லெனினைச் சாட்டி 

    அதிகாரத்துக்கு ஆசைப்படல் 

    அஜித் ராஜபக்சா


2026 ஜனவரி 21ம் திகதி மகாவலி நிலையத்தில், “லெனினை வாசிப்போம்” எனும் தொனிப்பொருளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் லால் காந்தா உரையாற்றினார். அது மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே. வி. பி.யின்) தொழிற்சங்கக் கிளை நடத்திய கூட்டம். கடந்த 15 ஆண்டுகளாக லெனினை வாசித்து வந்ததாக மார்தட்டிய லால் காந்தா, தனது கட்சி தொடர்ந்தும் லெனினை அடியொற்றி நடைபயில்வதாகத் தெரிவித்தார்.  


“எதிர்ப்பதை விட ஆள்வது எளிது, “அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதே” அடுத்த இலக்கு; அந்த இலக்கை எய்துவதற்காக ஒரு கருத்தியல்வாரியான ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும், அதைக் கையோடு செய்ய முடியாது; கட்டம் கட்டமாகவே செய்யவேண்டும்” என்று வலியுறுத்திப் பேசினார் லால் காந்தா.


“கோட்பாட்டின் அடிப்படையிலேயே அரசாங்கம் இயங்கி வருகிறது; அந்த இயங்குமுறையை நெறிப்படுத்தும் தந்திரோபாய திட்டத்தை பகிரங்கமாக அறிவிக்க முடியாது; அது ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுவிட்டது; கட்சிக்குள் மாத்திரமே அது பகிரப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.    


“ஈற்றில் அரசும் அரசாங்கமும் இரண்டறக் கலந்த ஒன்றாகவே கொள்ளப்பட வேண்டும்; எனினும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் காணப்பட்ட அதே திடசித்தம், அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் காணப்படுகிறதா என்பதில் ஐயுறவு நிலவுகிறது; அத்தகைய திடசித்தம் போதியளவு காணப்படாதும் போகலாம்” என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.


அமைச்சர் லால் காந்தா


ஜே. வி. பி.யின் மார்க்சிய வரலாறு

குட்டி முதலாளித்துவ வர்க்கத்தில் உதித்த ஜே. வி. பி.,  பல்வேறு அரசியற் காலகட்டங்களில் இடதுபுறமும் வலதுபுறமும் சாய்ந்து வந்துள்ளது. துவக்கத்திலிருந்தே மார்க்சிய சிந்தனையாளர்களின் மேற்கோள்களைத் தெரிந்தெடுத்து, அவர்களது கருத்துக்களை சந்தர்ப்பவாத முறையில், தமது சொந்த அரசியல் தேவைகளுக்கேற்ப, அது மாற்றியமைத்து வந்தது. 


குட்டி முதலாளித்துவ கருத்தியல் என்பது ஈடாட்டம் கொண்டது, தனிமனிதவாதம் மிகுந்தது, முதலாளித்துவ மேட்டிமைக் குழாத்துக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடைப்பட்ட வர்க்க நிலைப்பாட்டினால் உருவாக்கப்பட்டது  என்றெல்லாம்  மர்க்சிய சிந்தனையாளர்கள் பலர் தெரிவிக்கின்றார்கள். இக்குழுமம் இரு தரப்புகளுக்கு இடையே ஊசலாடுகின்றது, ஒரு “முரண்பட்ட வாழ்வுக் கண்ணோட்டம்” கொண்டது என்று பொதுவுடைமைக் கொள்கை விளக்கத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.  


இந்தியா அகலக்கால் வைப்பதாக ஜே. வி. பி. துவக்கத்தில் பீதி கிளப்பியது. கொஞ்சக்காலம் கழித்து ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்த ஜே. வி. பி., தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மட்டுமல்ல, பிரிவினை உரிமையையும் ஏற்றுக்கொண்டது. அடுத்த கட்டத்தில் அதற்கு மாறாக வலதுசாரித் தரப்புகளுடன் சேர்ந்து, வடக்கு-கிழக்கிற்கு மாகாண மன்ற அதிகாரங்கள் வழங்குவதை எதிர்த்தது.  


இந்த மாகாண மன்ற எதிர்ப்பியக்கம் கொடிய வன்முறையாய் ஓங்கியது. இடதுசாரிகளும், தொழிற்சங்கத் தலைவர்களும், மாணவர் முன்னணித் தலைவர்களும், 13வது திருத்தத்தை ஆதரித்த பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் இச்செயல்களை நியாயப்படுத்த மார்க்சிய மேற்கோள்கள் முன்வைக்கப்பட்டன. மார்க்சியத்தை “உள்நாட்டு நிலைமைகளுக்கு” ஏற்ப மாற்றியமைக்கும் சாட்டில் அது திரித்துரைக்கப்பட்டது.  இன்று லால் காந்தாவும் அவரது கூட்டாளிகளும் இழையும் வழுவாமல் அந்த அணுகுமுறையையே தொடர்ந்தும் கடைப்பித்து வருகிறார்கள்.

 

இலங்கை-இந்திய உடன்பாட்டை ஆதரித்த இடதுசாரிகள் மீது இலக்கு வைத்தபொழுது, “எட்டத்து எதிரியை” ஒழிக்க முன்னர் “கிட்டிய எதிரியை” ஒழிக்கவேண்டும் என்று லெனின் கூறியதாக மார்தட்டி, அவர் கூற்றினைத் திரித்துரைத்து,  அக்கொலைகளை அவர்கள் நியாயப்படுத்தினார்கள். 


வெளிநாட்டு எதிரிகளைத் தோற்கடிக்கும் விடயத்தை விட உள்நாட்டு ஆளும் வர்க்கத்தையும் அரசையும் தோற்கடிக்கும் விடயத்துக்கு அதிக முதன்மை அளிக்கப்பட வேண்டும் என்று லெனின் வலியுறுத்தியது உண்மையே. வெளிநாட்டு எதிரிகளை எதிர்த்துப் போராடும் சாக்கில் தமது சொந்த முதலாளித்துவ வர்க்கத்தை ஆதரிக்கும் புரட்சிவாதிகளை எதிர்ப்பதற்காக முதலாம் உலகப் போரின் பொழுது லெனின் கூறிய விடயம் அது. தமது அரசியற் கொலைகளுக்கு நியாயம் கற்பிப்பதற்காக இந்த வாதத்தை ஜே. வி. பி. திரித்துரைத்தது. 


வலதுசாரி அரசாங்கங்களில் பங்குபற்றிய வேளைகளில் அல்லது தேசியவாதத் தரப்புகளுடன் உறவாடிய வேளைகளில் கூட, ஜே. வி. பி. தொடர்ந்தும் தன்னை மார்க்சிய-லெனினியக் கட்சியென முழங்கி, செங்கொடிகளையும், மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் படங்களையும் ஏந்திக் கொண்டது. பெலவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்திலும் அதே படங்கள் வேறு தொங்குகின்றன.


தாம் அன்று கண்டித்த அனைத்துநாட்டு நாணய நிதியத்தின் அதே நிகழ்ச்சித்திட்டத்தை, இன்று அவர்கள் மும்முரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அதேவேளை, அரசாங்க அதிகாரத்தை தாம் கைப்பற்றி விட்டதாகவும், சமவுடைமைப் பாதையில் தாம் பீடுநடை போடுவதாகவும், இனி அரச அதிகரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும்  முழங்குகின்றார் லால் காந்தா!  


அடிமட்டத் தோழர்களை ஏய்த்தல்

அடிமட்டத் தோழர்களை லால் காந்தா திரும்பவும் ஏமாற்றப் பார்க்கின்றார். குறுகிய, அரசியற் சித்தநெறிப் பயிற்சியளித்து (dogmatic training) உருவாக்கிய தமது தோழர்களை விளித்து, முதலாளித்துவத்தின் மூலம் சமவுடைமையை எய்த முடியும்; முதலாளித்துவ குடியாட்சியை முதலாளித்துவம் நிறைவேற்றத் தவறியிருக்கலாம்; முதலாளித்துவ குடியாட்சி நிறைவேற்றத் தவறிய பணிகளை எமது கட்சி நிறைவேற்றி வருகிறது என்றெல்லாம் வலியுறுத்துகின்றார் லால் காந்தா. 


லெனினை அடிக்கடி மேற்கோள்காட்டும் லால் காந்தா, முதலாளித்துவ முறைமையில் மெய்யான குடியாட்சி நெறிசார்ந்த சீர்திருத்தங்கள் கைகூடப் போவதில்லை என்று ஆனானப்பட்ட லெனினே  வாதாடியதை தவிர்த்து விடுகின்றார்! முதலாளித்துவ முறைமையில் தேர்தல்வழிவந்த கட்டமைப்புகள் மெய்யான அதிகாரம் செலுத்துவதில்லை; முதலாளிகள், வங்கியாளர்கள், ஏகபோக அமைப்புகளின் சொந்தக்காரர்களே அதில் மெய்யான அதிகாரம் செலுத்துகின்றார்கள் என்று லெனின் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.  முதலாளித்துவ முறைமையில் நாடாளுமன்றக் குடியாட்சி என்பது வெறுமனே ஓர் ஒப்பாசாரமாய் அல்லது முதலாளித்துவக் குடியாட்சியாய் அமைகின்றது என்று வாதாடினார் லெனின்.


தேசிய மக்கள் சக்தியும் “அரச அதிகாரத்தைக் கைப்பற்றும்” மாயையும்

“அரச அதிகாரத்தைக் கைப்பற்றி”, அரச கட்டமைப்பை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிப்பூட்டி, பல தசாப்தங்களாக இலங்கையை ஆண்ட மேட்டிமைக் குழாத்தின் அழுங்குப்பிடியைத் தகர்க்க வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்ததே தேசிய மக்கள் சக்தி. 


இடதுசாரி அரசியற் கோட்பாட்டின்படி அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது வெறுமனே ஓர் அரசாங்கத்தை அமைப்பது அல்லது அமைச்சுக்களைக் கையேற்பது என்று பொருள்படாது; மூலதனம் அரசின்மீது செலுத்தும் ஆதிக்கத்தை தகர்ப்பது என்றே பொருள்படும்; குறிப்பாக நிதிய மூலதனம், ஏகபோக வணிகக் குழுமங்கள், தேர்தல் முடிபுகளைப் பொருட்படுத்தாமல் பொருளாதாரக் கொள்கையை வரையறுக்கும் வெளிநாட்டுத் தரப்புகள் அரசின்மீது செலுத்தும் செல்வாக்கைத் தகர்ப்பது என்றே பொருள்படும். 


மேற்படி நியமத்தின்படி நோக்கினால், அரசாங்கம் அரச அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டதாகக் கொள்ளமுடியாது; அதாவது,  அனைத்துநாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமையச் செயற்படும் ஓர் அரசாங்கம், அரச அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டதாகக் கொள்ளமுடியாது. அரசிறையை (revenue-ஐ) மட்டுப்படுத்தும்படி, அரச நிறுவனங்களை மீளக்கட்டமைக்கும்படி, சமூகநல செலவை வெட்டிக் குறைக்கும்படி, குடியாட்சிநெறிக்கு உட்பட்ட தெரிவுகளைக் குறுக்கும்படி, அதாவது தேசிய இறைமைக்கு வரம்புகட்டும்படி அனைத்துநாட்டு நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

அனைத்துநாட்டு நாணய நிதியத்தின் நம்பிக்கையை ஈட்டி, அதன் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே அந்நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒருவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது வெளிப்படையாகவே புலப்படுகிறது. அதேவேளை, தேசிய மக்கள் சக்தி மேற்படி கட்டுக்கோப்பினை ஆரத்தழுவியது மட்டுமல்லாமல், அதை தவிர்க்கவியலாத செல்நெறி என்று, பொறுப்புவாய்ந்த செல்நெறி என்று வாதாடி வருகின்றது. அத்துடன் செல்வாக்குமிகுந்த உள்நாட்டு வணிகப் பேர்வழிகளுடன் கூட்டுச்சேர்ந்து, அதை பொருளாதார மீட்சிக்கு வேண்டிய நடைமுறை அணுகுமுறையாக முன்வைத்துள்ளது. எந்த மேட்டிமைக் கட்டமைப்பைத் தகர்க்க அன்று ஜே. வி. பி. வாக்குறுதி அளித்ததோ, அந்த மேட்டிமைக் கட்டமைப்பையே இன்று அது மீளவும் நிலைநிறுத்துகின்றது. 


இலங்கையின் உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கம் தேசிய முற்போக்கு முதலாளித்துவ வர்க்கம் அல்ல. ஏகபோக இறக்குமதி, அரச பாதுகாப்பு, வரிச்சலுகை, வெளிநாட்டு மூலதனம் என்பவற்றில் பெரிதும் தங்கியிருக்கும் வர்க்கம் அது.  அதனுடன் கூட்டுச்சேர்வது மேட்டிமைக் குழாத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துமேயொழிய, பலவீனப்படுத்தாது. எனவே, தேசிய மக்கள் சக்தி என்ன செய்கின்றது? இடதுசாரித்துவ முகமூடி அணிந்துகொண்டு, தீவிர சொற்சிலம்பம் புரிந்துகொண்டு, முதலாளித்துவ நெருக்கடியை அது சமாளித்து வருகின்றது! 


ஊழல்-தடுப்பு நடவடிக்கைகள், நிருவாக வினைத்திறன், அரசிறை ஒழுக்கம் என்பன ஆளுகையை மேம்படுத்தக் கூடும்; ஆனால் பொருளாதார அதிகாரம் செலுத்துவோரை அல்லது முழுமுதற் கொள்கை வகுப்பவர்களை அவை மாற்றுவதில்லை. நிலையூன்றிய முதலாளித்துவ அதிகார உறவுகளை வலுப்படுத்தும் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு இடதுசாரித்துவ மொழியைப் பயன்படுத்துவது அரசியல் வஞ்சனை ஆகும்; நாடுகளுக்கு இடைப்பட்டதோ அல்லவோ எதுவாயினும், இது அரசியல் வஞ்சனையே.


தேசிய மக்கள் சக்தி ஒரு நேரிய கட்சி என்றால், தனது கொள்கைத் திட்டத்தின் மட்டுப்பாடுகளை அது ஒப்புக்கொள்ள வேண்டும். அனைத்துநாட்டு நாணய நிதியத்து மேற்பார்வையின் கீழும், மேட்டிமைக் குழாத்தின் ஆதரவுடனும்  தீவிர நிலைமாற்றம் கைகூடப் போவதில்லை. மாறாக, தேசிய மக்கள் சக்தி மெய்யாகவே அரச அதிகாரத்தைக் கைப்பற்ற எண்ணினால், அனைத்துநாட்டு நாணய நிதியம் விதித்த சிக்கனம், வரி உயர்வுகள், பொதுநலப் பணிகளை வெட்டிக் குறைத்தல், உள்நாட்டு மூலதனத்தைப் பாதுகாத்தல் என்பவற்றுடன்  தமது இலக்கு இசைவுபடும் விதத்தை அது விளக்க வேண்டும். இற்றைவரை தேசிய மக்கள் சக்தி அதை ஒப்புக்கொள்ளவுமில்லை, விளக்கம் அளிக்கவும் இல்லை. 


முதலாளித்துவ நெருக்கடிகளின் மூலகாரணிகளை எதிர்கொள்வதை விடுத்து, அந்நெருக்கடிகளைச் சமாளிக்கும் இடதுசாரித்துவ அரசாங்கங்கள் ஈற்றில் தமது சமூகத் தளத்தையே  கையாலாகாத நிலைக்குத் தள்ளுவதை வரலாறு காட்டுகின்றது. உறுதிப்பாட்டைச் சாட்டி சிக்கனத்தை நடைமுறைப்படுத்தும் பொழுதும், மக்களை அணிதிரட்டுவதை விடுத்து அவர்களைக் கட்டுப்படுத்தி பொறுமைகாக்கச் செய்யும்பொழுதும், சமூகத்தின் சீற்றம் உருமாறுமேயொழியத் தணியப் போவதில்லை. 


இலங்கையில் பொருளாதார நீதியைப் பின்தள்ளி,  ஒழுங்கு-பண்பாட்டுப் பாதுகாப்பு-வலிமைவாய்ந்த ஆட்சிபீடம் என்பவற்றை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்து, தணிக்கப்படாத சீற்றத்தை எளிதில் இனத்துவ-தேசிய சொற்பெருக்காகத் திசைதிருப்ப முடியும்; அதனால் அரசியற் தோல்விக்கு உள்ளாகும் ஆபத்து உண்டாகும்; மேற்படி நெருக்கடிக்கு எதிராக  அல்லாமல், அதன் தருக்க விளைவாகவே வன்கோன்மை இன்னும் ஆழ்ந்து நிலையூன்றி வழமைப்பட்டுவிடும்.


லெனினது இன்றைய பொருத்தப்பாடு 

லால் காந்தா ஆண்டுக் கணக்காக லெனினை வாசித்தும் கூட, உரிய திறனாய்வில் ஈடுபடத் தவறிவிட்டார்.  சித்தநெறி படைத்த ஜே. வி. பி.யிடம் திறனாயும் திறனோ நாட்டமோ கிடையாது. தற்கால மார்க்சிய அறிவார்ந்தோர் லெனினை முற்றுமுழுதாக நிராகரிக்கவில்லை. அவரது தீர்வுகள் வரலாற்றுக் காலகட்டத்துடன் மட்டுப்பட்டவை. அவற்றை இன்று கைக்கொண்டால் ஆபத்து விளையும். 

குடியாட்சிக் கட்டமைப்புகளை அகற்றிவிட்டு, கட்சியின் மேட்டிமைக் குழாங்களைப் பதவியில் அமர்த்துவது ஒரு மாற்றுவழி அல்ல, வெறுமனே ஒரு பதிலீடு என்பது அறிவார்ந்தோரின் வாதாட்டம். அதற்குப் பதிலாக, தீவிரமான முறையில் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து, அதிகாரங்களைப் பன்முகப்படுத்தி, குடியாட்சி நெறிப்படி வணிக அமைப்புகளையும் நிறுவனங்களையும் நிருவகிக்கும் யோசனைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். குடியாட்சி என்பது வெறுமனே ஒரு முதலாளித்துவ ஆடம்பரம் அல்ல; அது எந்த சமவுடைமைத் திட்டத்தினதும் கருப்பொருளாகும் என்பது அறிவார்ந்தோரின் வாதாட்டம். 


மாற்றுக்கருத்தை அடக்கி ஒடுக்கியவுடன் சமவுடைமை என்பது அதன் சட்டப்பேறினையும், திருந்திக்கொள்வதற்கான  விமர்சனங்களையும் இழந்து, ஊழலுக்கும் தேக்கநிலைக்கும் உள்ளாகிவிடுகின்றது.


குறிப்பாக செயற்கை நுண்ணறிவும், பாரிய தரவுகளும் ஓங்கிய இன்றைய காலகட்டத்தில் 20ம் நூற்றாண்டின் திட்டமிடல் முறைமைகள் வழக்கொழிந்து போய்விட்டன என்பது சிலாவோஜ் சிசெக் (Slavoj Žižek) போன்ற மெய்யியலாளர்களின் வாதம். சமவுடைமை அரசுகள் என்றுமே அடையாத முன்னேற்றத்தை முதலாளித்துவம் மேன்மேலும் அடைந்துள்ளது. அதாவது திட்டமிடும் துறையில் லெனினிய பொருளாதார முறைமைகள் நாட்பட்டவை ஆகிவிட்டன. 


சமவுடைமை நெறிப்படி நிலைமாற்றம் அடைவதற்கு அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தீர்க்கமான வழி என்று லெனின் நம்பினார். ஆனால் அத்தகைய அதிகார மையமாக இக்கால முதலாளித்துவ அரசு விளங்கவில்லை என்பது சிலாவோஜ் சிசெக், யானிஸ் வரவ்வகிஸ் (Yanis Varoufakis) போன்ற சிந்தனையாளர்களின் வாதம்.   


சித்தநெறிவாதம் (dogmatism), தேசியம், வன்கோன்மை என்பவற்றை அறவே கண்டித்த பிரித்தானிய மெய்யியலாளர் பேட்ராண்ட் ரசல் (Bertrand Russell), வெறுமனே முதலாளித்துவத்தை ஒழித்தவுடன் குடியாட்சி மலர்ந்துவிடாது என்று எச்சரித்தார். சோவியத் ஒன்றியத்தை அவதானித்த பிறகு, போல்சிவிக்வாதம் ஓர் ஆளும் வர்க்கத்துக்குப் பதிலாக இன்னோர் ஆளும் வர்க்கத்தையும், தொழிலாளிகளின் மெய்யான அதிகாரத்துக்குப் பதிலாக, சலுகை அனுபவிக்கும் கட்சி அலுவலர்களின் அதிகாரத்தையும் தொற்றுவித்தது என்று தெரிவித்தார். “தற்காலிக” சர்வாதிகாரம் நிரந்தர சர்வாதிகாரமாய் மாறும், அதிகாரத்தை ஒருமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டினால், வினைத்திறன் குன்றி, தேக்கநிலை உண்டாகும், பலவந்தம் கொண்டு கட்டியெழுப்பப்படும் சமூகம் மெய்யான சுதந்திரத்தை ஏற்படுத்தாது என்றெல்லாம் அவர் ஆரூடம் கூறினார். 


ரசலின் தொலைநோக்கிற்குப் புலப்பட்டதே இரசியாவில் பெரிதும் நிகழ்ந்தது. போல்சிவிக் அரசு பாரிய அடக்குமுறையில் ஈடுபட்டு, கட்சிக்குள் ஓங்கிய மாற்றுத் தலைவர்களை ஒழித்துக்கட்டியது. அதன் பின்னர் வேறு நாடுகளில் அதே கருத்தியலைக் கடைப்பிடித்த கட்சிகள் அத்தகைய அழிவினை ஏற்படுத்தின. இனிமேல் அத்தகைய நாட்பட்ட அணுகுமுறைகளை முன்வைத்தால், ஆபத்து விளையும். இலங்கை அத்தகைய வழியில் செல்வதை எவரும் விரும்பவில்லை. 


லால் காந்தாவும் அவருடைய கூட்டாளிகளும் சமவுடைமை பற்றிய கற்பனைகளை இட்டுக்கட்டாமல், தமது முதலாளித்துவ நாட்டத்தை ஒப்புக்கொண்டால், அனைவருக்கும் நன்மை பயக்கும். பொய்கள் ஒரு திட்டத்துக்கு ஓரளவுக்கே கைகொடுக்கும். 


முதலாளித்துவத்துக்கு ஒரு மெய்யான மாற்றுவழியைச் சிந்தித்து முன்வைக்கும் வல்லமை அற்றதாக இருப்பதே, இக்கால இடதுசாரித்துவத்துக்கு நேர்ந்துள்ள தலையாய நெருக்கடி என்கிறார் யானிஸ் வரவ்வகிஸ். முதலாளித்துவத்துக்குப் பிறகு வருவதென்ன? அது எப்படிச் செயற்படும்? அதற்கும் தற்போதைய முறைமைக்கும் இடையே காணப்படும் முக்கிய வேறுபாடு என்ன? தொலைநோக்கற்ற அரசியல் திறனாய்வினுள் அகப்பட்டுள்ள இடதுசாரித்துவம் இவ்வினாக்களை காலங்காலமாகத் தவிர்த்துவருகிறது என்பது அவரது வாதம். 

குடியாட்சியை வெறுமனே கண்டித்தால் மட்டும் போதாது. ஓர் ஒருங்கிசைவான, தரவுநிறைந்த, செயற்படுத்தக்கூடிய மாற்றுத்திட்டமே உடனடியாகத் தேவைப்படுகின்றது. அத்தகைய திட்டத்தை வகுப்பது கடினம்; எனினும் அரசியலில் அத்தகைய திட்டத்தை வகுப்பது தவிர்க்கமுடியாத ஒன்று (Ajith Rajapaksa, The Lenin That Power Prefers, Colombo Telegraph,  2026-01-31, translated by Mani Velupillai, 2026-02-05).