சிவராம் நினைவேந்தல்
இசங்க சிங்க ஆராச்சி
“தராக்கி” எனும் புனைபெயர் கொண்ட தருமரத்தினம் சிவராம் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்துவிட்டன - 2005 ஏப்பிரில் 28ம் திகதி அவர் கொல்லப்பட்டார்.
இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பலவற்றுள் இது ஒன்று. இக்கொலையைப் புலனாய்ந்து, கொலையாளிகளைக் கைதுசெய்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவோம் என்பது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்று. தற்பொழுது தேர்ந்தெடுத்து, புலனாய்வு செய்யப்படும் மனித உரிமை மீறல்களுள் சிவராமின் கொலையும் ஒன்று என ஜனாதிபதி அனுர குமர திசநாயக்கா தெரிவித்துள்ளார்.
1959 ஆகஸ்ட் 11ம் திகதி, மட்டக்களப்பில், ஒரு மேல்மட்ட நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சிவராம், மட்டக்களப்பு புனித மிகாவேல் கல்லூரியில் துவக்கக் கல்வி பயின்றவர். பிறகு கொழும்பு அக்குவைனஸ் கல்லூரியில் கல்வி கற்றவர். 1982ல் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைமாணி பட்டக் கல்வி பயிலப் புகுந்தவர்.
பல்கலைக்கழகத்தின் உள்ளும் புறமும் தமிழருக்கு எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, தனது பட்டக் கல்வியைக் கைவிட்டு, அரசியலில் நாட்டம்கொண்டு, காந்திய இயக்கத்தில் அவர் இணைந்துகொண்டார். ஒடுக்கப்பட்ட தமிழர்-சமூகத்தைக் காத்து, கைதூக்கிவிடும் இலக்குடன் செயற்பட்ட இயக்கம் அது.
1983 வாக்கில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், காந்திய இயக்கத்தை அடக்கி ஒடுக்கத் துவங்கியது. காந்திய இயக்கத் தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். வெலிக்கடைச் சிறையில் நிகழ்ந்த படுகொலையில் அவர்களுள் பலர் கொல்லப்பட்டார்கள்.
அப்படுகொலையையும், தனது தோழர்களின் இழப்பையும் கண்டு அதிர்ச்சியடைந்த சிவராம், ஆயுதம் ஏந்தத் துணிந்து, தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பில் (PLOTE-ல்). இணைந்தார். அதன் அரசியற் பிரிவு, படைப்பிரிவு இரண்டிலும் விரைந்து முன்னிலை வகித்து, சிறந்து விளங்கினார்.
1987ல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, புளொட்டின் அரசியற் பிரிவாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (DPLF-ன்) பொதுச் செயலாளர் ஆனார். ஆயினும், கொஞ்சக் காலம் கழித்து, அதன் தலைவர் உமா மகேஸ்வரனுடன் கருத்துவேறுபாடு கொண்டு, அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார்.
அதன் பிறகு, ஊடகர் ரிச்சார்ட்-டி-சொய்சாவுடன் கொண்ட நட்பின் மூலமாக, ஊடகத்துறையினுள் புகுந்தார். டி-பி-எல்-எவ்-ன் பொதுச் செயலாளராக விளங்கிய காலத்தில் ஏற்பட்ட அந்த உறவின் ஊடாக, தி ஐலண்ட் செய்தியேட்டில் அவர் ஒரு சுயேச்சை ஊடகராக இணைய அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
கூரிய போரியல், அரசியல் ஆய்வாளராகிய சிவராமின் ஆய்வுக் கட்டுரைகள் தி ஐலண்ட், சண்டே டைமஸ், மிட்வீக் மிரர், டெயிலி மிரர், வீரகேசரி, தமிழ் டைம்ஸ் ஆகிய ஏடுகளில் வெளிவந்தன.
1997ல் அவர் தமிழ்நெற் இணைய இதழின் பதிப்பாளரானார். உள்நாட்டுப் போரின்பொழுது அவர் தலைமையில் தமிழரின் முக்கிய செய்திக்களமாக விளங்கிய தமிழ்நெற்றுக்கு விரைவிலேயே உலக அங்கீகாரம் கிடைத்தது.
2001ல் ஊடகர் ஜே. திஸ்ஸநாயக்த்துடன் சேர்ந்து நோர்த் ஈஸ்டேர்ன் ஹெரோல்ட் ஜேர்னல் ஏட்டை அவர் வெளியிடத் துவங்கினார். ஒருசில ஆண்டுகள் கழித்து, நோர்த் ஈஸ்டேர்ன் மந்லி மகஸினை அவர்கள் வெளியிட்டார்கள்.
2005 ஏப்பிரில் 28ம் திகதி ஊடகர் குசல் பெரேரா, தொழிற் சங்கவாளர் ரவி குமுதேஷ், சமூக வினைஞர் பிரசந்த ரத்நாயக்கா ஆகியோரை பம்பலப்பிட்டி மதுவகத்தில் அவர் சந்தித்தார். ஏறத்தாழ நள்ளிரவு வரை அவர்கள் அங்கேயே இருந்தார்கள். முதலில் குமுதேஷும், ரத்நாயக்காவும் விடைபெற்று வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.
சிவராமும், குசல் பெரெராவும் தெருவில் இறங்கியபொழுது, அவர்களுக்கு எதிரே வந்துநின்ற ஓர் ஊர்தியிலிருந்து வெளியே குதித்த ஒரு குழுவினர், சிவராமை பலவந்தமாக இழுத்து ஊர்தியில் ஏற்றி, விரைந்து சென்றார்கள். பம்பலப்பிடி காவல் நிலையத்துக்கு முன்னே நடந்த கடத்தல் அது. குசல் பெரெரா வீடுதிரும்பினார். தனது அலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அவர் பிற்பாடு தெரிவித்தார்.
சிவராம் கடத்தப்பட்டதைக் கேள்விப்பட்ட அனைவரும் அவரைக் காப்பாற்ற அரும்பாடு பட்டார்கள். எனினும், அவர்களது முயற்சிகள் பயனளிக்கவில்லை. சுட்டுக்கொல்லப்பட்ட சிவராமின் உடல் அடுத்தநாள், 29ம் திகதி காலை, நாடாளுமன்ற வளவுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. யாருமே அறியாத தேரபுத்தாபய பாலகயா எனும் அமைப்பு அவரது கொலைக்கு உரிமை கோரியது.
உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்குதலினால், சிவராமின் கொலை தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்கா ஒரு புலனாய்வை மேற்கொண்டார். புளொட்டைச் சேர்ந்த பீற்றர் எனப்படும் ஆறுமுகம் ஸ்கந்தராஜா சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தவரால் (CID-யினரால்) வெள்ளவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்ட பீற்றர், புளொட்டின் இன்றைய தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தனின் சாரதி. திருகோணமலையைச் சேர்ந்த பீற்றர் 1984ல் புளொட்டில் இணைந்து, செய்தித்தொடர்புப் பிரிவில் வேலைசெய்தார். இந்தியாவில் உமா மகேஸ்வரனின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற பிறகு, அவர் திரும்பவும் செய்தித்திடர்புப் பிரிவில் அமர்த்தப்பட்டார்.
இந்திய அமைதி காப்புப் படைஇலங்கை வந்தபிறகு, புளொட்டின் வன்னி, மன்னார் முகாங்களில் அவர் நிலைகொண்டிருந்தார். மாலைதீவில் தோல்வியடைந்த சதியில் பங்குபற்றிய அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலை பெற்றபிறகு, அவர் சித்தார்த்தனின் சாரதி ஆனார்.
சிவராமின் அலைபேசி இலக்க அடையாளத் தகடு (SIM card) சித்தார்த்தனின் காரில், கைதுசெய்யப்பட்ட பீற்றரின் வசம் இருந்தது. ராஜு என்பவர் அதை தனக்குத் தந்ததாக பீற்றர் சி.ஐ.டி.யிடம் தெரிவித்தார்.
சிவராமைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட அந்தக் கார் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பதிவிலக்கம் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் முகவரிக்கு இட்டுச்சென்றது.
ஆயினும், சிவராமைக் கடத்துவதற்கு வேறோர் ஊர்தி பயன்படுத்தப்பட்டதாகச் சாட்சிகள் தெரிவித்தார்கள். அப்புறம் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆதலால் புலனாய்வு பல ஆண்டுகளாக முடங்கிப் போயுள்ளது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா-கன்னை பிரிந்து சென்ற பிறகு கருணாவுக்கு சிவராம் எழுதிய பகிரங்க மடலானது, தமிழ் ஈழப் போராட்ட வரலாற்றில், மிகமுக்கியமான வெளியீடுகளுள் ஒன்று எனக் கருதப்படுகின்றது. கருணாவின் ஓர் இலக்காக சிவராம் விளங்கியிருக்கலாம் என ஈழம் செய்தியேட்டின் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருதுகின்றார்.
சிவராம் கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் கழித்து அவரது பிள்ளைகள் வைஷ்ணவி, வைதேகி, அன்றூ மூவரும் எழுதிய கட்டுரை ஒன்றில், தமது தந்தைக்கு மட்டுமல்ல, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவருக்கும் நீதி கோரினார்கள்.
“போரில் இறந்தோர் அனைவரையும், குறிப்பாக முள்ளிவாய்க்காலில், ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரையும் நினைவுகூர்வது அத்தியாவசியம் என்று நாங்கள் கருதுகின்றோம். முள்ளிவாய்க்கால் படுகொலையின் பொழுது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்பாக்குவதே இக்காலகட்டத்தில் எங்கள் தந்தைக்கு நீதி வழங்குவதாய் அமையும். தமது குடும்பத்தவர்களை இழந்த தமிழருக்கு, போரின் இறுதியில் படையினரிடம் சரணடைந்த பிறகு இன்னமும் காணாமல் போயிருப்பவர்களுக்கு நீதியும் வேண்டும்; அவர்களுக்கு நேர்ந்த இழப்புகளுக்கு பொறுப்புக்கூறவும் வேண்டும். இன்னமும் இடம்பெயர்ந்து வசிப்போருக்கும், வடக்கு-கிழக்கில் அரச ஒடுக்குமுறைக்கு உட்பட்டு வாழ்வோருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்” என்று தங்கள் கட்டுரையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
Ishanka Singha Arachchi, Sivaram: A Reflection 20 Years after his Murder, Groundviews, 2025-05-04,
translated by Mani Velupillai, 2025-05-09