புண்படும் தமிழ்மொழி

“இசை வெறும் ஓசையாய் மாறிவிட்டதே!” என்று புலம்பினார் எழுத்தாளர் மைலன் குந்தேரா. பொருள்பொதிந்த தமிழ்ப் பெயர்கள் கூட வெறும் ஓசைகளாய் மாறிவிட்டனவே என்று நாமும் புலம்ப வேண்டியுள்ளது.

 

எமது குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் பெரிதும் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய ஓசைகளாய் ஒலிக்கின்றன. ஜதுமிதா, ஷொகினா, ஹம்ஷிகா, ஜிதாரா, நிஹாரிஜன், டுலக்‌ஷன், ஜிரஷ்டன்…

 

மரபார்ந்த தமிழறிவு குன்றியதால், கிரந்த எழுத்துகளுடன் கூடிய ஓசைகள் எம்மவர்க்கு சிறந்த பெயர்களாகத் தென்படுகின்றன போலும். அவை தமிழும் இல்லை, அவற்றில் பொருளும் இல்லை, சுவையும் இல்லை.

 

கடைகள் எல்லாம் “ஸ்டோர்ஸ்” ஆகிப் பல்லாண்டுகள் கழிந்துவிட்டன. இன்று எந்தக் கடையுமே “கடை” எனப்படுவதில்லை. “கடை” ஒரு கடைகெட்ட சொல்லாக ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டது!

 

கடைகளின் பெயர்கள் 99 விழுக்காடு கிரந்த எழுத்துக்களில் அல்லது ஆங்கிலத்தில் தான் வைக்கப்படுகின்றன. ஆங்காங்கே  அவை தமிழில் ஒலிபெயர்த்து எழுதப்படுவதுண்டு.   

 

ஒரு விடுதியில் “Sivagangai Aham” என்றும், அதன் கீழே “சிவகங்கை அஹம்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. “அகம்” எனும் தூய தமிழ்ச் சொல் கிரந்த எழுத்துடன் “அஹம்” என்று  எழுதப்பட்டுள்ளது!

 

ஆங்கிலத்தில் வைக்கப்படும், பதியப்படும், பொறிக்கப்படும் பெயர்கள் பிறகு தாறுமாறாகத் தமிழில் ஒலிபெயர்க்கப்படுகின்றன: “கந்தன் சுப்பர் மார்க்கட், பஷன் அக்கடமி,  மொடெர்ன் போட்டோகிராபர்ஸ், நியூ ஷூ பலஸ்…”

 

“சலூன்” என்பது அசல் தமிழ்ச் சொல்லாகவே வழங்கி வருகிறது. ஆங்கிலத்தில் salon என்பது “சலோன்” என உச்சரிக்கப்படுவது.  தமிழில் இதை “சிகையகம்” எனலாம்.

 

தமிழகம் எங்கும் “பேருந்து நிலையம்” என்று சரிவரப் பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கை பேருந்து நிலையங்களில் “பேரூந்து” நிலையம் என்றே பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பேரகராதியின்படி “ஊந்து” என்பது ஏலக்காய்க் கோது. பேரூந்து என்றால் பெரிய ஏலக்காய்க் கோது! 

 

பெரிதும் நாடாளுமன்றத்தில் கையாளப்படும் expenditure எனும் சொல்லை ஊடகங்கள் பலவும் “செலவீனம்” என்று குறிப்பிட்டு வருகின்றன. ஆட்சிமொழித் திணைக்களத்து சொற்கோவையின்படி இது “செலவினம்” ஆகும். 

 

பல்வேறு செலவுகள் ஒருமிக்க “செலவினம்” எனப்படும். செலவுக்கும், செலவினத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு அது. பலவீனம் என்றால் பலம் இல்லை. ஆகவே செலவீனம் என்றால் செலவு இல்லை அல்லவோ?

 

“நிலைமை”, “நிலைவரம்” “சுயேச்சை”, “பயிற்சி”... என சரிவர எழுத்துக்கூட்டாமல், “நிலமை”, “நிலவரம்”, “சுயேட்சை”, “பயிர்ச்சி” ... என்று வழுபட எழுத்துக்கூட்டும் வழக்கு மேலோங்கி வருகிறது.   

 

“நாடகர்”, “நூலகர்”, “ஊடகர்”... எனப்படுவோர் தத்தம் துறைகளில் பயின்று பட்டம் பெற்றிருந்தால் ஒழிய, அவர்களை முறையே ”நாடகவியலாளர்”, “நூலகவியலாளர்”, “ஊடகவியலாளர்” எனக் கொள்வது பொருந்தாது. 

 

“காணாமல் ஆக்கப்படல்” எனும் தொடர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. முன்பின் முரண்பாடான இத்தொடர் அறவே பொருந்தாது.  “காணாமல் போக்கடித்தல்”  என்பதே பொருத்தமான தொடர். 

 

ஒரு பிணக்கு ஏற்பட்ட பிறகு, மீண்டும் இணக்கம் ஏற்படுவது reconciliation எனப்படுகிறது. இதை “மீளிணக்கம்” என்பது பொருந்தும். “நல்லிணக்கம்” என்பதில் “மீண்டும்” என்பது அடங்கவில்லை.

 

An intellectual என்பது பெரிதும் “ஒரு புத்திஜீவி” என்று குறிப்பிடப்படுகிறது.  இது ஓர் அஃறிணைச் சொல் போல் ஒலிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் இது “ஆய்வறிவாளர்” என்று பெயர்க்கப்பட்டுள்ளது. “அறிவார்ந்தோர்” என்பதும் பொருந்தும்.

 

Test match என்பது இரு நாடுகளின் தேசிய விளையாட்டு அணிகளுக்கு இடையே நிகழும்  போட்டி. இதை “நாட்டிடை விளையாட்டுப் போட்டி” எனலாம். Test cricket match என்பது “நாட்டிடைத் துடுப்பாட்டப் போட்டி.” 

 

“சாட்சிகள் அழிக்கப்படுகின்றனவா?” எனும் வினாவுடன் கூடிய ஒரு செய்தித் தலைப்பு! “சாட்சிகள்” (witnesses) உயர்திணை; “அழிக்கப்படுகின்றனவா?” அஃறிணை. “சான்றுகள்” (evidence) அழிக்கப்படுகின்றனவா?” என்பதே சரி. (ஆங்கிலத்தில் evidence, information போன்ற சொற்கள் பன்மையில் அமைவதில்லை.)

 

“சாட்சி” அல்லது “கண்கண்ட சாட்சி” (eye-witness) ஓர் ஆளைக் குறிப்பது. அவர் நீதிமன்றில் அளிப்பது “சாட்சியம்”  (testimony). He testified in Court அல்லது He gave evidence in Court என்றால், “அவர் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்” என்று பொருள்படும். 

 

“ஐயின்னா ஒரு பொல்லாத விலங்கு.” Hyena! இந்த விலங்கிற்கு பல தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன: கழுதைப்புலி, கடுவாய், குடத்தி, வங்கு… அவற்றை அறிந்து பயன்படுத்தாமல், “ஐயின்னா” என்று எழுதுவது பொறுப்பீனம்! 

 

Conservative Party என்பது “பழமைவாதக் கட்சி” என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.  Conserve என்பது “பேணு” என்று பொருள்படுவது. ஆதலால் இலங்கை ஆட்சிமொழிச் சொற்கோவைகளிலும், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்து மொழிபெயர்ப்பு நூல்களிலும் இது “பழமைபேண் கட்சி” என்று பெயர்க்கப்பட்டு வந்தது.  கனடியக் கட்சிகளுள் ஒன்றாகிய Progressive Conservative Party தமிழில் “முற்போக்கு பழமைபேண் கட்சி” ஆகும். அதை “முற்போக்கு பழமைவாதக் கட்சி” என்பது முன்பின் முரணாகும். 

 

“அம்மாவும் அப்பாவும் சந்தைக்குப் போனார்கள்” என்று தமிழில் கொடுக்கப்படும் வசனத்தை எமது மாணவர்கள், Mom and dad went to the market, என்று சரிவர மொழிபெயர்க்கிறார்கள். 

 

Mom and dad went to the market என்ற அதே வசனத்தை திருப்பி ஆங்கிலத்தில் கொடுத்தால், அதே மாணவர்கள், “அம்மா மற்றும் அப்பா சந்தைக்குப் போனார்கள்” என்று மொழிபெயர்க்கிறார்கள்! 

 

“அம்மாவும் அப்பாவும்” என்ற உம்மைத்தொடரை விடுத்து, and-ஐ “மற்றும்” என்று பெயர்த்து, “அம்மா மற்றும் அப்பா…” என்றும், “இலங்கையும் இந்தியாவும்” என்பதை “இலங்கை மற்றும் இந்தியா” என்றும்  மொழிபெயர்க்கிறார்கள்!

 

“அவரிற்கும் இவரிற்கும்”, “விருந்தினர்களிற்கும் மற்றவர்களிற்கும்!” என்று மொழியை வதைக்கும் போக்கு மேலோங்கி வருகிறது. “அவருக்கும் இவருக்கும்”, “விருந்தினர்களுக்கும் மற்றவர்களுக்கும்” என்று இலகுவாக எழுதலாமே!

 

“தமிழர்களிற்கு ஒற்றையாட்சி தீர்வாகுமா?” என்ற வினாவை எழுப்பி, அதற்கு விடையளிக்கும் ஒரு கட்டுரை!. “தமிழருக்கு…” என்றே எழுதலாம். “அர்” விகுதி ஒருமையையும், ஆண்பாலையும் மட்டுமல்ல, பன்மையையும், பெண்பாலையும் குறிக்கும். “தமிழர்”, “தமிழரின்”, “தமிழரால்”, “தமிழருக்கு”... என்றே எழுதலாம்.

 

“இந்நாடு, இந்த நாடு, அம்மாகாணம், அந்த மாகாணம் …” என்பதெல்லாம் சிலருக்கு சரியாகப் படவில்லை. “இவ்நாடு, அவ்மாகாணம்…” என்று தப்பும் தவறுமாக எழுதுவதே அவர்களுக்கு சரியாகப் படுகிறது! 

 

“இலங்கையில் ஆயுதங்களைக் களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் உடன்பாடு” என்பது ஒரு செய்தித்தலைப்பு. “களஞ்சியம்” தானியங்க்ளுக்குப் பொருந்தும்; படைக்கலங்களுக்குப் பொருந்தாது. “படைக்கலங்களைச் சேர்த்து அல்லது சேமித்து அல்லது குவித்து வைக்க …” என்று குறிப்பிடலாமே! 

 

“புலம்பெயர்ந்த ஈழத்தமிழரை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு-கிழக்கு வாக்குகளைச் சூறையாட அரசாங்கம் சூழ்ச்சி” என்பது இன்னொரு செய்தி. “மகிழ்வி” எனும் பிறவினையை விடுத்து, “மகிழ்ச்சி” எனும் பெயரை எதற்காக வினையுருவமாக்கி, “மகிழ்ச்சிப்படுத்து” என்று குறிப்பிட வேண்டும்? “…தமிழரை மகிழ்வித்து…” என்று எழுதக் கூடாதா?

 

“பாடசாலைச் சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கிய சீன அரசாங்கம்” எனுந் தலைப்பில் ஒரு செய்தி. “பாடசாலைக்குத் தேவையான சீருடைகளை முழுமையாக வழங்கிய சீன அரசாங்கம்” எனலாமே!

 

“நிலத்தைப் பதப்படுத்திய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டார்கள்” என்பது ஒரு தொலைக்காட்சிச் செய்தி. “நிலத்தைப் பண்படுத்திய விவசாயிகள்” என்பதே மரபார்ந்த தமிழ். 

 

அதே தொலைக்காட்சியில் “செய்திச்சாரம்” ஒளிபரப்பாகி வருகிறது. “சாரம்” எனும் சொல் கரு, சாறு, பிழிவு… என்று பொருள்படுவது. இது பெரிதும் ஒருமையில், ஒரு செய்தியைக் குறித்துப் பயன்படுத்தப்படுவது.

 

“சரம்” என்ற சொல் கணை, வடம், மாலை… என்பவற்றைக் குறிப்பது. இது பெரிதும் பன்மையில், ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளைக் குறித்துப்  பயன்படுத்தப்படுவது. “செய்திச்சரம்” என்பதே பொருத்தம்.  

 

Busy-க்குத் தமிழ் தேடி அலையாதோர் இல்லை. அதற்குத் தமிழ் இல்லை என்று இடித்துரைப்போரும் இருக்கிறார்கள். Busy எனும் சொல்லை அறியமுன்னர் எமது முன்னோர் படுசோம்பேறிகளாய் இருந்தார்கள் போலும்!

 

“அலுவலாயிருத்தல், காரியமாயிருத்தல், கவையாயிருத்தல்” மூன்றும் தமிழ்ப் பேரகராதியில் இடம்பெற்றுள்ளன! “அப்பா ஓர் அலுவலாய் இருக்கிறார்” என்பதே Dad is busy எனப்படுகிறது. எனக்கு அதிக வேலைகள் இருக்கின்றன = I have a busy schedule. 

 

Oxford அகராதியில் order எனும் சொல் 16 விதங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. அவற்றுள் “உத்தரவு” அல்லது “கட்டளை” என்பது ஒரு விதம் மட்டுமே. அரசாங்கம் அல்லது நீதிமன்றம் பிறப்பிப்பது “கட்டளை” என்பது எல்லோர்க்கும் தெரியும்.

 

ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் கொண்டுவரச் சொல்வது  “கட்டளை” அல்ல, “வேண்டுகோள்.” அங்கே தேநீர் கொண்டுவரும்படி வேண்டிக்கொள்கிறோம் அல்லது கேட்டுக்கொள்கிறோம். “நாங்கள் தேநீர் கொண்டுவரச் சொன்னோம்” என்றாலே போதுமே! இதுவே ஆங்கிலத்தில்  We ordered tea. 

 

Mayor-ஐ "மாநகராதிபதி" அல்லது "மாநகர முதல்வர்"  என்று குறிப்பிட்ட நெடுங்கால வழக்கு அருகிவிட்டது. அன்றைய மாநகராதிபதிகளுக்கு இன்றைய மேயர்கள்  புத்துயிரூட்டல் தகும்.

 

“கெளரவி” எனும் வடமொழிச் சொல்லை சிலர் “மதிப்பளி” என தமிழ்ப்படுத்துகிறார்கள். “மறவர் கெளரவிக்கப்பட்டனர்” என்பதை அவர்கள் “மறவர் மதிப்பளிக்கப்பட்டனர்” என்கிறார்கள். அதை “மறவருக்கு மதிப்பளிக்கப்பட்டது” என்றாவது செப்பனிடலாமே! “

 

“மதி” வினையாக அமையும்பொழுது பெரிதும் respect எனப் பெயர்வது. “என் ஆசிரியர்களை நான் மதிக்கிறேன்” = I respect my teachers. Respect பெயராய் அமையும்பொழுது “மதிப்பு” எனப் பெயர்வது. “மதி”,  “கெளரவி” இரண்டையும் ஒத்தசொற்கள் என்பதற்கில்லை. அவற்றுக்கிடையே நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. 

 

உண்மையில் “கெளரவி” (to honour) என்பது “மாண்புறுத்து” என்று பொருள்படுவது. “மறவர் மாண்புறுத்தப்பட்டனர்” என்பதே மரபார்ந்த தமிழ்.

 

மாண்பு = honour (பெயர்)

மாண்புமிகு = honourable (பெயரடை)

மாண்புறுத்து = honour (வினை)

 

honour killing என்பது “ஆணவக்கொலை” எனப்படுகிறது. குடும்ப மானம் காக்கவே கொலைசெய்வதாக குடும்பத்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால், இது “மானக்கொலை”  ஆகிறது. ஆணவக்கொலை என்பது எந்தக் கொலைக்கும் பொருந்தும் அல்லவா?


Literature Review என்பதை சொல்லுக்குச் சொல்லாக இலக்கிய மீள்நோக்கு (மீளாய்வு) என்பது பொருந்தாது. இங்கு Literature என்பது ஏற்கெனவே எழுத்தில் உள்ள ஆவணங்களைக் குறிப்பது. தற்பொழுது ஓர் ஆய்வாளர் மேற்கொள்ளும் ஆய்வு தொடர்பாக ஏற்கெனவே பிற ஆய்வாளர்கள் மேற்கொண்டிருக்கக்கூடிய ஆய்வுகளின் மீள்நோக்கே Literature Review. அந்த வகையில் இது முன்னாய்வுகளின் மீள்நோக்கு அல்லவா!. 


food security என்பது the state of having reliable access to enough healthy food that you can afford என வரையறுக்கப்பட்டுள்ளது (Oxford). இதை நியாயவிலைக்கு நல்லுணவு கிடைப்பு என்று சுருக்கி உரைக்கலாம்; சொல்லுக்குச் சொல்லாக உணவுப் பாதுகாப்பு என்பது பொருந்தாது.

 

…ஹிருணிகா பிரேமசந்திரன், நானும் ஹிரனும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக, தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்… என்கிறது ஒரு நாளேடு. 

 

ஹிருணிகா… என்று பிறர்கூற்றில் துவங்கும் வசனம் மேற்கோட்குறி இல்லாமல்  நானும்…  என்று தற்கூற்றுக்கு மாறி, பிறகு தங்கள்… என்று பிறர்கூற்றுக்கு மீள்கிறது! 

 

ஹிரனும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தொடர்கிறது செய்தி. ஒன்றில், “எங்கள் திருமணத்திலிருந்து பிரிய முடிவு செய்துள்ளோம்” என்று, அல்லது “எங்களை திருமணத்திலிருந்து பிரிக்க முடிவு செய்துள்ளோம்” என்றாவது குறிப்பிட்டிருக்கலாம். 

 

வேறு ஊடகங்களும் இதே செய்தியை வெளியிட்டுள்ளன. அவை அனைத்தும் “திருமணம்”, “மணவாழ்வு” இரண்டையும் குழப்பியடித்துள்ளன. Marriage “திருமணம்” என்றும் “மணவாழ்வு” என்றும் பொருள்பட வல்லது. A happy marriage என்பது பெரிதும் “இனிய மணவாழ்வு” என்று பொருள்படும். 

 

அதேவேளை, give in marriage என்பது “மணம்முடித்துக் கொடு” (marry off) என்று பொருள்படும். Our teacher doesn’t believe in marriage என்பது “எங்கள் ஆசிரியருக்கு மணவாழ்வில் நம்பிக்கை இல்லை” என்று பொருள்படும்.

 

ஹிருணிகாவின் முகநூற் குறிப்பில் உள்ள the life of our dreams எனும் தொடர் “எங்கள் கனவு வாழ்க்கை”, “நம் கனவுகளின் வாழ்க்கை”, “எங்கள் கனவுகளின் வாழ்க்கை”... என்றெல்லாம் பெயர்க்கப்பட்டுள்ளது. 

 

இந்த அரிய தொடரை “நாம் கனவுகண்ட வாழ்வு” என்றோ, “நாங்கள் கனவுகண்ட வாழ்க்கை” என்றோ எளிதாகவும், சரியாகவும், தெளிவாகவும் பெயர்த்திருக்கலாமே! 

 

“ஒரு பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது.” இவ்வாறு பலரும் "புரிதல்" பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

 

“ஒரு பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் புரியாமல்” அல்லது  “காரணத்தைப் புரிந்துகொள்ளாமல் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது” எனலாமே! 

 

“இந்த விமானம் ஆளில்லா விமானம் என்பதுடன் இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுமார் 40 கிலோ எடையுடையது என்றும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.”.

 

இப்படிப்பட்ட வசனங்களை வாசித்துப் பழகிய எங்களுக்கு, இது சரிவர எழுதப்பட்டுள்ளது என்றே தோன்றும். உரிய விபரம் எமக்குப் புரிவதே அதற்கான காரணம்.

 

அதாவது: இது ஆளில்லா விமானம்; இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது; இது சுமார் 40 கிலோ எடையுடையது; இந்த விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை; இந்த விபரம் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது!

 

எனினும், மேற்படி வசனத்தில் “...என்பதுடன்…ஆகவும்… என்றும்… என… “ ஆகிய இணைப்புச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று இயைபுபடுத்தப்படவில்லை. அவற்றை இயைபுபடுத்தாமல் எழுதும் போக்கு மேலோங்கி வருகிறது. 

 

இன்னும் மோசமான வசனம்: “நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் ஏறி நின்று வேலை செய்த இரும்பிலான பலாஞ்சியில் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.”

 

எனினும் சங்கதி புரிகிறது: ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது; 4 பேர் கட்டிடத்தில் ஏறிநின்று வேலை செய்தார்கள்; அவர்கள்  இரும்புப் பலாஞ்சி ஒன்றை தூக்கிச் சென்றார்கள்; அதில் மின்சாரம் பாய்ந்து அவர்களைத் தாக்கியது.

 

இது ஒரு செய்தித்தலைப்பு: “Populationல் சரியும் South India, எகிறும் North, TNக்கு காத்திருக்கும் ஆபத்தை விளக்கும் Jeyaranjan”! பிட்டும் தேங்காய்ப்பூவும் போல் தமிழும் ஆங்கிலமும்! இப்பொழுது பரவிவரும் கொள்ளைநோய் இது! 

 

“பருப்பில் நமக்கேன் வெருப்பு?” என்பது ஒரு கட்டுரையின் தலைப்பு! அதற்கு யார் “பொருப்பு” என்பது தெரியவில்லை! இனிமேல் “அரம் செய விரும்பு, ஆருவது சினம்…” என்றெல்லாம் எழுதுவார்கள் போலும்!

 

இலங்கையிலிருந்து (பெரிதும் புலம்பெயர்ந்த மக்களைக் கருத்தில் கொண்டு) ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பால்மா பேணியின் புறத்தில் இப்படி பொறிக்கப்பட்டுள்ளது:

 

“திறந்த பின்பு, பால்மாவைக் காற்றுப் புகாத கொள்கலனில் இட்டு மூடி வைக்கவும்.” அதன் ஆங்கில வரி: After opening, please keep the tin tightly closed. “பேணியைத் திறந்தால், அதை இறுக்கி மூடி வைக்கவும்” என்பதே அதன் பொருள். 

 

"அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே!' என்று அவையோரை விளித்து சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உரையாற்றியதாக ஒரு பேர்போன ஊடகம் குறிப்பிட்டுள்ளது. விவேகானந்தரின் அரும்பெரும் உரைக்கு நேர்ந்த கதி அது. 

 

"அமெரிக்காவின் சகோதரிகள்..." என்றால், அவர்கள் அமெரிக்கர்கள் அல்லர் என்பது கருத்து. அமெரிக்கரையே அவர் Sisters and brothers of America!" என விளித்து, அதாவது "அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!" என விளித்து உரையாற்றினார். 

 

“நினைவுகூறுவது” பற்றி திரும்பத் திரும்ப ஊடகங்கள் பலவும் எழுதி வருகின்றன. அது சரியல்ல. “தகுதிகூர்வு, தயவுகூர்வு” போன்றதே, “நினைவுகூர்வு.” “நினைவுகூருவது” என்பதே சரி.

 

பேச்சு வழக்கில் “இலங்கை” என்பதை விட “சிறிலங்கா” என்பதே காதில் விழுவது அதிகம். எழுத்து வழக்கிற்கும் “சிறிலங்கா” பரவிவிட்டது. சில ஒலி-ஒளி ஊடகங்கள் “இலங்கை” என்று சொல்வதே இல்லை.   

 

“கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்…” என்கிறது சிலப்பதிகாரம். அதுவே நாட்டின் அதிகாரபூர்வமான தமிழ்ப் பெயர். 16ம் நூற்றாண்டு வரை சிங்களத்தில் வழங்கிய “லங்கா”, பிறகு 1972 வரை ஆங்கிலத்தில் வழங்கிய “சிலோன்”, அதன்பிறகு வழங்கிவரும் “சிறிலங்கா” எல்லாம் “இலங்கை” என்று மட்டுமே பெயரும். 

 

Lanka Cement = இலங்கை சீமெந்து

Bank of Ceylon = இலங்கை வங்கி

Sri Lanka Freedom Party = இலங்கை சுதந்திரக் கட்சி

 

“நபரொருவரை தாக்கி பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைது” என்பது ஒரு செய்தி. “நபர்” எனும் உருதுமொழிச் சொல்லின் பொருள் “ஆள்.”  அதன்படி “நபர் ஒருவர்” என்றால், ஆள் ஒருவர். “ஒருவர்” என்றாலே ஓர் ஆள் தானே! அது இரு பாலார்க்கும் பொருந்தும். ஆகவே “ஒருவரை…” என்றே குறிப்பிடலாம்.

 

“சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளை” என வேறொரு செய்தி. ஏ-டி-எம் (ATM) தான் அந்த எந்திரம். எனவே “ஏ-டி-எம் எந்திரத்தை…” என்பதே பொருந்தும். ஒருவரை ஏமாற்றலாம்; எந்திரத்தை ஏமாற்ற முடியாது, மோசடி செய்யலாம். “சென்னையில் தன்னியக்க வங்கிப் பொறி மோசடிக் கொள்ளை” என்றோ, என்ற விதமாகவோ குறிப்பிட்டிருக்கலாம்.

 

“காயப்படுத்து” எனும் சொல் ஒருவரின் “உள்ளத்தை ஊறுபடுத்து” எனும் பொருள்பட புனைவெழுத்துக்களில் கூட இடம்பிடித்துவிட்து. அதன்படி இக்கட்டுரைக்கு “காயப்படும் தமிழ்மொழி” என்றுதான் தலைப்பிட வேண்டும்! 

 

மரபார்ந்த தமிழில் “புண்படுத்து” என்பது பெரிதும் ஒருவரின் “உள்ளத்தை ஊறுபடுத்து” என்று பொருள்படும்; அது அவரை “அடித்துக் காயப்படுத்து” என்று பொருள்படல் அரிது.

  

ஆதலால், தமிழை இயன்றளவு சரிவரப் பயன்படுத்தும்படியும், அதை தாறுமாறாகப் பயன்படுத்துவதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளும்படியும்   எம்மால் வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும்.

                                 

                                                                   மணி வேலுப்பிள்ளை, 2024-2025.

 

1 comment:

 

Riffath, September 7, 2025 at 11:41 AM

பல விடயங்களை சுவையாகப் பகிர்ந்துள்ளீர்கள் ஆசான்! நானும் எனது தமிழை மரபார்ந்த முறையில் பிரயோகிப்பதற்கும் எழுதுவதற்கும் முயன்று வருகின்றேன். எனினும் ஒழுங்கமைந்த தமிழை வாசித்து, படித்து, ஆய்ந்து கற்றுக்கொள்வதற்கான தளங்கள், ஊடகங்கள் எவை என்று கண்டறிவது பாரிய சவாலாக அமைந்துள்ளது. ஏனெனில் மரபார்ந்த மொழிநடை அருகிவிட்டது.