முற்போக்கு பழமைபேண் கட்சி” ஆகும். அதை “முற்போக்கு பழமைவாதக் கட்சி” என்பது முன்பின் முரணாகும். 

அம்மாவும் அப்பாவும் சந்தைக்குப் போனார்கள்என்று தமிழில் கொடுக்கப்படும் வசனத்தை எனது மாணவர்கள், Mom and dad went to the market, என்று சரிவர மொழிபெயர்க்கிறார்கள்

Mom and dad went to the market என்ற அதே வசனத்தை திருப்பி ஆங்கிலத்தில் கொடுத்தால், அதே மாணவர்கள், “அம்மா மற்றும் அப்பா சந்தைக்குப் போனார்கள்என்று மொழிபெயர்க்கிறார்கள்

அம்மாவும் அப்பாவும்என்ற உம்மைத்தொடரை விடுத்து, and-மற்றும்என்று பெயர்த்து, “அம்மா மற்றும் அப்பா…” என்றும், “இலங்கையும் இந்தியாவும்என்பதைஇலங்கை மற்றும் இந்தியாஎன்றும்  மொழிபெயர்க்கிறார்கள்!

அவரிற்கும் இவரிற்கும், “விருந்தினர்களிற்கும் மற்றவர்களிற்கும்!” என்று மொழியை வதைக்கும் போக்கு மேலோங்கி வருகிறது. “அவருக்கும் இவருக்கும், “விருந்தினர்களுக்கும் மற்றவர்களுக்கும்என்று இலகுவாக எழுதலாமே!

தமிழர்களிற்கு ஒற்றையாட்சி தீர்வாகுமா?” என்ற வினாவை எழுப்பி, அதற்கு விடையளிக்கும் ஒரு கட்டுரை!. “தமிழருக்கு…” என்றே எழுதலாம். “அர்விகுதி ஒருமையையும், ஆண்பாலையும் மட்டுமல்ல, பன்மையையும், பெண்பாலையும் குறிக்கும். “தமிழர், “தமிழரின், “தமிழரால், “தமிழருக்கு”... என்றே எழுதலாம்.

இந்நாடு, இந்த நாடு, அம்மாகாணம், அந்த மாகாணம் …” என்பதெல்லாம் சிலருக்கு சரியாகப் படவில்லை. “இவ்நாடு, அவ்மாகாணம்…” என்று தப்பும் தவறுமாக எழுதுவதே அவர்களுக்கு சரியாகப் படுகிறது

இலங்கையில் ஆயுதங்களைக் களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் உடன்பாடுஎன்பது ஒரு செய்தித்தலைப்பு. “களஞ்சியம்தானியங்க்ளுக்குப் பொருந்தும்; படைக்கலங்களுக்குப் பொருந்தாது. “படைக்கலங்களைச் சேர்த்து அல்லது சேமித்து அல்லது குவித்து வைக்க …” என்று குறிப்பிடலாமே

புலம்பெயர்ந்த ஈழத்தமிழரை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு-கிழக்கு வாக்குகளைச் சூறையாட அரசாங்கம் சூழ்ச்சிஎன்பது இன்னொரு செய்தி. “மகிழ்விஎனும் பிறவினையை விடுத்து, “மகிழ்ச்சிஎனும் பெயரை எதற்காக வினையுருவமாக்கி, “மகிழ்ச்சிப்படுத்துஎன்று குறிப்பிட வேண்டும்? “…தமிழரை மகிழ்வித்து…” என்று எழுதக் கூடாதா?

அவ்வாறே ஓர் ஆய்வுக் கட்டுரையில், “மொழிபெயர்ப்புச் செய்தல்என்று திரும்பத் திரும்பக் குறிப்பிடப்பட்டுள்ளது! ஒரு தடவையேனும்மொழிபெயர்த்தல்என்று குறிபிடப்படவில்லை

பாடசாலைச் சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கிய சீன அரசாங்கம்எனுந் தலைப்பில் ஒரு செய்தி. “பாடசாலைக்குத் தேவையான சீருடைகளை முழுமையாக வழங்கிய சீன அரசாங்கம்எனலாமே!

நிலத்தைப் பதப்படுத்திய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டார்கள்என்பது ஒரு தொலைக்காட்சிச் செய்தி. “நிலத்தைப் பண்படுத்திய விவசாயிகள்என்பதே மரபார்ந்த தமிழ்

அதே தொலைக்காட்சியில்செய்திச்சாரம்ஒளிபரப்பாகி வருகிறது. “சாரம்எனும் சொல் கரு, சாறு, பிழிவுஎன்று பொருள்படுவது. இது பெரிதும் ஒருமையில், ஒரு செய்தியைக் குறித்துப் பயன்படுத்தப்படுவது.

சரம்என்ற சொல் கணை, வடம், மாலைஎன்பவற்றைக் குறிப்பது. இது பெரிதும் பன்மையில், ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளைக் குறித்துப்  பயன்படுத்தப்படுவது. “செய்திச்சரம்என்பதே பொருத்தம்.  

Busy-க்குத் தமிழ் தேடி அலையாதோர் இல்லை. அதற்குத் தமிழ் இல்லை என்று இடித்துரைப்போரும் இருக்கிறார்கள். Busy எனும் சொல்லை அறியமுன்னர் எமது முன்னோர் படுசோம்பேறிகளாய் இருந்தார்கள் போலும்!

அலுவலாயிருத்தல், காரியமாயிருத்தல், கவையாயிருத்தல்மூன்றும் தமிழ்ப் பேரகராதியில் இடம்பெற்றுள்ளன! “அப்பா ஓர் அலுவலாய் இருக்கிறார்என்பதே Dad is busy எனப்படுகிறது. எனக்கு அதிக வேலைகள் இருக்கின்றன = I have a busy schedule. 

Oxford அகராதியில் order எனும் சொல் 16 விதங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. அவற்றுள்உத்தரவுஅல்லதுகட்டளைஎன்பது ஒரு விதம் மட்டுமே. அரசாங்கம் அல்லது நீதிமன்றம் பிறப்பிப்பதுகட்டளைஎன்பது எல்லோர்க்கும் தெரியும்.

ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் கொண்டுவரச் சொல்வது  “கட்டளைஅல்ல, “வேண்டுகோள்.” அங்கே தேநீர் கொண்டுவரும்படி வேண்டிக்கொள்கிறோம் அல்லது கேட்டுக்கொள்கிறோம். “நாங்கள் தேநீர் கொண்டுவரச் சொன்னோம்என்றாலே போதுமே! இதுவே ஆங்கிலத்தில்  We ordered tea. 

Mayor- "மாநகராதிபதி" அல்லது "மாநகர முதல்வர்என்று குறிப்பிட்ட நெடுங்கால வழக்கு அருகிவிட்டது. இன்று மாநகராதிபதிகளாக விளங்குவோர் அந்த வழக்கிற்குப் புத்துயிரூட்ட வேண்டும்.

கெளரவிஎனும் வடமொழிச் சொல்லை சிலர்மதிப்பளிஎன தமிழ்ப்படுத்துகிறார்கள். “மறவர் கெளரவிக்கப்பட்டனர்என்பதை அவர்கள்மறவர் மதிப்பளிக்கப்பட்டனர்”  என்கிறார்கள்

அதைமறவருக்கு மதிப்பளிக்கப்பட்டதுஎன்றாவது செப்பனிடலாமே! உண்மையில்கெளரவி” (to honour) என்பதுமாண்புறுத்துஎன்று பொருள்படுவது. “மறவர் மாண்புறுத்தப்பட்டனர்என்பதே மரபார்ந்த தமிழ்.  

மாண்பு = honour (பெயர்)

மாண்புமிகு = honourable (பெயரடை)

மாண்புறுத்து = honour (வினை)

Honour killing என்பதுஆணவக்கொலைஎனப்படுகிறது. குடும்ப மானம் காக்கவே கொலைசெய்வதாக குடும்பத்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால், இதுமானக்கொலை”  ஆகிறது. ஆணவக்கொலை என்பது எந்தக் கொலைக்கும் பொருந்தும் அல்லவா?

யாழ்ப்பாணம் - பாசையூரில் மறைந்த தென்னிந்திய பழம் பெரும் புரட்சி நடிகரும் தமிழக முதலமைச்சருமான வைத்தியர் எம்.ஜீ.இராமசந்திரனின் 108 வது ஜனனதின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (17)  நடைபெற்றது.”

மறைந்த பழம்பெரும் புரட்சி நடிகரும், தமிழக முதலமைச்சருமான எம். ஜி. இராமசந்திரனின் 108 வது ஜனனதின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (17)  “யாழ்ப்பாணம் - பாசையூரில் நடைபெற்றதுஎன்று குறிப்பிட்டிருக்கலாம்

அண்ணாத்துரை, கருணாநிதி, எம். ஜி. ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு honorary doctorate பட்டம் அளிக்கப்பட்டது. இது கெளரவ கலாநிதிப் பட்டம். Dr. MGR  என்பது கெளரவ கலாநிதி எம். ஜி. ஆர்., “வைத்தியர் எம். ஜி. ஆர்.” அல்ல.

ஹிருணிகா பிரேமசந்திரன், நானும் ஹிரனும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக, தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்என்கிறது ஒரு நாளேடு

ஹிருணிகாஎன்று பிறர்கூற்றில் துவங்கும் வசனம் மேற்கோட்குறி இல்லாமல்  நானும்…  என்று தற்கூற்றுக்கு மாறி, பிறகு தங்கள்என்று பிறர்கூற்றுக்கு மீள்கிறது

ஹிரனும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தொடர்கிறது செய்தி. ஒன்றில், “எங்கள் திருமணத்திலிருந்து பிரிய முடிவு செய்துள்ளோம்என்று, அல்லதுஎங்களை திருமணத்திலிருந்து பிரிக்க முடிவு செய்துள்ளோம்என்றாவது குறிப்பிட்டிருக்கலாம்

வேறு ஊடகங்களும் இதே செய்தியை வெளியிட்டுள்ளன. அவை அனைத்தும்திருமணம், “மணவாழ்வுஇரண்டையும் குழப்பியடித்துள்ளன. Marriage “திருமணம்என்றும்மணவாழ்வுஎன்றும் பொருள்பட வல்லது. A happy marriage என்பது பெரிதும்இனிய மணவாழ்வுஎன்று பொருள்படும்

அதேவேளை, give in marriage என்பதுமணம்முடித்துக் கொடு” (marry off) என்று பொருள்படும். Our teacher doesn’t believe in marriage என்பதுஎங்கள் ஆசிரியருக்கு மணவாழ்வில் நம்பிக்கை இல்லைஎன்று பொருள்படும்.

ஹிருணிகாவின் முகநூற் குறிப்பில் உள்ள the life of our dreams எனும் தொடர்எங்கள் கனவு வாழ்க்கை, “நம் கனவுகளின் வாழ்க்கை, “எங்கள் கனவுகளின் வாழ்க்கை”... என்றெல்லாம் பெயர்க்கப்பட்டுள்ளது

இந்த அரிய தொடரைநாம் கனவுகண்ட வாழ்வுஎன்றோ, “நாங்கள் கனவுகண்ட வாழ்க்கைஎன்றோ எளிதாகவும், சரியாகவும், தெளிவாகவும் பெயர்த்திருக்கலாமே

ஒரு பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது.” இவ்வாறு பலரும் "புரிதல்" பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் புரியாமல்அல்லது  “காரணத்தைப் புரிந்துகொள்ளாமல் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாதுஎனலாமே

இந்த விமானம் ஆளில்லா விமானம் என்பதுடன் இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுமார் 40 கிலோ எடையுடையது என்றும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.”.

இப்படிப்பட்ட வசனங்களை வாசித்துப் பழகிய எங்களுக்கு, இது சரிவர எழுதப்பட்டுள்ளது என்றே தோன்றும். உரிய விபரம் எமக்குப் புரிவதே அதற்கான காரணம்.

அதாவது: இது ஆளில்லா விமானம்; இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது; இது சுமார் 40 கிலோ எடையுடையது; இந்த விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை; இந்த விபரம் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது!

எனினும், மேற்படி வசனத்தில் “...என்பதுடன்ஆகவும்என்றும்என… “ ஆகிய இணைப்புச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று இயைபுபடுத்தப்படவில்லை. அவற்றை இயைபுபடுத்தாமல் எழுதும் போக்கு மேலோங்கி வருகிறது

இன்னும் மோசமான வசனம்: “நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் ஏறி நின்று வேலை செய்த இரும்பிலான பலாஞ்சியில் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.”

எனினும் சங்கதி புரிகிறது: ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது; 4 பேர் கட்டிடத்தில் ஏறிநின்று வேலை செய்தார்கள்; அவர்கள்  இரும்புப் பலாஞ்சி ஒன்றை தூக்கிச் சென்றார்கள்; அதில் மின்சாரம் பாய்ந்து அவர்களைத் தாக்கியது.

இது ஒரு செய்தித்தலைப்பு: “Populationல் சரியும் South India, எகிறும் North, TNக்கு காத்திருக்கும் ஆபத்தை விளக்கும் Jeyaranjan”! பிட்டும் தேங்காய்ப்பூவும் போல் தமிழும் ஆங்கிலமும்! இப்பொழுது பரவிவரும் கொள்ளைநோய் இது

பருப்பில் நமக்கேன் வெருப்பு?” என்பது ஒரு கட்டுரையின் தலைப்பு! அதற்கு யார்பொருப்புஎன்பது தெரியவில்லை! இனிமேல்அரம் செய விரும்பு, ஆருவது சினம்…” என்றெல்லாம் எழுதுவார்கள் போலும்!

பேன்சிபூக்கடைதென்பட்டது. அதனை அணுகி, “பேன்சீப்புக்கடை என்று சரிவர எழுத்துக்கூட்டி எழுதலாமே!” என்றேன். “ஐயா, இது Fancy Florists எண்டது உங்களுக்கு விளங்கேல்லையோ?” என்று சீறினார் முதலாளி!

வாட்டப்பம்…” கண்ணில் பட்டது. பாலப்பம், வெள்ளையப்பத்துடன்வாட்டப்பம்என ஒன்று சேர்ந்துவிட்டது என்ற எண்ணத்துடன் நகர்ந்தபொழுது, அது “...வாடகைக்கு விடப்படும்என்று நீண்டது

Water pump என்பது பாமரமக்கள் வாயில்வாட்டப்பம்என்றே ஒலிக்கும். “வாடகைக்கு விடப்படும்என்ற தொடர்ச்சியே அது அப்பம் அல்ல நீர் இறைக்கும் இயந்திரம் என்பதை உணர்த்தியது!

இலங்கையிலிருந்து (பெரிதும் புலம்பெயர்ந்த மக்களைக் கருத்தில் கொண்டு) ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பால்மா பேணியின் புறத்தில் இப்படி பொறிக்கப்பட்டுள்ளது:

திறந்த பின்பு, பால்மாவைக் காற்றுப் புகாத கொள்கலனில் இட்டு மூடி வைக்கவும்.” அதன் ஆங்கில வரி: After opening, please keep the tin tightly closed. “பேணியைத் திறந்தால், அதை இறுக்கி மூடி வைக்கவும்என்பதே அதன் பொருள்

"அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே!' என்று அவையோரை விளித்து சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உரையாற்றியதாக ஒரு பேர்போன ஊடகம் குறிப்பிட்டுள்ளது. விவேகானந்தரின் அரும்பெரும் உரைக்கு நேர்ந்த கதி அது

"அமெரிக்காவின் சகோதரிகள்..." என்றால், அவர்கள் அமெரிக்கர்கள் அல்லர் என்பது கருத்து. அமெரிக்கரையே அவர் Sisters and brothers of America!" என விளித்து, அதாவது "அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!" என விளித்து உரையாற்றினார்

நினைவுகூறுவதுபற்றி திரும்பத் திரும்ப ஊடகங்கள் பலவும் எழுதி வருகின்றன. அது சரியல்ல. “தகுதிகூர்வு, தயவுகூர்வுபோன்றதே, “நினைவுகூர்வு.” “நினைவுகூருவதுஎன்பதே சரி.

பேச்சு வழக்கில்இலங்கைஎன்பதை விடசிறிலங்காஎன்பதே காதில் விழுவது அதிகம். எழுத்து வழக்கிற்கும்சிறிலங்காபரவிவிட்டது. சில ஒலி-ஒளி ஊடகங்கள்இலங்கைஎன்று சொல்வதே இல்லை.   

கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்…” என்கிறது சிலப்பதிகாரம். அதுவே நாட்டின் அதிகாரபூர்வமான தமிழ்ப் பெயர். 16ம் நூற்றாண்டு வரை சிங்களத்தில் வழங்கியலங்கா, பிறகு 1972 வரை ஆங்கிலத்தில் வழங்கியசிலோன், அதன்பிறகு வழங்கிவரும்சிறிலங்காஎல்லாம்இலங்கைஎன்று மட்டுமே பெயரும்

Lanka Cement = இலங்கை சீமெந்து

Bank of Ceylon = இலங்கை வங்கி

Sri Lanka Freedom Party = இலங்கை சுதந்திரக் கட்சி

நபரொருவரை தாக்கி பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைதுஎன்பது ஒரு செய்தி. “நபர்எனும் உருதுமொழிச் சொல்லின் பொருள்ஆள்.”  அதன்படிநபர் ஒருவர்என்றால், ஆள் ஒருவர். “ஒருவர்என்றாலே ஓர் ஆள் தானே! “ஒருவரை…” என்று குறிப்பிடக் கூடாதா

சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளைஎன வேறொரு செய்தி. -டி-எம் (ATM) தான் அந்த எந்திரம். எனவே-டி-எம் எந்திரத்தை…” என்பதே பொருந்தும். ஒருவரை ஏமாற்றலாம்; எந்திரத்தை ஏமாற்ற முடியாது, மோசடி செய்யலாம். “சென்னையில் தன்னியக்க வங்கிப் பொறி மோசடிக் கொள்ளைஎன்றோ, என்ற விதமாகவோ குறிப்பிட்டிருக்கலாம்.

காயப்படுத்துஎனும் சொல் ஒருவரின்உள்ளத்தை ஊறுபடுத்துஎனும் பொருள்பட புனைவெழுத்துக்களில் கூட இடம்பிடித்துவிட்து. அதன்படி இக்கட்டுரைக்குகாயப்படும் தமிழ்மொழிஎன்றுதான் தலைப்பிட வேண்டும்

மரபார்ந்த தமிழில்புண்படுத்துஎன்பது பெரிதும் ஒருவரின்உள்ளத்தை ஊறுபடுத்துஎன்று பொருள்படும்; அது அவரைஅடித்துக் காயப்படுத்துஎன்று பொருள்படல் அரிது.

Arjuna Bakery-யினுள் புகுந்து கேட்டேன்:

தம்பி, ஒரு சோடி சீனியப்பம் தாடா!” 

ஐயா, சீனியப்பம் எண்டால் என்ன?” 

உதுதான்!” என்று சொல்லி, சுட்டிக்காட்டினேன்

இது டீ பன்” (tea bun), ஐயா! ஏன் பேரை மாத்தி, குழப்புறீங்கள்?” என்று முகம் சுழித்தான் பையன்

அட, நீங்கள் எல்லோ சீனியப்பத்தைடீ பன்எண்டு மாத்திப் போட்டீங்கள்என்று பொருமினேன்

பையன் என்னைப் புறக்கணித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை வரவேற்றான்

ஒரு குழல் பிட்டு!” கட்டித்தரும்படி பக்கத்து உணவகத்தில் கேட்டேன்.

எத்தினை, ஐயா?” 

ஒரு குழலில் எத்தனை அவிப்பியளோ, அத்தனை!”

நாலு.”

அதைத்தான் ஒரு குழல் பிட்டு எண்டு சொன்னேன்.”

அதை ஒரு லைன் (line) பிட்டு எண்டுதான், ஐயா, சொல்லுறது.”

ஒரு பலகாரக் கடையினுள் நுழைந்து கேட்டேன்:

தம்பி, ஒரு கலவைச் சரை தாடா!” 

கலவைச் சரையோ?”

உதுதான்ரா!” 

இது மிக்சர், ஐயா!”

அதைத்தான் தமிழில் சொன்னேன்!”

ஏன், மிக்சர் தமிழ் இல்லையோ?”

வாறனடா, தம்பி!”

இத்தகைய மொழிவதை தமிழ்கூறு நல்லுலகு முழுவதும் இடம்பெற்று வருகிறது. உலகளாவிய தமிழ் ஊடகங்கள் அதை முன்னேடுத்துச் செல்கின்றன. ஆதலால்ஒருபுறம் வளங்கொழிக்கும் அதே தமிழ்மொழி, மறுபுறம் புண்பட்டு வருகிறது

அதேவேளை, தமிழை விரும்பியவாறு பயன்படுத்தும் உரிமை எவர்க்கும் உன்டு. பெயர்களையும் விளம்பரங்களையும் விரும்பியவாறு வைத்துக்கொள்ளும் உரிமையும் எவர்க்கும் உண்டு.

ஆங்கில, கிரந்த எழுத்துக்களை இடைச்செருகி, மொழியமைதியை மீறுவதற்கும் உரிமையுண்டு. மீறினால், அதை எதிர்கொள்வதற்கு இன்று பாண்டியனும் இல்லை, மதுரை தமிழ்ச் சங்கமும் இல்லை!

ஆதலால், தமிழை இயன்றளவு சரிவரப் பயன்படுத்தும்படியும், அதை தாறுமாறாகப் பயன்படுத்துவதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளும்படியும்   வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும்.

மணி வேலுப்பிள்ளை, 2024-2025.

No comments:

Post a Comment