மலபார்


உரோமத் தளபதி பிளினி (Pliny, பொ. ஊ: 23-79), கிரேக்க-எகிப்திய ஆய்வாளர்  தொலமி (Ptolemy, 87-170), கிரேக்க புவியியலர் கொஸ்மஸ் (Cosmas Indicopleustes, ?-550), பாரசீக அறிஞர் அல்-பிருனி (Al-Biruni, 973-1048), போர்த்துக்கேய கடலோடி வாஸ்கோட காமா (Vasco da Gama, 1460-1524) உட்பட வெளிநாட்டவர்கள் பலரும் தென்னிந்தியாவை “மலபார்” என்று குறிப்பிடுள்ளார்கள். 


இலங்கைக்கும், தென்னிந்தியாவுக்கும் வந்துசென்ற இத்தாலிய பயணி மார்க்கோ போலோ (Marco Polo, 1254-1324) எழுதிய நூலில் மலபார் என்பது “மாபார்” என்று திரிந்துள்ளது. “மாபார்கள்” அடிக்கடி “பகவானே! பகவானே!” என்று சொல்லி இறைவனைத் துதிப்பதாக அவர் தெரிவிக்கிறார்.   


புத்தளத்தில் தரையிறங்கிய மொரக்கோ நாட்டு யாத்திரிகர் இபின் பதூதா (Ibn Battuta, 1304-1369) “மாபார்” மொழிபேசும் ஆரியச் சக்கரவர்த்தியுடன் தாம் பாரசீக மொழியில் உரையாடியதாகவும், சக்கரவர்த்தியின் பேருதவியுடன் சிவனொளிபாதமலைக்குப் புறப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.  


1658ல் போர்த்துக்கேயரிடமிருந்து யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றச் சென்ற ஒல்லாந்தப் படையுடன் கூடிப்புறப்பட்ட சமயபோதகர் பால்தியஸ் (Philip Baldaeus, 1632-1672) அங்கு “மலபார்” மொழியைக் கற்று, யேசுநாதரின் போதனைகளை மொழிபெயர்த்து சமயப்பணி ஆற்றினார். 


19 ஆண்டுகள் கண்டியில் சிறையிருந்த பின்னர், அனுராதபுரத்துக்கு தப்பியோடி, வன்னிக்காட்டை ஊடறுத்து, அருவியாறு வழியே, ஒல்லாந்தரின் மன்னார் மாவட்ட அரிப்புக் கோட்டைக்கு தப்பிச்சென்ற ரொபேர்ட் நொக்ஸ் (Robert Knox, 1641-1720) “மலபார்” மன்னன் கயிலை வன்னியனின் ஆட்களிடம் அகப்படுவது “சட்டிக்குள்ளிருந்து அடுப்புக்குள் விழுவதை ஒக்கும்” என்று பதறுகிறார். 


வழியில் அந்தணர்கள் இருவர் எதிர்ப்பட்டபொழுது, அவர்களிடம் அம்பு-வில் இருக்கும் என்று அஞ்சிய நொக்சும் தோழரும் நடையை நிறுத்தி, தமது கத்தி, கட்டாரிகளை உருவுகிறார்கள். அந்தணர்கள் சோறு, மரக்கறி சமைப்பது புலப்படவே, “நெருங்கி வரலாமா?” என்று சிங்களத்தில் கத்துகிறார்கள். பதிலுக்கு அந்தணர்கள் “மலபார்” மொழியில் கத்துகிறார்கள். எதுவும் புரியாத நொக்சும் தோழரும் சைகை மொழியைப் பயன்படுத்தி நெருங்கி வருகிறார்கள். காட்டுப்பாதையில் புண்பட்ட முதுகை இருவரும் காட்டுகிறார்கள். அந்தணர்கள் உளமிரங்கி, வானத்தை நோக்கி கைகளை வீசி, “தம்பிரானே! தம்பிரானே!” என்று “மலபார்” மொழியில் துதித்தபடி தமது சைவச் சாப்பாட்டை அவர்களுக்கு ஈகின்றார்கள். “நெடுநாட்களுக்குப் பிறகு வயிறு புடைக்கச் சாப்பிடக் கிடைத்தது” என்று நன்றி பாராட்டுகிறார் நொக்ஸ்.


ஒல்லாந்த மொழியில் தொகுக்கப்பட்ட தேசவழமை சட்டக்கோவையின் முகப்பில் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது: “1706ம் ஆண்டு ஆளுநர் கோ. ஜோ. சைமன்சின் கட்டளைப்படி கிளாஸ் ஐசாக்சினால் திரட்டப்பட்ட தேசவழமையை அல்லது யாழ்ப்பாண மாகாணத்து “மலபார்” வாசிகளின் வழமைகளை முற்றிலும் நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குவிதி, 1707-01-30.” 


“12 தமிழ் முதலியார்கள் தேசவழமையை மீள்நோக்கி தமிழில் மொழிபெயர்த்தார்கள்” (John H. Martyn, Jaffna Notes, 1923).


ஆங்கிலேயரின் கொழும்பு மாநகர அரண்படையில் தொழுகைக் குருவாக விளங்கிய கோர்டினர் தனது இராமேஸ்வர பயணம் குறித்து இப்படி எழுதுகிறார்: "பக்கப்பாடாக திருநீறு பூசி சிவனை வழிபடுவோர் “மலபார்கள்” எனப்பட்டார்கள்… முத்துக்குளிப்பு விளம்பரம் “மலபார்” மொழியிலும் ஆங்கில மொழியிலும் விடுக்கப்பட்டது; முத்துக்குளிக்க முதல் சுறாக்களைக் கட்டிப்போடும் மந்திரவாதியை “மலபார்” மொழியில் கடல்குட்டி என்கிறார்கள்… எமது “மலபார்” உரைபெயர்ப்பாளரின் பெயர்: ஐயா முதலி" (James Cordiner, A Description of Ceylon, London, 1807).


பொது ஊழி 6ம் நூற்றாண்டில் பாளி மொழியில் மகாவம்சத்தை எழுதிய மகாநாமதேரர்  தமிழரை "தெமளோ" என்று சொல்லுகிறார். அதன்படி 1837ல் முதன்முதல் மகாவம்ச பிரதிகளுள் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டேர்னர் (George Turnour (1799–1843) “Damilas” என்று குறிப்பிடுகிறார். அதை வைத்து தனது நூலை எழுதிய தெனன்ற் “மலபார்கள்” என்கிறார் (James Emerson Tennent, CEYLON, 1860).


மகாவம்சத்தை முதன்முதல் (1908ல்) ஜேர்மன் மொழியில் பெயர்த்த கைகர் (Wilhelm Geiger, 1856-1943), அந்த மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் (1912ல்) பெயர்த்த போட் (Bode), அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செப்பனிட்டு வெளியிட்ட கைகர் இருவரும் “Damilas”  என்றுதான் குறிப்பிடுகிறார்கள். 


தெனன்ற் “மலபார்”, “தமிழ்” இரண்டையும் மாறிமாறிப் பயன்படுத்துகிறார்: “எபிரேய மொழியில் குரங்கு, தந்தம், மயில் என்பவை குறித்து பயன்படுத்தப்படும் சொற்கள் “தமிழ்ச்” சொற்கள்… “மலபார்” கூலிகள் எலிகளையும் அகழான்களையும் பிடித்து எண்ணெயில் பொரித்து உண்கிறார்கள்… “தமிழரும்” சிங்களவரும் ஓணானை உயிரோடு பிடித்து அதன் நாக்கைப் பிடுங்கி வாயில் போடும் காட்டுமிராண்டித்தனம் படைத்தவர்கள்… சேனன், குத்தியன் ஆகிய “மலபார்ப்” படையினர் இருவரும் சிங்கள மன்னன் சூரதீசனைக் கொன்று 22 ஆண்டுகள் ஆண்டார்கள். பிறகு சூரதீசனின் படையினர் அவர்களைக் கொன்று ஆட்சியை மீட்டு 10 ஆண்டுகளுக்குள்,  எல்லாளன் எனும் “மலபார்ச்” சோழன், சிங்கள மன்னன் அசேலனைக் கொன்று 44 ஆண்டுகள் ஆண்டான். நண்பர், பகைவர் என்ற பேதமின்றி நீதி பாலித்தான்… மகாவம்சம் அவர்களை தெமளோ என்கிறது. ஆனாலும் சிங்கள கால ஏடுகளில் உள்ளபடி தென்னிந்தியாவிலிருந்து படடையெடுத்து வந்தவர்களை நான் “மலபார்கள்” என்றேன்…" என்கிறார் தெனன்ற்!  


அநகாரிக தருமபாலா (1864-1933) தமிழரை “மலபார்கள்,” “பிறநாட்டவர்கள்” என்றும், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். “தமிழர் இந்த நாட்டவர்கள் அல்லவா!” என்று கேட்டதற்கு, “நான் இந்தியரை (மலையகத் தமிழரை) சொன்னேன்” என்று கதையை மாற்றினார். அவரது உள்ளக்கிடக்கை இங்கு வெளிப்படையாகப் புலப்படுகிறது. 


Signed an order in Malabars என்பது Signed an order in Tamil என்று பொருள்படும்” என்கிறார் லூவிஸ் (John Penry Lewis, A Manual of The Vanni Districts, 1895). அதாவது Malabars எனும் பன்மை தமிழ்மொழியைக் குறிப்பதாகக் கொள்கிறார். மறுபுறம் “Tamils were called Malabars,” என்பதை ஏற்றுக்கொள்கிறார் இராசநாயகம் (Mudaliyar C. Rasanayagam, Ancient Jaffna, 1926). 


1931ல் தென்னிந்தியாவிலிருந்து புறப்பட்ட “மலபார்” எனும் கப்பல் மூடுபனியில் சிக்குண்டு, சேதமடைந்து ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரத்துக்கு தென்கிழக்காக 12 கிலோமீட்டர் தூரத்தில்  கரையொதுங்கியது. அதிலிருந்து அந்த இடத்துக்கு மலபார் எனும் பெயர் வழங்கி வருகிறது.  



இனி “மலபார்” எனும் சொல்லின் தோற்றுவாய் குறித்து ஓர் எளிய ஊகத்தை நாம் முன்வைக்கலாம்: பொது ஊழியின் துவக்கத்தில் இந்தியாவுக்கு வந்த அராபிய, பாரசீக, ஐரோப்பிய வணிகர்களின் கண்களுக்கு முதன்முதல் தென்னிந்தியாவின் மேற்குக் கரையோர குறிஞ்சித்திணை தென்பட்டிருக்கலாம். மலைச்சாரல் என்று பொருள்படும் “மலைவாரம்” எனும் திராவிட மொழிகளுக்குப் பொதுவான  தமிழ்ச்சொல் அராபிய, பாரசீக இஸ்லாமிய வணிகர்கள் வாயிலாக கிரேக்கர், உரோமர் முதலிய ஐரோப்பியரைச் சென்றடைந்தபொழுது, அது “மலபார்” என்று திரிந்திருக்கலாம். 


“வ”கரம் ஐரோப்பிய மொழிகளில் “ப”கரமாகத் திரிபதுண்டு. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணப் பட்டினத்தின் ஒல்லாந்த தளபதி சுவார்தகரூன் (Hendrick Zwaardecroon, 1667-1728) விட்டுச்சென்ற திரட்டில்  “வெள்ளாளர்” என்பது “Bellalars”  என்று திரிந்துள்ளது. 1908ல் இலங்கையின் மரஞ்செடிகொடிகளைப் பதிவிட்ட ஜோன் பென்றி லூவிஸ் (John Penry Lewis) “வள்ளம்” என்பதை ballum என்று குறிப்பிட்டுள்ளார். இற்றைவரை “வெற்றிலை” என்பது ஆங்கிலத்தில் betel என்று வழங்கி வருகிறது. அதே விதமாகவே bank என்பது தமிழில் “வங்கி” எனவும், bankruptcy என்பது “வங்குறோத்து” எனவும் திரிந்துள்ளன. 



ஏறத்தாழ 20 நூற்றாண்டுகளாக திராவிடப் புலத்தையும், மக்களையும், மொழியையும் குறித்த “மலபார்” எனும் சொல் இன்று குன்றிக்குறுகி கேரளாவில் ஒரு பகுதியை மட்டும் குறிக்கின்றது. “மலபார் கடுகதி” (Malabar Express) என்பது திருவனந்தபுரத்துக்கும், மங்களூருக்கும் இடையே ஓடும் கடுகதி தொடருந்துச் சேவை என்பது தெரிந்ததே. 

________________________________

மணி வேலுப்பிள்ளை, 2022-11-22.

No comments:

Post a Comment