சிக்ருன் இராசேந்திரம் 

அரை நூற்றாண்டு கழித்து  

தனது காதலனையும் அவனது  தாயகத்தையும் 

சி-நோர் கனவையும் நினைந்து 

யாழ்வரவு


சிக்ருன் தனது யாழ்ப்பாண வீட்டில்


கட்டுரையாளர்: சந்தனி கிரிந்தி


1967ல் நோர்வே நாட்டவரான சிக்ருன் இராசேந்திரம் தனது கணவர் அன்ரனி இராசேந்திரத்துடனும், தமது இரு பிள்ளைகளுடனும் யாழ்ப்பாணத்துக்கு வந்தபொழுது, அங்கே ஒரு புதுமை தோன்றியது. ஒரு வெள்ளைப் பெண்மணியின் நடமாட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் வெளியே செல்லும் வேளைகளில் சிறியோரும் முதியோரும் பின்தொடர்ந்தார்கள்.

சிக்ருன், புதல்விகள் சிவ், ரன்வெயிக், 

அவர்களுக்கு உணவு வழங்கும் பெண்கள்


1969ல் சி-நோர் பணியளர்களுடன் 

மதிய உணவு உண்டு மகிழும் அன்ரனி  


இன்று யாழ்ப்பாணத்தில் சிக்ருன் வெளிநாட்டவர் அல்ல, நன்கு தமிழ் பேசும் உள்நாட்டவர். உள்ளூர் வழக்கங்களுக்கு அமைந்து நடப்பவர். யாழ்ப்பாணத்துப் பெண்மணி போலவே நடமாடுபவர். 

1963ல் இராசேந்திரம், சிக்ருன் 

அன்ரனியின் கனவு


1960ல் அன்ரனியும் ஒரு நண்பரும் குருநகரிலிருந்து இங்கிலாந்து சென்று, அங்கு கடற்றொழில் பயிலும் நோக்குடன் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்கள். அங்கு புத்தம்புதிய கடற்றொழில் நுட்பங்களைக் கற்றறிந்து, ஊர்திரும்பி, இங்கு அல்லற்படும் கடலாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் எண்ணத்துடன் புறப்பட்டார்கள். 


கையிலிருந்த காசு இடைவழியிலே, ஐரோப்பாவை அடையமுன்னரே, தீர்ந்தபடியால்  லெபனானில் அவர்கள் நிலைகொள்ள நேர்ந்தது. நண்பருக்கு ஊரிலிருந்து காசு வேளைக்கே வந்தபடியால், அவர் இங்கிலாந்து புறப்பட்டார். அன்ரனி பெய்ரூட்டில் மண்சரிவினால் தாக்குண்ட அகதிகளுக்கு உதவும் அனைத்துலக தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றினார். “இலவச உணவும், இலவச இடவசதியும், அனைத்துலக நாட்டவர்களுடன் உறவாடும் வாய்ப்பும் அவரைப் பெரிதும் கவர்ந்தன” எங்கிறார் மனைவி சிக்ருன். 


“எனது கணவரை அந்தப் பணியும் பணியாளர்களும் பெரிதும் கவர்ந்தபடியால், தனது தாயிடமிருந்து காசு வந்த பின்னரும், தனது பணி முடியும்வரை, அங்கேயே தங்கியிருந்தார். அவர் இங்கிலாந்தை அடைந்த பின்னரும், அந்த நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்தார். 


“கடற்றொழில் கற்கத் தலைசிறந்த இடம் நோர்வே என்பதை இங்கிலாந்தில் அவர் அறிந்துகொண்டார். அவர் நோர்வே வந்தபொழுது, எனது சித்தியுடன் தொடர்புகொள்ள நேர்ந்தது. காரணம் லெபனானில் பணியாற்றிய அந்த தொண்டு நிறுவனத்தின் அதிபர் எனது சித்தியே. அப்புறம் அவர் எமது குடும்ப நண்பராக மாறினார். நான் வாழ்ந்த ஸ்தவங்கர் நகரத்துக்கு வர அவர் முடிவுசெய்த பொழுது, என்னுடைய அம்மாவுடன் (தனது சகோதரியுடன்) தங்கியிருக்கும்படி சித்தி சொல்லியனுப்பினார். எங்கள் சந்திப்பு அப்படித்தான் நடந்தது. 1967ல் யாழ்ப்பாணத்தில் எனது நடமாட்டம் போலவே, அந்த நோர்வே நகரத்தில் அன்ரனியின் நடமாட்டமும் ஒரு புதுமை. 


“புதுமையான இந்த மனிதரை நான் சந்திக்க முன்னரே, அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன். யாழ்ப்பாணத்தை விடுங்கள்; இலங்கையைப் பற்றியே எனக்கு எதுவும் தெரியாது. சலிப்பூட்டும் வரலாற்றுத் தரவுகள் மட்டுமே எமது நூலகத்தில் கிடைத்தன. இப்படியும் ஓர் இடமா என்று எண்ணத் தோன்றியது. இலங்கையை தாகூர் வரைதான் என்னால் அணுக முடிந்தது!


“எங்கள் முதற் சந்திப்பிலிருந்தே நாங்கள் இணைபிரியா நேயர்களானோம். 1964ல் திருமணம் புரிய முடிவெடுத்தோம். ஆசிரியர்களாக விளங்கிய எனது பெற்றோர்க்கு நான் ஒரே பிள்ளை. அவர்களும் எமது உறவினர்களும் எங்கள் முடிபை அறிந்து திகைத்தாலும்,  பிறகு எமது முடிபை ஏற்றுக்கொண்டார்கள்.


சிக்ருன் யாழ் வருகை


“நோர்வேயில் மூன்று ஆண்டுகள் கடற்றொழில் கற்ற அன்ரனி ஊர்திரும்பி கடலாளர்களுக்கு துணைநிற்க ஆசைப்பட்டார். யாழ் திரும்புவது எமது உறவுடன் பின்னிப் பிணைந்த சங்கதி என்பது எனக்கு முன்னரே தெரியும். ஆதலால், எனது கணவர் நேசித்த ஊரைப்பற்றி அறிய முற்பட்டேன். 1967ல் எமது பிள்ளைகள் இருவருடனும் நாங்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தோம்.


“மாமியும், மைத்துனர்களும், மைத்துனிகளும் என்னை வரவேற்று, ஏற்றுக் கொண்டார்கள்.  தங்களைப் போல் என்னை உடுத்துப் படுத்து நடமாட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எனினும் நான் சேலை அணிந்து திருமண வீடுகளுக்குச் சென்றபொழுது, எல்லோரும் என்னை மெச்சி வரவேற்றார்கள்.


“யாழ்ப்பாணத்தில் கொஞ்சக் காலம் வாழ்ந்த பின்னர் ஊர்காவற்றுறைக்கு இடம்மாறினோம். 60களின் பிற்பகுதியில் சீனி, மண்ணெண்ணெய், டீசல் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. டீசல் கிடையாத வேளைகளில் எமது மின்பொறியை இயக்கி மின்சாரம் பெறமுடியவில்லை. கிணற்றில் தண்ணீர் அள்ளி எமது தேவைகளுக்குப் பயன்படுத்தினோம். எண்ணெய் அடுப்புக்கு மண்ணெண்ணெய் கிடையாத வேளைகளில், விறகு பயன்படுத்த நேர்ந்தது. துணி கிடைக்கும் வேளைகளில் எனக்கும், பிள்ளைகளுக்கும் நானே உடுப்புத் தைத்தேன். மிகவும் இளவயதில் நான் பிள்ளைகளோடு முழு நேரத்தையும் கழிக்க நேர்ந்தது. அத்துடன் எனது கணவர் மேற்கொண்ட முயற்சியிலும் நான் கைகொடுக்க நேர்ந்தது. ஆதலால், ஆறி அமர்ந்து சிந்திக்க வாய்ப்பில்லை. 


“மலைகளும், ஆறுகளும், அருவிகளும் நிறைந்த நோர்வேயிலிருந்து வந்த எனக்கு யாழ்ப்பாணத் தரைத்தோற்றம் சலிப்பூட்டியது. எனினும் காலப்போக்கில் வடபுல மரஞ்செடிகொடிகளும், மாங்கனிகளும், யாழ்ப்பாணம்-ஊர்காவற்றுறை பாலத்துக்கு அப்பால் நாங்கள் கண்டுகளித்த கதிரவனின் அழகும் என்னை ஆட்கொண்டன.


கனவுத்திட்டத்தின் மலர்ச்சி


“எனது கணவரின் இளமைப் பருவத்திலேயே அவரது தந்தையார் இறந்துவிட்டார். பாட்டனார் பெரிய ஒப்பந்தியாக விளங்கியவர். வசதிபடைத்த குடும்பத்தவரான எனது கணவர் கடலாளர்களின் பிள்ளைகளுடன் விளையாடாது தடுக்கப்பட்டார். ஆனால் அவர் நள்ளிரவில் நழுவிச்சென்று, அவர்களுடன் மீன்பிடித்து விளையாடினார். அப்பொழுதுதான் கடலாளர்களின் கடினவாழ்வை அவர் புரிந்துகொண்டார். 


“அவரது கனவுத்திட்டத்துக்கு நிதியுதவி பெறுவதில் நெடுங்காலம் கழிந்தது. முதலில் இலங்கை அரசாங்கத்திடம் நிதியுதவி நாடினார். வடபுல விருத்தியில் அரசாங்கத்துக்கு நாட்டம் இல்லை.  அவர் நோர்வே திரும்பி கெயர் (CARE) என்ற தொண்டு நிறுவனத்தில் கொஞ்சக் காலம் பணியாற்றினார். பிறகு தனது கைகளை நம்பி களத்தில் இறங்கினார். 


நோர்வே விருத்தி ஒத்துழைப்பு முகமையகம்  (Norwegian Agency for Development Cooperation), நோர்வே டெம்ப்லர்ஸ் அமைப்பு (Norwegian Templars Organisation) இரண்டும் சேர்ந்து அளித்த நிதியுதவியுடன் ஊர்திரும்பி, காரைநகரில் மாலு-மீன் எனும்  நிறுவனத்தை நிறுவினார். சிங்களத்தில் மாலு என்பது மீன். பிறகு அதை சி-நோர் விருத்தி நிறுவனம் (Cey-Nor Development Foundation) என்று மாற்றினார். சிலோன்-நோர்வே  என்பதன் குறுக்கமே சி-நோர் (Cey-Nor). 


“கணவர் காரைநகரில் படகுகள் தயாரிக்க, ஊர்காவற்றுறையில் நான் சி-நோரின் ஆங்கில கடிதத்தொடர்பைக் கவனித்து வந்தேன். அத்துடன் தமிழையும் கற்று வந்தேன். படகுத் தயாரிப்பில் கழிக்கப்பட்ட பலகைகளை வைத்து எமக்கான தளபாடத்தையும் தயாரித்தோம். 


“கடலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதில் கணவர் புலன்செலுத்த, கொழும்பிலிருந்து தொடர்பு வைத்திருந்தவர்கள் படகுகளை ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பதில் அக்கறை செலுத்தினார்கள். ஆதலால் எனது கணவர் அதிலிருந்து வெளியேற முடிவுசெய்தார்.  


புறவாழ்வு


“இடைக்கிடை நாங்கள் நோர்வே சென்று வந்தோம். 1972ல் மூத்த மகள் விபத்தில் சிக்கி ஒருகண் பார்வையை இழக்க நேர்ந்தது. அப்பொழுது யாழ்ப்பாணத்தில் கண்வைத்திய நிபுணர் எவரும் இல்லை. ஆதலால் நோர்வே திரும்பினோம். அங்கு பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றார்கள். 


“பிள்ளைகளின் யாழ்ப்பாணத் தொடர்பை பேணிக்கொள்வதற்காக 1980ல் யாழ்ப்பாணம் திரும்பி 10 மாதங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுதுதான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அது எரியுண்டு, அடுத்த நாள் காலையிலும் எரிந்துகொண்டிருந்ததை காரில் சென்றபடி பார்த்த நினைவு இன்றும் இருக்கிறது. 


“1981ல் நாங்கள் நோர்வே திரும்பிய பிறகு வடபுல நிலைவரம் மேன்மேலும் மோசமடைந்தது.  1983ல் இனக்கலவரம் நிகழ்ந்தபிறகு இலங்கை திரும்ப வாய்ப்புக் கிடைக்கவில்லை. தான் நேசித்த யாழ்ப்பாணத்துக்கு திரும்பாமலேயே, 1990ல், தனது 59வது வயதில், நோர்வேயில், எனது கணவர் இயற்கை எய்தினார்.” 


“எனது கணவர் ஒரு காதலர். முதலில் லெபனான் தொண்டு நிறுவனத்தின் மீது காதல் கொண்டார். தனது தொண்டின் மீது கொண்ட காதலே அவரிடம் காணப்பட்ட குறையும் கூட! இலங்கையில் ஏற்பட்ட குழப்பம் போராய் ஓங்கியபொழுது, அவர் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளானார். நாட்டுப் பிரச்சனையை தனது சொந்தப் பிரச்சனையாகவே எடுத்துக்கொண்டார். அதனால் மிகவும் புண்பட்டுப் போனார். 


“போர் மும்முரமைடையவே, வடபுல மக்கள் நோர்வேக்கு அகதிகளாகத் தப்பியோடினார்கள். நோர்வேயில் முதன்முதல் கால்பதித்த அன்ரனி அந்த அகதிகளிடையே இற்றைவரை ஒரு காவிய நாயகனாகப் போற்றப்பட்டு வருகிறார். எனினும் அவர்களுக்கும் அன்ரனிக்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது. அவர்கள் ஊரில் வாழ முடியாமல் நோர்வேயை நாடி ஓடிவந்தவர்கள். அன்ரனியோ ஊர்திரும்ப முடியாமல் நோர்வேயில் சிக்குண்டவர்! 1983ன் பின் அவரால் ஊருக்குத் திரும்ப முடியவில்லை. 


“நான் நோர்வேயில் மானுட சமூகவியல் கற்று, நோர்வே குடிவரவுத் துறையில் பணியாற்றி, 64வது வயதில் ஓய்வுபெற்றேன். அன்றாடம் காலையில் எழுந்து வேலைக்குப் போவதைக் காட்டிலும், ஏதாவது முயற்சியில் இறங்கவே நான் ஆசைப்பட்டேன்.


“யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து, அதை நேசித்த நான் நெடுங்காலம் கழித்து, 2000ம் ஆண்டில் பணிமேற்கொண்டு இலங்கை வந்த எனது மகனுடன் இங்கு வந்திறங்கினேன். யாழ்ப்பாணத்தில் 4 நாட்கள் தங்க அனுமதிபெற்று, ஓர் இரசிய விமானத்தில் பலாலி சென்றேன். அந்த இரசிய விமானி குடிபோதையில் விமானம் செலுத்திய பயங்கரம் இன்னொரு கதை. பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும்பொழுது பாழடைந்த கட்டிடங்களை பார்த்தபடி சென்றேன்.   


சிக்ருனின் மீள்வரவு


“2002ல் போர்நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்ட பிறகு யாழ்ப்பாணத்தில் வாழும் நோக்குடன் நான் திரும்பிவர முடிவுசெய்தேன். அம்மா எனக்கு விட்டுச்சென்ற பணம் கொஞ்சம் இருந்தது. நான் விலைக்கு வாங்க நல்லதொரு வீடு பார்க்கும்படி எனது கணவரின் நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுதினேன். 2003ல் அவரிடமிருந்து பதில் கிடைத்தது. நான் இங்கு வந்து, அவர் பார்த்த வீட்டை வாங்கினேன்.  


“யாழ்ப்பாணத்தில் ஒரு பிறநாட்டவராக வாழ்ந்து, புதிய சூழ்நிலைக்கு நெகிழ்ந்து கொடுப்பதில் உள்ள பிரச்சனைகள் புலம்பெயர்ந்தோர் அனைவருக்கும் பொதுவானவை. உங்களுக்கு ஒரு நட்புவட்டம், உங்களைப் போல் பட்டறிந்தோரின்  நட்புவட்டம் இல்லை என்றால்,  நீங்கள் தரையில் எற்றுண்ட மீன் போல் துடிக்க நேரும். யாழ்ப்பாணத்தில் சில வேளைகளில் எனக்கு அத்தகைய உணர்வு ஏற்பட்டதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.”   


“அதேவேளை வைசலாவுடன் எனக்கு ஏற்பட்ட நட்பு காலத்தால் அழியாதது. 1967ல் அவரை முதன்முதல் நான் சந்தித்தேன். அக்கா இல்லாத எனக்கு அவர் ஓர் அக்கா போல் விளங்கியுள்ளார். அவரை இன்னமும் நான் கனடா சென்று சந்தித்து வருகிறேன். அவர் கணவர் ஓர் எந்திரவியலர். அவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்கள். வைசலா பாவாடை அணிவது, சிகரட்டு புகைப்பது, பிரண்டி குடிப்பது,  காரோட்டுவது பற்றி எல்லாம் அறிந்துகொண்டேன். ஆதலால் ஒரு யாழ்ப்பாணப் பெண் என்ற வகையில் அவர் மோசமான நிலையை எதிர்கொண்டார். அவரைப் பற்றியே எல்லோரும் கதைத்தார்கள்.” 


“நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தபொழுது நெருங்கிய நட்பு மலர்ந்தது. என்னால் அவருடன் எதையும் கதைக்க முடிந்தது. ஒரே மாதிரியான எங்கள் பட்டறிவு எனக்கு கைகொடுத்தது. இயன்ற வேளைகளில் அவர் ஒருசில மாதங்கள் யாழ்ப்பாணம் வந்து தங்கியிருப்பார். எனக்கும் எவ்வளவு காலத்துக்கு வர முடியுமோ அவ்வளவு காலத்துக்கு இங்கு வர விருப்பம். ஆனால் எனது பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும், வெவ்வேறு நாடுகளில் இருக்கும் நண்பிகளுடனும் உறவாடும் வாய்ப்பு எனக்குத் தேவைப்படுகிறது. ஆதலால் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் என்னால் தங்கியிருக்க முடிவதில்லை.


கணவரின் வரலாற்றைப் பதிவுசெய்தல்


“இப்பொழுது எனக்கு 74 வயது. எனது பேரப்பிள்ளைகளுக்காக எனது கணவரின் வாழ்க்கை வரலாற்றை நான் எழுத விரும்புகிறேன். அவரது வரலாறு பல்முனைப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை சி-நோர் என்பது ஒரு துன்பியல் நாடகம். இலங்கையுடன் நோர்வேக்கு ஏற்பட்ட பழைய தொடர்பை அது குறிக்கிறது. 


“நான் சொல்ல விரும்பும் கதையை சிலர் திசைதிருப்ப முயல்கிறார்கள். எனது கணவரே முதன்முதல் நோர்வேயில் குடிபுகுந்த இலங்கைத் தமிழர் என்பதால், புலம்பெயர்வில் புலன்செலுத்தும்படி கேட்கிறார்கள். அவர் வேளைக்கே நோர்வேக்கு வந்தபடியால், பின்னர் தமிழரின் வரவுக்கு அவர் பெரிதும் துணைநின்றார். ஆதலால் அவர்  நோர்வேவாழ் தமிழரின் காவிய நாயகனாய் ஓங்கினார். 


“அதில் பாதி மெய்யும் உண்டு, பாதி புனைவும் உண்டு. இந்தக் கதையில் நான் வகிக்கும் பங்கை வரையறுப்பது எனக்கு சிரமமாய் இருக்கிறது. தனது இளமைப் பருவம் குறித்து அவர் என்னிடம் தெரிவித்ததற்கே இங்கு நான் குரல் கொடுத்துள்ளேன். அவருடைய கதையை நான் எடைபோட்டு முன்வைக்க வேண்டியுள்ளது. அது நேரிய கதையாக அமைய வேண்டும் அல்லவா! 


“மிகுந்த பாசத்துடனும் உழைப்புடனும் எனது கணவரால் உருவாக்கப்பட்ட சி-நோர் நிறுவனத்தை அரசாங்கம் கையகப்படுத்தியது. இப்பொழுது கடற்றொழில் அமைச்சு அதை நிருவகித்து வருகிறது. “1967ல் பழங்கால மரவள்ளங்களைத் தயாரித்த நிலையிலிருந்து அது பெரிதும் விருத்தி அடைந்துள்ளது” என்றெல்லாம் அரசாங்கம் விளம்பரப்படுத்தி வருகிறது. 


“1950களில் தன்னைப் போன்ற குடிமக்களுக்கு உதவக்கூடிய நுட்பங்களைக் கற்றறிவதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட ஒருவரின் கனவே சி-நோர் நிறுவனத்தின் அத்திவாரம் என்பதை இலங்கையில் பெரும்பாலும் அனைவருமே மறந்துவிட்டார்கள். 


மற்றவர்கள் அக்கதையை மறந்திருக்கலாம். ஆனால் சிக்ருன் இராசேந்திரத்தின்  இதயத்தில் என்றென்றும் குடிகொண்டிருக்கும் கதை அது. அன்ரன் இராசேந்திரம்  மீதும், அவரது தாயகத்தின் மீதும் அவர் கொண்ட காதல் அது. அவர் முதன்முதல் யாழ்ப்பாணத்தில் கால்பதித்து 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட, அவர் இதயத்தில் குடிகொண்ட காதல் இன்னமும் பொங்கிவழிகிறது.    

______________________________________________________________________________

Chandani Kirinde, Financial Times, 26 March 2020, translated by Mani Velupillai.

https://www.ft.lk/Lifestyle/From-Norway-to-Jaffna-A-5-decade-journey-of-love-for-a-man-his-land-and-his-dream-project-Cey-Nor/8-698031