கலைச்சொல்லாக்க முன்னோடிகள்  (1)

மணி வேலுப்பிள்ளை

நாங்கள் வழங்கும் சொற்களை நால்வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர்:

இயற்சொல்

திரிசொல் (இலக்கியச் சொல்)

திசைச்சொல் (பிறமொழிச் சொல்)

வடசொல் 

அவற்றுள் 120 சொற்களை எடுத்துக்காட்டி விளக்கமளிக்கும் தொல்காப்பியர்,  "கடிசொல் இல்லை காலத்துப் படினே" (காலத்தால் நிலைத்த சொற்களை உதறித்தள்ளக் கூடாது) என்று அறிவுறுத்துகிறார். அதற்கமைய முற்காலத்தில் வெளிவந்த (1) நிகண்டுகளும், அவற்றை அடுத்து தற்காலத்தில் வெளிவந்த (2) அகராதிகளும், பின்னர் இக்காலத்தில் வெளிவந்த (3) சொற்றொகுதிகளும் தமிழின் சொற்பெருக்க வரலாற்றை உணர்த்தி நிற்கின்றன.

1) நிகண்டுகள்: தமிழில் 36 நிகண்டுகள் இருப்பதாகக் கணக்கிடுகிறார் முனைவர் தொ. பரமசிவன். 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகரர் 2,108 பாக்கள் கொண்ட (திவாகர) நிகண்டில் 12 வகையான பெயர்களைப் பட்டியலிடுகிறார்: தெய்வப் பெயர், மக்கட் பெயர், விலங்கின் பெயர், மரப்பெயர், இடப்பெயர், பல்பொருட் பெயர், செயற்கை வடிவப் பெயர், பண்பு பற்றிய பெயர், செயல் பற்றிய பெயர், ஒலி பற்றிய பெயர், ஒருசொற் பல்பொருட் பெயர், பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர். மொத்தம்: 9,500 சொற்கள்.

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல முனிவர் 4,121 பாக்களில் 10 வகையான சொற்களை நிரலிடுகிறார். பிங்கல நிகண்டின் முதல் 9 தொகுதிகளிலும் 15,800 சொற்களும், இறுதித் தொகுதியில் 1,091 சொற்களும் காணப்படுகின்றன. மொத்தம்: 16,891 சொற்கள்.

1520 வாக்கில் வாழ்ந்த மண்டலபுருடர் 12 தொகுதிகள் கொண்ட தமது சூடாமணி நிகண்டில் 12,796 சொற்களை நிரைப்படுத்துகிறார். நிகண்டுகளில் இடம்பெறும் சொற்கள் பிவரும் துறைகளைச் சார்ந்தவை:

ஆட்சி, இசை, உலோகவியல், கட்டிடக்கலை, கடற்செலவு, கடற்றொழில், கணிதம், கப்பல்கட்டல், சிற்பம்,சோதிடம், தாவரவியல், நிருவாகம், புடைவை, புவியியல், மரவேலை, மருத்துவம், வானவியல், விலங்கு, மருத்துவம், வேளாண்மை.

(2) அகராதிகள்: என்றீக் என்றீக்கெஸ் (Henrique Henriques, 1520-1600) என்ற போர்த்துக்கேயரின் தமிழ்-போர்த்துக்கேய அகராதியே காலத்தால் முற்பட்டது எனப்படுகிறது. அது பற்றிய குறிப்பு மட்டுமே இன்று எஞ்சியுள்ளது. அதை அடுத்து வெளிவந்த அகராதிகள் பலவற்றின் காலகட்டங்கள் கவனிக்கத்தக்கவை:

 

1679

தமிழ்-போர்த்துக்கேய அகராதி

அந்தாவோ டி பொரயங்கா (Antao de Proenca, 1625-1666)

1824

சதுரகராதி

வீரமாமுனிவர் (Costanzo Giuseppe Beschi, 1680-1747)

1842

யாழ்ப்பாண அகராதி

சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை

1862

தமிழ்-ஆங்கில அகராதி

வின்சுலோ பாதிரியார் (Miron Winslow, 1789-1864)

1867

ஆங்கிலம்-தமிழ் அகராதி

பேர்சிவல் பாதிரியார் (The Rev. P. Percival, 1803-1882)

1899

தமிழ்ப் பேரகராதி

நா. கதிரைவேற்பிள்ளை (1860-1907)

1904

1923

தமிழ்ச் சொல்லகராதி

கு. கதிரைவேற்பிள்ளை (1829-1904)

1907

ஆங்கிலம்-தமிழ் அகராதி

முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917)

1909

20ம் நூற்றாண்டுத்   தமிழ்ப் பெயரகராதி

பி. இராமநாதன்

1924

1936

தமிழ்-ஆங்கிலப் பேரகராதி

(Tamil Lexicon)

சென்னைப் பல்கலைக்கழகம்:  எஸ். வையாபுரிப்பிள்ளை (தலைமைப் பதிப்பாளர்), வி. நாராயண ஐயர், பி. ஆர். மீனாட்சிசுந்தர முதலியார், பண்டிதர்கள் வி. எம். கோபால கிருஷ்ணமாச்சாரியார், எம். இராகவ ஐயங்கார், எஸ். சோமசுந்தர தேசிகர்

1941

சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதி

சுவாமி ஞானப்பிரகாசர் (1938-1946)

1963

ஆங்கிலம்-தமிழ்ச்   சொற்களஞ்சியம்

சென்னைப் பல்கலைக்கழகம்: கலாநிதி ஏ.சிதம்பரநாதச் செட்டியார் (தலைமைப் பதிப்பாளர்), கா. அப்பாத்துரை,ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார், தெ.பொ.மீனாட்சி   சுந்தரம்பிள்ளை, தனிநாயகம் அடிகள், பேராசிரியர் ஆலாலசுந்தரம், ஆறுமுக முதலியார்

 

இந்தியாவிலும் இலங்கையிலும் அமெரிக்க ஆதீனத்தின் ஆணையாளராக விளங்கிய சந்திலர் (J. S. Chandler) 1913ல் தமிழ்-ஆங்கிலப் பேரகராதிக்கு (Tamil Lexicon) வித்திட்டார். பண்டிதர் ராகவையங்கார் (1878-1960) அவருக்குத் துணைநின்றார். 1862ல் வெளிவந்த வின்சுலோ அகராதியையும், அதை மீட்டியமைக்கு முகமாக போப்பையர் (G. U. Pope, 1820-1908) திரட்டிய தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு பேரகராதி தொகுக்கும் பணியை அவர்கள் முன்னெடுத்தார்கள். பேரகராதிக் குழுவில் பின்வருவோர் அங்கம் வகித்தார்கள்:

ஸ்ரீ பி. எஸ். சிவசாமி ஐயர் (தலைவர்)

உ. வே. சாமிநாத ஐயர்

எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை

எஸ். குப்புசாமி ஐயர்

ரி. ராமகிருஷ்ண பிள்ளை

மார்க் ஹன்டர்

1922ல் சந்திலர் ஓய்வுபெற, எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை (1877-1940), சி. பி. வெங்கட்ராம ஐயர், பி. எஸ் சுப்பிரமணிய சாஸ்திரி, எஸ். வையாபுரிப்பிள்ளை (1891-1956) ஆகியோர் அடுத்தடுத்து தலைமைப் பதிப்பாளராக விளங்கினார்கள். 1924ல் பேரகராதியின் முதலாவது தொகுதியும், 1936ல் இறுதி 6ம் தொகுதியும் வெளிவந்தன. மொத்தம் 4,000 பக்கங்கள்; 104,000 தலைப்புச் சொற்கள். 1939ல் 423 பக்கங்களும், 13,000 தலைப்புச் சொற்களும் கொண்ட பின்னிணைப்பு வெளிவந்தது. 

1951ல் Henry Fowler, Francis Fowler இருவரும் பதிப்பித்த The Concise Oxford Dictionary of Current English அகராதிக்கு 1958ல் வெளிவந்த பிரதியில் உள்ள 61,000 தலைப்புச் சொற்களுக்கான பொருளை "ஆங்கிலம்–தமிழ்ச் சொற்களஞ்சியம்" தூய தமிழில் பெயர்த்துக் கொடுத்துள்ளது. பற்பல புதிய பதங்களும் அதில் புனையப்பட்டுள்ளன. சாதாரண பயனாளர்களைக் காட்டிலும் தமிழும் ஆங்கிலமும் பயின்றவர்களை அதிகம் கருத்தில் கொண்டு தொகுக்கப்பட்ட அகராதி இது. இலங்கையில் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் சொற்றொகுதிகளுக்கு நிகரான இடம் இவ்வகராதிக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.     

2,000ம் ஆண்டில் கிரகரி ஜேம்ஸ் ஆங்கிலத்தில் தொகுத்த, 900 பக்கங்கள் கொண்ட A History of Tamil Dictionaries என்னும் ஆங்கில நூலுக்கு "சொல்பொருள்" (Colporul) என்று தமிழில் தலைப்பிட்டமை கவனிக்கத்தக்கது. சொல்லின் பொருள் அறுத்துரைக்கப்பட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. பழைய அகராதிகள் சொல்லின் பொருளை தமிழிலோ ஆங்கிலத்திலோ வரையறுக்கவில்லை அல்லது செவ்வனே வரையறுக்கவில்லை என்று தமிழ்-ஆங்கிலப் பேரகராதிக்கு (Tamil Lexicon) தாம் எழுதிய முன்னுரையில் எஸ். வையாபுரிப்பிள்ளை குறைப்பட்டுள்ளார்.

தமிழ்-ஆங்கிலப் பேரகராதி, ஆங்கிலம்–தமிழ்ச் சொற்களஞ்சியம், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ஆக்ஸ்போர்ட் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி போன்றவை அக்குறையைப் போக்குவதற்கு (சொல்லின் பொருளைச் செவ்வனே வரையறுப்பதற்கு) அரும்பாடுபட்டுள்ளன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் தலைமைப் பதிப்பாளர் கலாநிதி பா. ரா. சுப்பிரமணியன் தமது அறிமுகத்தில் கலைச்சொற்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்:

"தற்காலத் தமிழின் ஒரு முக்கியமான அம்சம், அரசுத் துறைகளிலும் வளர்ந்துவரும் புதிய அறிவியல் துறைகளிலும் தொழில் துறைகளிலும் பொழுதுபோக்குத் துறைகளிலும் உருவாக்கப்படும் கலைச்சொற்களாகும். இக்கலைச்சொற்களில் துறை வல்லுநர்கள் மட்டுமேயல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்துகிற, புரிந்துகொள்ளவேண்டிய சொற்கள் இருப்பதால் அவை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அரசு நிர்வாகம், விளையாட்டு முதலிய துறைகள் பொதுமக்களுடைய வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய துறைகள். ஆதலால் இத்துறைச் சொற்கள் கணிசமான அளவில் இடம்பெற்றிருக்கின்றன. மொழியோடு இலக்கணக் கலைச்சொற்களுக்குள்ள நெருக்கம் காரணமாக இவையும் இடம்பெற்றிருக்கின்றன... வேளாண்மை, நெசவு போன்ற பழந்துறைகளில் புதிய அறிவியல் வளர்ச்சியால் மரபுக் கலைச்சொற்களோடு புதிதாகப் படைக்கப்பட்ட கலைச்சொற்களும் வழக்கில் இருக்கின்றன..." (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, சென்னை, 1992). 

(3) சொற்றொகுதிகள்: சொல்லின் பொருளைச் செவ்வனே வரையறுக்கும் பணி கலைச்சொற்கோவைகளுக்கு நூறு விழுக்காடு பொருந்தும். அந்த வகையில் கலைச்சொல்லாக்கத்தில் (அ) செம்மை (accuracy), (ஆ) திட்பம் (specificity), (இ) சீர்மை (uniformity) மூன்றுக்கும் சரிநிகரான முக்கியத்துவம் உண்டு. (அ) செம்மை: ஆங்கிலக் கலைச்சொல்லின் பொருளைச் செவ்வனே உணர்த்தும் தமிழ்க் கலைச்சொல் முன்வைக்கப்படல் அல்லது புனையப்படல்; (ஆ) திண்மை: சம்பந்தப்பட்ட ஆங்கிலக் கலைச்சொல்லை எதிர்கொண்டவுடன் அதற்கு நிகரான தமிழ்க் கலைச்சொல்லும், சம்பந்தப்பட்ட தமிழ்க் கலைச்சொல்லை எதிர்கொண்டவுடன் அதற்கு நிகரான ஆங்கிலக் கலைச்சொல்லும் உள்ளத்துள் தைத்தல்; (இ) சீர்மை: அதே கலைச்சொற் சோடி தமிழ்கூறு நல்லுலகெங்கும் மேலோங்குதல். ஓர் எடுத்துக்காட்டு:

யாழ்ப்பாணம்-மானிப்பாயில் பணியாற்றிய மருத்துவர் கிறீன் (Dr. Samuel Fisk Green, 1822-1884) அவர்களுக்கு afterpains என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தேவைப்பட்டது. அதை "Pains caused by contraction of the uterus after childbirth" (மகப்பேற்றை அடுத்து கருப்பை ஒடுங்குவதால் உண்டாகும் நோவு) என்று Oxford Dictionary வரையறுத்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு "பின்னோக்காடு" என்ற கலைச்சொல்லை அவர் புனைந்துகொண்டார்:

(அ) Afterpains என்பதன் பொருள் இப்புனைவில் செவ்வனே புலப்படுகிறது.

(ஆ) Afterpains என்றால் "பின்னோக்காடு" என்பதும்,"பின்னோக்காடு” என்றால்­­­­­­­­­ afterpains  என்பதும்  இங்கு திட்பமான  முறையில் பொருந்துகின்றன; 

(இ) தமிழ் வழங்கும் நாடுகளில் ஒரே சீராக "பின்னோக்காடு" என்னும் சொல்லாட்சி மேலோங்க வாய்ப்புள்ளது.

1850ல் மருத்துவர் கிறீன் ஆங்கிலத்தில் எழுதிய மடல் ஒன்றில், "ஆங்கில, இலத்தீன் பதங்களைத் தமிழில் வரையறுத்து, ஒரு சொற்கோவையை நான் உருவாக்கப் போகிறேன். தமிழில் ஏற்கெனவே நல்ல மருத்துவப் பதங்கள் பலவும் வழக்கில் உள்ளன. தமிழறிஞர்கள் ஊடாக இன்னும் பல பதங்களை வடமொழியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே தமிழில் வழங்கிவரும் சொல்லின் ஒலியை அடியொற்றி மேலும் பல சொற்கள் புனையப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1877ல் தமது நிலைப்பாட்டை அவர் மேலும் தீவிரப்படுத்தினார்: "இச்சொற்கோவைகளில் ஒரு தீவிர மாற்றம் செய்யப்பட்டுள்ளது: கலைச்சொற்களின் தோற்றுவாய் என்ற வகையில் வடமொழிக்கு மேலாக ஆங்கிலத்துக்குக்கே இங்கு முதன்மை அளிக்கப்பட்டுள்ளது." அச்சொற்கோவைகள் பின்வருமாறு:

தாயும் சேயும் (மானிப்பாய், 1872)

காது (மானிப்பாய், 1877) 

கண் (மானிப்பாய், 1877)

பாதம் (மானிப்பாய், 1877)

கை (மானிப்பாய், 1877)

வாய் (மானிப்பாய், 1877)

தோல் (மானிப்பாய், 1877)

உடல் (மானிப்பாய், 1880)

பதியத்தம்பி, வைத்திலிங்கம் போன்ற மாணவர்களுடனும் மற்றும் பிற தோழர்களுடனும் ஒருங்கிணைந்து தமது பணியை மேற்கொண்ட மருத்துவர் கிறீன் "மருத்துவ விஞ்ஞான அகராதி" (1855), "அருஞ்சொல் அகராதி" (1875) ஆகியவற்றை வெளியிட்டு, மருத்துவ, விஞ்ஞான மொழிபெயர்ப்புகளுக்கு அடிகோலினார். அவரது ஆங்கிலம்-தமிழ் அகராதிகள், சொற்கோவைகள் என்பவற்றின் துணையுடன் தமிழ்ப்படுத்தப்பட்ட நூல்கள் சில:

The science and art of surgery (பதியத்தம்பி, யாழ்ப்பாணம், 1867)

Physician's vade-mecum (வில்லியம் பால், நாகர்கோயில், 1872)

Human anatomy (கிறீன், டேவிட் சாப்மன், யாழ்ப்பாணம், 1872)

Chemistry - Practical and theoretical (கிறீன், எஸ். சுவாமிநாதன், நாகர்கோயில்,

1875)

Pharmacopoeia of India (கிறீன், டேவிட் சாப்மன், யாழ்ப்பாணம், 1888)

1888ல் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை (1855-1897) புனைந்த 80 கலைச்சொற்களுடன் கூடிய "நூற்றொகை விளக்கம்" வெளிவந்தது.

1937 முதல் 1940 வரை சென்னை முதல்வராக விளங்கிய சி. ராஜகோபாலாச்சாரியார்இடைநிலைப் பாடசாலைகளில் தமிழ்மொழியைப் பாடமொழி ஆக்கினார். அதை எதிர்த்த சென்னை கல்விப் பணிப்பாளருக்கு (Randolph Statham என்ற ஆங்கிலேயருக்கு) ராஜாஜி ஆங்கிலத்தில் கொடுத்த பதிலடியின் தமிழாக்கம்:

"தென்னிந்திய மொழிகளில் மெய்யியல், அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதற்கு வேண்டிய அகராதிகள் வெளியிடப்படும்வரை, தகுந்த பாடநூல்கள் வெளிக்கொணரப்படும்வரை, அப்பாடங்களைக் கற்பிப்பது கைகூடாது போகலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்... ஏதோ ஒரு கட்டத்தில் நாங்கள் அதற்கான ஒரு முயற்சியைத் தொடங்கும்வரை,  அது எத்துணை தொந்தரவாய் இருந்தாலும் கூட, அது எத்துணை கசந்தாலும் கூட, இந்த இடர்ப்பாடு மறையப் போவதில்லை... நாங்கள் தமிழ்மொழியில் கற்பிக்கத் தொடங்கினாலொழிய தமிழில் பாடநூல்கள் தேவைப்படுகின்றன என்பதை எவரும் புரிந்துகொள்ளப் போவதில்லை... இப்போதைக்கு வெவ்வேறு பிராந்திய மொழிகளின் வளத்துக்கேற்ப ஆங்கிலச் சொற்களைக் கலைச்சொற்களாகக் கொள்வதில் தவறேதும் இல்லை... அறிவியற் கல்வியில் ஒருசில அந்நியச் சொற்களை நாங்கள் கையாள வேண்டியுள்ளது என்பதற்காக, அந்நிய மொழியே பாடமொழி ஆகவேண்டும் என்று கூறுவது தவறு. பிராந்திய மொழியில் அல்லது தாய்மொழியில் அறிவு புகட்டப்பட்டால், அதனால் விளையும் உடனடி நன்மை மிகவும் பெரிது. வெறுமனே ஒருசில அந்நிய சொற்களைப் பயன்படுத்துவதால், அந்த நன்மையை நாம் இழந்துவிடப் போவதில்லை. அதாவது பாடமொழி வேறு, (துறைமொழி வேறு)... இந்த ஒழுங்கினை நாங்கள் பின்பற்றினால், பிராந்திய மொழிகளில் அறிவியற் சொற்கள் தாமாகவே மேலோங்கும். அன்றாடம் போதிக்கும் ஆசிரியர்கள் அத்தகைய அறிவியற் சொற்களைத் தேடிப்பிடித்து நடைமுறைப்படுத்துவார்கள். இங்கிலாந்திலும், பிரான்சிலும் அறிவியற் கல்வி தொடங்கிய காலத்தில் இலத்தின் மொழியிலும், கிரேக்க மொழியிலுமா வகுப்புகள் நடத்தப்பட்டன?"     

1916ல் சி. ராஜகோபாலாச்சாரியார், வெங்கட சுப்பையர் இருவரும் சேர்ந்து "தமிழ் அறிவியற் சொற்சங்கத்தை" உருவாக்கினார்கள். 1923ல் சென்னை அரசாங்கம் "தாய்மொழி அறிவியற் சொற்குழு"வை அமைத்தது. 1930ல் "சட்டச் சொற்றொகுதி" ஒன்றை அது வெளியிட்டது. 1932ல் அது வெளியிட்ட சொற்றொகுதிகளின் துறைகள்: அரசியல், இயற்கை அறிவியல், இயற்பியல், உடற்றொழிலியல், கணிதம், குடியியல், சுகாதாரம், நிருவாகம், புவியியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, வேதியியல்.

1934ல் சென்னை மாநில தமிழ்ச் சங்கத்தால் அமைக்கப்பட்ட அறிவியற் சொற்குழு இயற்பியல், வேதியியல், கணிதவியல், இயற்கை அறிவியல், உடற்றொழிலியல், சுகாதாரவியல், புவியியல், வரலாறு, பொருளியல், நிருவாகம், அரசியல், குடியியல் துறைகளைச் சார்ந்த 10,000 கலைச்சொற்களைத் திரட்டியது. பெரிதும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்ட அத்திரட்டு 1936ம் ஆண்டு ரி.லஷ்மண பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.

1936ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்ச் சொல்லாக்க மாநாட்டில் விபுலாநந்த அடிகள், தேவநேயப் பாவாணர், எஸ். வையாபுரிப்பிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை, எஸ். வேலாயுதம்பிள்ளை உள்ளடங்கிய புலமையாளர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். அம்மாநாட்டில் மேற்படி 10,000 கலைச்சொற்கள் மீளவும் வரையறுக்கப்பட்டன. புதிய 10,000 "கலைச்சொற்கள்" 1938ம் ஆண்டு விபுலாநந்த அடிகளால் பதிப்பிக்கப்பட்டது.

1947ல் சென்னை அரசாங்கம் 7,800 புதிய கலைச்சொற்களையும், 1960ல் 6,250 தமிழ் ஆட்சிச் சொற்களையும், 1968ல்  ஆட்சித் துறைத் தமிழ் (கே. இராமலிங்கம்) நூலையும் வெளியிட்டது. 1958ல் என். டி. சுந்தரவடிவேலு ஆசிரியர் கல்லூரிகளுக்கான 5,000 கலைச்சொற்களை வெளியிட்டார். 

கல்லூரித் தமிழ்க் குழுத் தலைவரும், "கலைக்கதிர்" ஆசிரியருமான ஜி. டி. தாமோதரன்துறைவாரியான கலைச்சொல்லாக்கத்தில் இடைவிடாது ஈடுபட்ட பேரறிஞர். 1960ல் அவர் வெளியிட்ட "கலைச்சொல்லகராதி" பின்வரும் துறைகளை உள்ளடக்கியது: ஐரோப்பிய தத்துவ சாத்திரம், உளவியல், வானநூல், பொருளாதாரம், அரசியல் பொதுத்துறை-ஆட்சி இயல், வாணிகவியல், வரலாறுகள், உயிர் நூல், வேதிப் பொது அறிவு, புள்ளியியல். 1968ல் 3,600 பதங்கள் கொண்ட பெளதிக கலைச்சொல் அகராதியையும், 3,960 பதங்கள் கொண்ட வேதியியல் கலைச்சொல் அகராதியையும் அவர் வெளியிட்டா

1969ல் கிண்டி எந்திரவியல் கல்லூரி மாணவர்கள் "எந்திரவியல் கலைச்சொற்களையும்", 1971ல் அழகப்பா எந்திரவியல் கல்லூரி மாணவர்கள் 634 கலைச்சொற்களையும் வெளியிட்டார்கள்.

1985ல் ராதா செல்லப்பன் தமிழ்க் கலைச்சொற்களின் எண்ணிக்கை குறித்து முன்வைத்த புள்ளிவிவரம்:

 

துறை

பதங்கள்

இயற்பியல்

20,000

உளவியல்

  3,000

எந்திரவியல்

35,000

கணிதவியல்

14,000

கமத்தொழில்

  4,500

சட்டவியல்

  7,000

சமூகவியல்

11,000

தாவரவியல்

  9,000

புவியியல்

  6,000

மருத்துவம்

15,000

வணிகவியல்

  2,000

வரலாறு – பொருளியல் – நிருவாகம் - அரசியல்

10,000

விலங்கியல்

  4,000

வேதியியல்

  6,000

1955ம் ஆண்டு முதல் இலங்கை அரசகரும மொழித் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சட்ட வரைநர் திணைக்களம் மூன்றும் துறைவாரியாகப் பல்வேறு சொற்றொகுதிகளை வெளியிட்டு வந்துள்ளன. துறைஞர்களின் முறைசார் சொல்லாக்கங்களுடன் கூடிய மேற்படி சொற்றொகுதிகள் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான வெளியீடுகள் ஆகும்

No comments:

Post a Comment