மொழியும் மொழிபெயர்ப்பும்

மொழியறிவு குறித்து ஒரு கனடியப் பேராசிரியர் எழுதிய மடல்: 

“மேற்கு ஒன்ராறியோ பல்கலைக் கழகத்தில் நான் ‘முகாமைத்துவ தொடர்பாடல்’ கற்பித்த வேளையில் ஒரு சங்கதியைக் கண்டறிந்தேன். அறிவுக் கூர்மை மிகுந்த எனது மாணவர்கள் தமக்கு அடிப்படை ஆங்கில இலக்கண அறிவு இல்லை என்பதை அறிந்து குழப்பமும் கொதிப்பும் அடைந்தார்கள். தொடர்பாடல் துறைகள் அனைத்திலும் திட்பமான முறையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வேண்டிய அடிப்படைத் தேர்ச்சிகளைப் பள்ளிக் கல்வி அவர்களுக்கு ஊட்டத் தவறியது குறித்து அவர்கள் சீற்றம் அடைந்தார்கள். தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவே அவர்கள் எண்ணினார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் எனது மாணவர்களுக்கு ஊட்டப்பட்டிருக்க வேண்டிய தேர்ச்சிகளை இப்பொழுது ஊட்ட முயல்வதற்கு நானே நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. அந்த வகையில் நானும் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவே எண்ணினேன். நாங்கள் பாடம் படிப்பதே இல்லையா?” (Professor Alexandra Hurst, The Globe and Mail, Toronto, 2007/02/14).

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களும் தமது அடிப்படைத் தமிழ், ஆங்கில இலக்கண அறிவு இரண்டையும் குறித்து குழப்பமும் கொதிப்பும் அடையும் நிலையில் இருக்கக்கூடும். அவர்களுக்குப் பொருந்தக்கூடிய இன்னொரு மடலை ஒரு கனடிய மூதவையாளர் எழுதியிருக்கிறார்: 

This is my last political piece. Hereafter, I shall write brief letters chiding you for your far too frequent errors in grammar, syntax and terminology (Senator Philippe Gigantes, The Globe and Mail, Toronto (இதுவே எனது கடைசி அரசியல் மடல். இனிமேல் இலக்கணம், சொல்தொடரியல், சொல்லாட்சி என்பவற்றில் நீங்கள் தாராளமாய் இழைக்கும் தவறுகளுக்கு உங்களைக் கடிந்து நான் குறுகிய மடல்களை எழுதி அனுப்புவேன்).

வேறொரு மடல்: Many editors have a frighteningly minimal grasp of spelling, grammar, punctuation and syntax – to say nothing of style, substance and context… (Ian Alterman, The New York Times, 1998/07/01 (பதிப்பாளர்கள் பலரும் கையாளும் நடை, பொருள், சந்தர்ப்பம் என்பவற்றை விட்டுவிடுவோம் – வெறும் எழுத்துக்கூட்டல், இலக்கணம், நிறுத்தக்குறியீடு, சொல்தொடரியல் என்பவற்றையே அவர்கள் புரிந்துகொண்டது மிகவும் குறைவு).

இன்னொன்று மெய்யியலாளர் ரசலின் கூற்று: First: never use a long word if a short word will do. So, if you want to make a statement with a great many qualifications, put some of the qualifications in separate sentences. Third: do not let the beginning of your sentence lead the reader to an expectation which is contradicted by the end (Robert E.Egner, Bertrand Russell’s Best, Routledge, 1981, p.213 (முதலாவதாக, ஒரு குறுஞ் சொல் பயன்படுமாயின், பெருஞ் சொல்லை என்றுமே பயன்படுத்தக் கூடாது. (இரண்டாவதாக) பற்பல வரையறைகளுடன் கூடிய ஒரு கூற்றினை நீங்கள் முன்வைக்க விரும்பினால், அவ் வரையறைகளுள் சிலவற்றைப் புறம்பான வசனங்களில் இடவும். மூன்றாவதாக உங்கள் வசனத்தின் தொடக்கம் அதன் இறுதிக்கு முரணான ஓர் எதிர்பார்ப்புக்கு வாசகரை இட்டுச்செல்லும் வண்ணம் அமையக்கூடாது.)

எப்படி எழுதக்கூடாது என்பதற்கு ரசலின் எடுத்துக்காட்டு: Human beings are completely exempt from undesirable behavior patterns only when certain prerequisites, not satisfied except in a small percentage of actual cases, have, through some fortuitous concourse of favorable circumstances, whether congenital or environmental, chanced to combine in producing an individual in whom many factors deviate from the norm in a socially advantageous manner. 

இதனைப் பின்வருமாறு “ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம்” என்று ரசல் ஓர் எள்ளலுடன் கூறுகிறார்: All men are scoundrels, or at any rate almost all. The men who are not must have had unusual luck, both in their birth and in their upbringing (மனிதர்கள் எல்லோரும் அல்லது அநேகமாக மனிதர்கள் எல்லோரும் கயவர்கள். கயவர்கள் அல்லாத மனிதர்கள் தமது பிறப்பையும் வளர்ப்பையும் பொறுத்தவரை அரிய பேறு படைத்தவர்களாய் இருந்திருக்க வேண்டும்). தொடர்ந்து கூறுகிறார் ரசல்: This is shorter and more intelligible, and says just the same thing (இக்கூற்று மிகவும் குறுகியது, புரியக்கூடியது, அதே பொருளையே உணர்த்துவது).

ரசல் முன்வைக்கும் வேறோர் எடுத்துக்காட்டு: ‘Some people marry their deceased wives' sisters’. I can express this in a language which only becomes intelligible after years of study, and this gives me freedom (“சிலர் தமது இறந்த மனைவியரின் சகோதரிகளை மணம் முடிக்கிறார்கள்.” இதனைப் பல ஆண்டுகாளக ஆய்விட்ட பின்னரே புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் என்னால் எடுத்துரைக்க முடியும். அப்படிச் செய்வது எனக்குச் சுதந்திரமும் அளிக்கும்).

இளம் பேராசிரியர்களுக்கு ரசல் கூறும் புத்திமதியில் ஒரு வேடிக்கை வேறு சேர்கிறது: I suggest to young professors that their first work should be written in a jargon only to be understood by the erudite few. With that behind them, they can ever after say what they have to say in a language 'understanded of the people' (இளம் பேராசிரியர்களுக்கு நான் கூறும் யோசனை இதுவே: அவர்களின் முதற் படைப்பு, புலமை வாய்ந்த சிலருக்கு மாத்திரம் புரியக்கூடிய துறைமொழியில் எழுதப்பட வேண்டும்; அதற்கடுத்த படைப்புகளில் அவர்கள் கூறவேண்டியதை மக்களுக்கு விளங்கும் மொழியில் கூறவேண்டும்).

மீண்டும் ஓர் எள்ளலுடன் ரசல் விடைபெறுகிறார்: In these days, when our very lives are at the mercy of the professors, I cannot but think that they would deserve our gratitude if they adopted my advice (எங்கள் வாழ்வே பேராசிரியர்களின் தயவில் தங்கியுள்ள இக்காலகட்டத்தில், அவர்கள் எனது புத்திமதியைக் கைக்கொண்டால் எமது நன்றியறிதலையாவது ஈட்டும் அருகதை அவர்களுக்குக் கிட்டும் என்று நான் நினைக்கிறேன்).

இத்தகைய பிரச்சனைகள் மொழியினால் விளைபவை ஆகா. அவை மொழியைக் கையாள்பவர்களால் விளைபவை. அவ்வாறே மொழிபெயர்ப்பில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மொழிபெயர்ப்பாளர்களால் விளைபவையே ஒழிய, மொழிகளால் விளைபவை அல்ல.

The probation service have found out that there are two types of person appearing before the courts – those who have problems and those who are problems, Simon Cohen, Magistrate, June 1983, The Globe and Mail, Toronto, 2007/02/27 (நீதிமன்றின்முன் தோன்றுவோர் இரண்டு வகையானோர் என்பதை நன்னடத்தைச் சேவைத் துறை கண்டறிந்துள்ளது. ஒரு வகையினரைப் பொறுத்தவரை, அவர்களுக்குப் பிரச்சனை உண்டு. மறு வகையினரைப் பொறுத்தவரை, பிரச்சனையே அவர்கள்தான்!).

அது போலவே மொழிபெயர்;ப்பாளர்களுள் ஒரு வகையினர் தமிழாக்கத்தில் பிரச்சனைகளை எதிர் நோக்குவோர். மறு வகையினரைப் பொறுத்தவரை, பிரச்சனையே அவர்கள்தான்!

மருத்துவர் சிகிச்சையளிப்பது நோயாளிக்கே ஒழிய, நோய்க்கல்ல (The doctor treats a patient, not a disease) என்றார் ஒரு மருத்துவரின் மகனாகிய அரிஸ்டோட்டில். ஓர் ஆளை எத்தகைய நோய் பீடித்துள்ளது என்பதை விட, எத்தகைய ஆளை அந்த நோய் பீடித்துள்ளது என்பதை அறிவதே மிகவும் முக்கியம் - It is much more important to know what sort of a patient has a disease than what sort of disease a patient has (Dr. Sir William Osler, 1849-1919). அது போலவே, எத்தகைய கூற்று மொழிபெயர்க்கப்படுகிறது என்பதை விட, அதனை எத்தகைய ஒருவர் மொழிபெயர்க்கிறார் என்பதே மிகவும் முக்கியம்.

நாம் இதுவரை சுட்டிக்காட்டிய பிரச்சனைகளிலிருந்து கடைத்தேறுவதற்கு தமிழாக்கவியல் (E2T) ஒரு தனித்துறையாக (சிறப்புத் துறையாக) மேலோங்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. ஆங்கில நடையிலிருந்து தமிழ் நடையை மீட்டெடுப்பதே தமிழாக்கவியல் துறையின் தலையாய குறிக்கோளாய் அமைய வேண்டும்.

தமிழ் நடையில் அமையும் தமிழே தமிழாக்கத்தைச் செம்மைப்படுத்தும். அதற்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும் கற்றவர்களாய் மட்டுமன்றி, தமிழையும் ஆங்கிலத்தையும் கற்றவர்களாய் விளங்குவோர் மனமுவந்து களமிறங்க வேண்டும். இரு மொழிகளின் பாணியையும் தேர்ந்து, தெளிந்து பெயர்க்கும் பணியை (பாணியை) அவர்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். தமது தமிழாக்கங்களில் செம்மை (accuracy), சீர்மை (uniformity), திண்மை (specificity) என்னும் மூன்று சிறப்புகளையும் அவர்கள் பொறிக்க வேண்டும். 

தமிழாக்கத்தைச் செம்மைப்படுத்துவதில் ஈடுபடக்கூடிய துறைஞர்களுக்கு சொல் தொகுதிகளும் அகராதிகளும் கைகொடுக்க வல்லவை. ஈழநாட்டிலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு சொல்தொகுதிகளும் அகராதிகளும் வெளிவந்துள்ளன. இவ்விரு நாடுகளிலும் வெளிவந்த அகராதிகளை நால்வகைப்படுத்தலாம்:

(1) தமிழ்-தமிழ் அகராதி (எ-கா: யாழ்ப்பாண அகராதி–1842, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2006).

(2) தமிழ்-ஆங்கில அகராதி (எ-கா: தமிழ்ப் பேரகராதி–Tamil Lexicon-, சென்னைப் பல்கலைக்கழகம், 1924-36).

(3) ஆங்கிலம்-தமிழ் அகராதி (எ-கா: ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம், சென்னைப் பல்கலைக்கழகம், 1963).

(4) ஆங்கில-ஆங்கில அகராதி (எ-கா: Oxford Advanced Learner’s Dictionary, 1948).

தமிழ்-தமிழ் அகராதிகளின் மகிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு: 1842ல் சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை ஆகிய இருவரும் தொகுத்து வெளியிட்ட “யாழ்ப்பாண அகராதி”யில் குடியாட்சி என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. தமிழில் 165 ஆண்டுகளுக்கு மேல் மண்டிக் கிடக்கும் ஓர் அரிய சொல் இது. 1958ல் வெளிவந்த ஓர் ஈழநாட்டுச் சொல்-தொகுதியில் குடியாட்சி, democracy இரண்டும் நேரொத்த சொற்களாய் எடுத்தாளப் பட்டுள்ளன (குடிமையியலும் ஆட்சியியலும், இலங்கை அரசகரும மொழித் திணைக்களம், கொழும்பு, 1958). 1992ல் வெளிவந்த க்ரியாவின் தமிழ்-ஆங்கில அகராதியில் குடியாட்சி, மக்களாட்சி, democracy மூன்றும் நேரொத்த சொற்களாய் இடம்பெற்றுள்ளன. இவை மக்கள் வழக்கிற்கும் துறைஞர் வழக்கிற்கும் உகந்த சொற்கள் என்பதில் ஐயமில்லை.

1958ல் (மீள்பதிப்பாக) வெளிவந்த The Concise Oxford English Dictionary-ஐ அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டு, 1963ல் வெளியிடப்பட்ட அகராதி: சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம். ஆங்கிலத்தில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 650 சொற்கள் புதுக்கப் புகுவதைக் கருத்தில் கொள்ளும்பொழுது, இந்த ஆங்கிலம்-தமிழ் அகராதியில் 40,000 ஆங்கிலச் சொற்கள் துண்டு விழுவது தெரியும். 

இவ்வாறு, எமக்குக் கிடைக்கும் ஆங்கிலம்-தமிழ் அகராதிகளின் சொல்வளமும் பொருள்வளமும் பெரிதும் மட்டுப்பட்டவை. தற்பொழுது புதிய பாணியில் எடுத்தாளப்படும் ஓர் ஆங்கிலச் சொல்லைப் பெயர்ப்பதற்கு, எந்த ஆங்கிலம்-தமிழ் அகராதியும் கைகொடுத்தல் அரிது. உலகளாவிய தரவுப் பரிமாற்றத்தின் பெருக்கத்துக்கும், திட்பத்துக்கும், வேகத்துக்கும் எந்த ஆங்கிலம்-தமிழ் அகராதியாலும் ஈடுகொடுக்க முடியாது. பழைய அகராதிகளை நம்பி, பழைய சங்கதிகளை மொழிபெயர்ப்பதே கடினம். புதியவற்றை மொழிபெயர்ப்பது அதனிலும் கடினம்.

ஆங்கிலத்தில்கூட இதே பிரச்சனை உண்டு. சாக்கிரத்தீசின் மெய்யியலை மீள்நோக்கத் தலைப்பட்ட ஓர் அமெரிக்க அறிஞர் கூறுகிறார்: I found that one could not make valid political or philosophical inferences from translations, not because the translators were incompetent, but because the Greek terms were not fully congruent – as one would say in geometry- with their English equivalents. The translator was forced to choose one of several English approximations. To understand a Greek conceptual term, one had to learn at least enough Greek to grapple with it in the original, for only in the original could one grasp the full potential implications and color of the termI.F.Stone, The Trial of Socrates, Little Brown & Co., Boston-Toronto, 1988, p.x.

(மொழிபெயர்ப்புகளைக் கொண்டு ஏற்புடைய முறையில் அரசியல், மெய்யியல் அனுமானங்களை எவராலும் மேற்கொள்ள முடியாது என்பதை நான் கண்டுகொண்டேன். மொழிபெயர்ப்பாளர்கள் திறமையற்றவர்கள் என்பதல்ல அதற்கான காரணம். கிரேக்க மொழிப் பதங்கள் – கேத்திரகணிதத்தில் கூறப்படுவதுபோல் – அவற்றுக்கு நிகரான ஆங்கிலப் பதங்களுடன் முற்றிலும் ஒத்திசையாமையே அதற்கான காரணம். ஆங்கிலத்தில் பருமட்டாகப் பொருந்தும் பல்வேறு பதங்களுள் ஒன்றைத் தெரிவுசெய்யவேண்டிய நிர்ப்பந்தம் மொழிபெயர்பாளருக்கு ஏற்படும். கிரேக்க மொழியிலுள்ள கருதுபொருட் பதம் ஒன்றை விளங்கிக்கொள்ள முற்படும் ஒருவர், கிரேக்க மொழியிலேயே அந்தப் பதத்துடன் மல்லாடி அதனை விளங்கிக் கொள்வதற்குப் போதிய அளவுக்காவது கிரேக்க மொழியைக் கற்றிருக்க வேண்டும். அந்தப் பதம் உணர்த்தக்கூடிய கருத்துகள், நயம் அனைத்தையும் ஒருவரால் அந்த மொழியிலேயே புரிந்துகொள்ள முடியும்).

அவ்வாறே ஆங்கிலப் பதங்களை (1) ஆங்கிலத்திலேயே நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். (2) ஓர் ஆங்கிலம்-தமிழ் அகராதியிலோ சொல்தொகுதியிலோ காணப்படும் பொருள், அந்த விளக்கத்துடன் உடன்படுகிறதா என்று பார்க்க வேண்டும். (3) உடன்பட்டால், அதனை நாம் எடுத்தாளலாம். (4) உடன்படாவிட்டால், ஆங்கில விளக்கத்தின்படி அதனை நாம் செம்மைப்படுத்தலாம்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று முழங்கி, உலகளாவிய பண்பாட்டுப் பன்மையை விதந்துரைத்த கணியன் பூங்குன்றனாரின் வழித் தோன்றல்களாகிய தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழ்மொழி போல் நெகிழ்ந்து நிலைகொள்ளக் கடமைப்பட்டவர்கள். எமது சொந்தக் காலில் நாம் நிற்கவும் வேண்டும், பிறர் கைகளை நாம் பற்றவும் வேண்டும். அதேவேளை, ஐயுறவு எம்மைத் தடுக்கவும் வேண்டும், ஆய்வு எம்மை முடுக்கவும் வேண்டும். அதனை விடுத்து, ‘எமது அறியாமையை நாம் தமிழின் வறுமை ஆக்கலாகாது’  ஹன்டி பேரின்பநாயகம், (1899-1977).

மணி வேலுப்பிள்ளை, 2025.

No comments:

Post a Comment